Wednesday, January 06, 2010

நன்றியுடன்


நற்றமிழ் தன்னை நானறிந் துய்யவே

கற்றிடச் செய்தவள்
ஈறாறு வயதில்
தேனாம் தமிழை
நாடி நான்படிக்க
பாட புத்தகத் துடனே
'பொன்னியின் செல்வனை'
என்னிடம் தந்தவள்
அன்புடை எந்தாய்....
என்றும் நன்றியோ(டு) என்மனம் நினைப்பது
அன்றென் வகுப்பில்
அருந்தமிழ் அளித்தென் ஆசைத் தீக்கு
நறுநெய் யிட்டநல்லா சிரியர் சிலர்
இல்லாயின் எந்தீ
சொல்லாம் எப்படி?...

வாழ்க்கைத் துணையாய் வந்தவன் தானுமென்
வாசிப்புத் துணையாய் நின்றான்.
நேசிக்கும் தமிழை
நேராய் நானுனர மேற்படிப்பு
படித்திடச் செய்தான்
படிப்படியாய் உயர்ந்திட எனக்கே
பக்கபல மாயிருந் தவர்பலர்
சக்கரையாய் இனிக்கும் அவர்நினைவு...

இங்கணம் இந்தமிழை
இயன்றவரைப் படித்திருக்க, தமிழ்பற்றால்
தாமறித் தமிழைநாம றியவலை தன்னில்
யாப்பிலக் கணங்கற் பித்தார் நன்றாய்
பாப்புனைய வல்லார்..
பொய்யிலாப் புகழுடை
அய்யன் வள்ளுவன்தன்
சொல்லாம் குறளினைக்
கல்லில் எழுத்தாய்
கருத்தில் இருத்தியோன்..
காலம் அழிக்கா கவிபுனைத் திறனை
அருந்தமிழ் தன்னில் எனக்களித் திட்ட
திரு.அகரம் அமுதா என்மனதில்
சிகரமென உயர்ந்தே நின்றார்..

சிறப்பாய் தனித்தமிழ்
பிறக்கும் இவரிடம், இன்தமிழில்
அறத்தோடு அழகாய் கருத்தைச் சொல்லும்
திறத்தான் திரு.தமிழ நம்பிநல்
மனத்தால் நற்றமிழை
எனக்களித்தார் நன்றியோடு
அவரைப் போற்றிப் பணிவேன்..
இவர்களின் துணையெனக் கிங்கே
அவரைக் கொடிக்கோர் கொம்பினைப் போன்றதே!...

3 comments:

  1. என்றும் நன்றியோ(டு) என்மனம் நினைப்பது
    அன்றென் வகுப்பில்
    அருந்தமிழ் அளித்தென் ஆசைத் தீக்கு
    நறுநெய் யிட்டநல்லா சிரியர் சிலர்
    இல்லாயின் எந்தீ
    சொல்லாம் எப்படி?...]]

    படிப்படியாய் உயர்ந்திட எனக்கே
    பக்கபல மாயிருந் தவர்பலர்]]

    நல்ல நன்றி - நானும் சொல்லிக்கிறேன்

    ReplyDelete
  2. //வாழ்க்கைத் துணையாய் வந்தவன் தானுமென்
    வாசிப்புத் துணையாய் நின்றான்.
    நேசிக்கும் தமிழை
    நேராய் நானுனர மேற்படிப்பு
    படித்திடச் செய்தான்//

    முத்தான முதல் நன்றிக்குரியவர் உங்களாவர்.

    ReplyDelete
  3. எனக்கு என்ன எழுதுவதென்றே தோன்றவில்லை. தாங்கள் எங்களுக்கு மாணவியாக, தோழியாகக் கிடைத்தமைக்குப் பெரும்பேறு பெற்றுள்ளோம். நன்றிகள்.

    ReplyDelete