பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.
Saturday, December 22, 2018
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..
பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.
Thursday, November 22, 2018
பொய்த்துப் போன மழை
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….
வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…
வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...
மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…
வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ
மழையே!!!!
லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏனிங்கே நீவந்தாய்…
எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?
“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..
அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….
நாங்கள் மட்டும் மாறமாட்டோம்
Tuesday, November 20, 2018
மரம்
படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?
மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்
மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
இந்த குணம்...
இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....
மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..
உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..
தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..
மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...
இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...
உயரம்
மரத்தின்
கம்பீரம்...
மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....
மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....
மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..
மனிதன்
உலகுக்கு
அச்சம்...
மரமோ
உலகின்
ஆச்சரியம்....
படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....
Sunday, November 11, 2018
Saturday, October 27, 2018
Sunday, August 19, 2018
Saturday, August 18, 2018
Sunday, August 12, 2018
வாழ்த்து
புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் பூத்த பூக்களைப்போல்
மலரும் நாட்கள் மகிழ்வோடு
வாசம் பரப்பும் மனத்தோடு..
அலையும் கடலின் ஆழத்தில்
அமைதி தங்கி இருப்பதுபோல்
நிலையாய் தமிழும் இனிமைகளும்
நெஞ்சில் நிறைந்து நலம்வாழ்க!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
உமா...
அன்பு மகனுக்கு..
சிட்டுக் குருவியுன்
பட்டுச் சிறகை
விரித்தே பறக்க
வானம் நாங்கள்…
புத்தம் புதிய
பூவாய் நீ
வாசம் பரப்பும்
காற்றாய் நாங்கள்…
வண்ணக் கலவை
ஓவியம் நீ
வரைந்து மகிழ்ந்த
ஓவியன் நாங்கள்…
சிதறும் கல்லில்
சிற்பம் நீ
செதுக்கித் தந்த
சிற்றுளி நாங்கள்…
வண்ணத் தமிழின்
விளக்கம் நீ
விரித்தே எழுத
வார்த்தை நாங்கள்…
எந்தன் கவிதைப்
பொருளும் நீ
எழுத தோன்றும்
இன்பம் நீ…
எங்கள் வாழ்வின்
இயக்கம் நீ
எம்மைப் படைத்த
இறைவன் நீ…
என்றும் வாழ்வில்
தமிழ் போலே
உயர்வே உயர்வே
உயர்வே காண்….
இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மா, அப்பா...
Sunday, July 15, 2018
சங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து
post.htmlhttps://sangailakkiyamsuvaippom.blogspot.com/2018/07/blog-post.html
Monday, June 18, 2018
Monday, May 07, 2018
சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்
சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.... எனது இன்னொரு தளத்தில்..
Saturday, December 30, 2017
புத்தாண்டே வருக...
வாடையில் போர்வையும
வேருக்கு நீரையும்- மக்கள்
வியர்வைக்கு பலனையும்
இன்பத்தில் நிறைவையும்- வாட்டும்
துன்பத்தில் துணிவையும்
இளமைக்கு அறிவையும்- துவண்ட
முதுமைக்கு துணையையும்
உண்மைக்கு வழியையும்- கெட்ட
பொய்மைக்கு இருளையும்
ஆணுக்கு பெருமையும்- நிகர்
பெண்ணுக்கு உயர்வையும்
தோளுக்கு வலிமையும்- நேர்மை
வாளுக்கு வெற்றியும்
அன்பையும் வழங்க வா புத்தாண்டே
அமைதியை நிரைத்து வா...
மலர்க புத்தாண்டே...
நெஞ்சுரம் கூட்டி
அல்லவை எதிர்க்கும்
ஆற்றலும் தந்து
நானிலம் வாழ
இல்லார், கல்லார்
இல்லா ராக
எதிலும் இல்லா
மாற்றமும் தந்தே
மலர்க புத்தாண்டே...
Wednesday, October 18, 2017
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இன்றைக்கும் என்றைக்கும்
இல்லத்திலும் உள்ளத்திலும்
உற்சாகம் கரைபுரள
இன்பங்கள் நிறைந்திருக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உமா
Monday, August 14, 2017
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...
Wednesday, July 26, 2017
நதி பின்னால் திரும்பாது
'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...
கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...
சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...
விழுந்தது
முளைக்கும்
விதையானால்....
வெடித்தது
மலரும்
அரும்பானால்...
அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....
அறிவாய்....
கடந்தது
காலம்
என்றானால்.....
வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......
Thursday, March 16, 2017
உலக மகளிர் தினம்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...
பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....
அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....
வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...
உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...
பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...
உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...
மார்ச் எட்டு
மகளிர் தினமானது....
சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்
மகளிர் தினம்...
இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...
இன்றோ..
ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....
வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...
ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...
பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...
இதுவா இலக்கு...
பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...
நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....
வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...
வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...
சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...
பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....
ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..
ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..
போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...
ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....





