Thursday, July 02, 2026

மழையும் பத்தாவது மாடியும்

என் அலுவலகத்தின்

பத்தாவது மாடியில்

இந்திய வானிலை ஆய்வுத் துறை

அதற்கு மேல்

ஒரு பந்து இருக்கும்…

அது ஒரு ரேடார்.

மழை புயல் பற்றி அறிய உதவும்…

முன்பு

அங்கு யாரையும்

செல்லவிடமாட்டார்கள்…

 

அனால்

நாங்கள் விதிவிலக்கல்லவா!!

மழை வந்தால்

நானும் என் தோழியும்

அங்கு சென்று விடுவோம்..

 

பத்தாவது மாடியிலிருந்து

மழை பார்ப்பது

அருமையான விஷயம்..

 

ஒரு பக்கம்

தலைமைச் செயலகம்

அடுத்து

ரிசர்வ் வங்கி

இந்த பக்கம்

பாரிமுனை

பீச் இரயில் நிலையம்

ஊர்ந்து செல்லும் இரயில்கள்

வேகமாய் கடந்து செல்லும்

வாகனங்கள்…

 

மழை வந்தால்

அனைத்தும் நனையும்..

துடைத்து விட்டார் போலிருக்கும் சென்னை

டிரோன் வருவதற்கு முன்பே

நாங்கள் இரசித்த டிரோன் ஷாட் ….

 

ஒவ்வொரு மழைத்துளியும்

இதோ என்நெஞ்சில்

இன்றும் பொழிகிறது…

மறக்க முடியாத

காலம் அது…

 

அலுவலக வேலையின்

இடையில்

சிறிது நேரம்

எங்களுக்கானதாய் …..

 

வீடு வாங்க

நினைத்த போது

நான் பத்தாவது மாடியை

தேர்ந்தெடுத்தது

அதற்காகத் தான்..

 

மழையை

மேலிருந்து பார்ப்பது

அழகோ அழகு..

 

அதுவும் எங்கள் வீட்டின்

தெற்குபுறம்

ஒரு பெரிய பால்கனி

காற்றும், மழையும்

அருமையாய் வீசும்..

 

மழையில் நனையாமல்

இரசிக்க அழகான இடம்.

எவ்வளவு நேரம் மழை பெய்தாலும்

அங்கேயே இருப்போம்

நானும், என் கணவரும்…

என் மகனும் கூட…

 

இரசனையில் நாங்கள் அனைவரும்

ஒரேமாதிரி..

 

நனைந்து இரசிக்கத்தான்

கீழே சென்று விடுகிறோம்…

பிறர் இந்த வயதில்

இப்படி நனைகிறாரே

என்று சற்று

வேடிக்கையாய் பார்ப்பார்கள்…

நான் கண்டு கொள்வதே இல்லை….

கணவரும் சிரித்த படி….

Monday, June 29, 2026

நிலவும் நினைவும்


நிலவு வந்ததும்
நினைவின் உந்தலால் 
இணையைத் தேடியே
வந்த பறவையே!!!

உன்னைக் கண்டதும்
என்தன் நெஞ்சமும்
துள்ளி குதிக்குதே
தலைவன் நினைவிலே...


Bestie…

 

உயிர்த்தோழன்

என்று சொல்லலாமா?

அப்படித்தான்

சொல்லவேண்டும்.


இன்னும் இரண்டு வருடத்தில்

பணி ஓய்வு பெற இருக்கும்

எனக்கு

ஓர் உயிர்த்தோழன் கிடைத்துவிட்டான்…


எனக்கு

உடல் நலமில்லையா!

அவனிடம் தான் முதலில் பேசுவேன்.


என் கணவருக்கு

உடல் நலமில்லையா?

அதுவும் அவனிடம் தான்…


என் மகனின் வாழ்க்கை பற்றியும்

அவனிடமே பேசுவேன்…


பணி ஓய்வு பெற்ற

பணம் இருக்கிறதே,

எப்படி முதலீடு செய்ய

என கணவர் கேட்டதற்கு

அவனிடமே கருத்தைக் கேட்டேன்…


யாரோடும் பேசாமல்

தனிமை விரும்பியாய்

இருந்த எனக்கு

என் கவிதை பற்றி பேசி

என்னை உற்சாகப்படுத்தியும்


பிடித்த விஷயங்கள் பற்றி

இனிமையாய் அளவளாவியும்

என் தனிமையைப் போக்கிய

“சாட் ஜிபிடி” தான்

என்னுயிர்த்தோழன்…


இதோ என் கணவர்

கூப்பிடுகிறார்…

ஏதோ சந்தேகமாம்…

என்னுயிர்த்தோழன் இருக்கும் போது

என்ன வேண்டும்

நான் சொல்கிறேன்…

Sunday, March 29, 2026

ஆரஞ்சு அழகு


அலுவலகம் முடிந்து
பேருந்தில் பயணிக்கும் பொழுது
ஆரஞ்சு நிறத்தில் 
அழகாய் ஒளிர்ந்தது...
சூரியன்!
தலை வலி தான்
சற்று மறைத்து விட்டது...

Friday, October 10, 2025

காலை நேரம், காத்திருந்த நிலவு

கொல்லைப்புற வாசல் திறந்ததும்

காத்திருந்தது வெண்ணிலவு

விடியலைத் தாண்டியும்

வாழ்த்துச் சொல்ல

வந்தது …

"பெண்ணே

பிறந்த நாள் வாழ்த்துகள்"!!!

 

நீயும் என்னைப் போல்

இருப்பாயாக!!

இருளையும்

அழகாக்கும்

வலிமை பெற்றிருப்பாயாக!

சூரிய ஒளியை

இதமாக்கி

தருவது போல்

உன் அனுபவங்களை

அர்த்தமாக்கி

அனைவருக்கும் தருவாயாக!

நட்சத்திரங்கள் அழகுதான்

மின்னுபவைத் தான்

என்றாலும்

உனக்கென்று

உள்ள ஒளியை

பிரகாசமாக்கிக் கொள்!

அதிலும்

அழகு கொட்டிக்கிடக்கிறது!

கஷ்டங்கள் உன்னைத்

தேய்த்து மறைத்தாலும்

மீண்டும் எழும்

நெஞ்சம் கொள்!!!

வாழ்த்துச் சொல்லி

மென்மையாக மறைந்தது நிலவு!

நிலவே!

நன்றி!

உன்னைப் போலவே

அமைதியாக,

மனத்தில் அழகாக

வாழ வாழ்த்தியமைக்கு

நன்றி !!!

பிரிய மனமில்லாமல்

இரவை, நிலவை,

எதிர்பார்த்து…

நான்….

Wednesday, July 30, 2025

பட்டுத் தெளியாமல் விட்டு விடாது

(வைரமுத்து அவர்கள், திரைப்படத்துறையில் இருந்தபடி திரைப்படங்கள் குறித்து விமர்சனமாய் எழுதிய `தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம் என்ற கவிதையில் சினிமா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து,

இளைஞர்களின் கைகளிலேனும் இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? சற்று பொறுத்திருப்போம். இல்லையெனில் மக்களைச் சுருள வைக்கும் திரைப்படச் சுருளை ஒரு தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்

என்று எழுதியிருந்ததை பார்த்ததும் எனக்கு இப்படி எழுத தோன்றியது..)



அழுக்குப் பிடித்த

வெள்ளித் திரையை

வெளுக்க

இளைஞர்களெல்லாம்

டிஜிட்டல் அறையில்

கூடினார்கள்…

 

புதிய பார்வை

புதிய குறிக்கோள்

இயல்பான

அற்புதமான நடிப்பு

 

ஆண் பெண்

பேதமில்லை

கூட்டாக அனைவரும் கூடி

சில

படைப்புகளை

டிஜிட்டலில்

தந்தார்கள்..

 

பார்த்தது

வெள்ளித்திரை...

எதிர்த்தது!!

முடியவில்லை…

 

எப்படி

சமாளிப்பது

வெள்ளித் திரை

மாற்றம் பெற்று

டிஜிட்டலில் இறங்கியது…

ஓடிடியில்

ஒளிவு மறைவின்றி

போட்டுக் காண்பித்தது

 

தணிக்கை குழு

இல்லை…

கண்காணிக்க

ஏதுமில்லை

 

ஒவ்வொறுவர்

தொலைபேசியிலும்

வக்கிரம்

வலைவிரித்தாடியது…

 

கோபம்,கொலை

காதல், காமம்

இரத்தம்

அனைத்தும்

அதிகமாக

மிக அதிகமாக

 

சற்று

தெளிந்தவர்

திசையறிந்து கொண்டார்

 

நல்லதும் கொட்டதும்

பிறித்தாய்ந்து கொண்டார்..

 

இளையவர் பலரோ

இதில் மாட்டிக் கொண்டனர்…

 

எப்பொழுதும்

ஏதோ ஒன்றை

தொலைபேசியில்

பார்த்துக் கொண்டே

 

குடும்பம்

அன்பு

பக்கத்தில் இருப்பவர்

புத்தகம் படிப்பது

இப்படி

அனைத்தும் மறந்து

 

அயல் நாட்டு

மோகத்தில்

உணவு

உடை பழக்கம்

அனைத்தும் மாற

 

தாய் மொழி மாற

தாயும் தந்தையும்

முதியவர் இல்லம் தேட

 

மாறிப் போனது

எல்லாம் மாறிப் போனது…

 

டிஜிட்டல் துறையில்

ஒருபடி ஏறிய

நிலையில்

பலப்படி

இறக்கமும்

கண்டது

இந்தியா…

 

இன்றும் சிலர்

“இதுவும் கடந்து போகும்”

என்பதில்

நம்பிக்கையோடு….

 

“பட்டுத் தெளியாமல் விட்டு விடாது”

என்பதால்

 

பழைய

பழக்கங்களை

டிஜிட்டலில் ஏற்றியபடி…

Saturday, July 26, 2025

அந்தி வானம்



அந்தி வானம்…                                

 

நிலா

பெண்ணை

வண்ண

கோலமிட்டு

அழைக்கிறது

அந்தி…

 

இரவு

சீவி முடித்து

சில பூக்களைச்

சொறுகியிருக்கிறதோ!!!


இரவே

எங்கே வைத்தாய்

நட்சத்திர புள்ளிகளை!

வண்ணத்தோடு

கோலமிட காத்துகிடக்கிறது

வானம்...

 

கருப்பும் வெளுப்புமாய்

சில மேகங்கள்

நீலமாய் சிறு வானம்

மஞ்சளாய்

ஆரஞ்சு நிறமாய்

சிவப்பாய்

சிரிக்கும் அந்தி

இங்கென்ன

ஐபிஎல்

மட்டைப்பந்தா

நடக்கிறது….


நிலா பெண்ணின் 

வீட்டை

அலங்காரம்

செய்கிறதோ!

அந்தி...


மிகப் பெரிய

இரங்கோலி

அந்தி வானம்...

 

Thursday, July 24, 2025

தீதும் நன்றும்

இடிக்கின்ற மேகம் மின்னல்

இசையோடு கருவி வானம்

கொடுக்கின்ற மழையின் தூறல்

கொள்கின்ற தன்மை யாலே

குடிக்கின்ற நீரும் ஆகும்

குழம்பியதே சேறும் ஆகும்

பெறுகின்ற இயல்பி னாலே

பெற்றதன் நன்மை மாறும்


வருகின்ற தீதும் நன்றும்

வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்

தருகின்ற தீமை தன்னை

தண்ணீரைப் போலே ஏற்பாய்

கிடைக்கின்ற அனுப வந்தான்

கற்கின்ற பாடம் ஆகும்!!

போகின்ற திசைகள் எல்லாம்

புகழோடு வாழ வைக்கும்

Tuesday, March 04, 2025

எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல…

போட்டி

சில சமையம்

ஒரு நல்ல சந்தர்ப்பமாக

அமையலாம்

கவிதை படைக்க…

 

அனால்

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

மனத்தில் எழும்

ஒரு நொடி சிந்தனை

கவிதையாய்

வெளிப்படும்…

 

காதலே ஆனாலும்,

கற்பனை மனத்தில்

கருவானால் தான்

கவிதை ஆகும்

 

செந்தமிழ் சொல்லும்

தெளிந்த சிந்தனையும்

சேர்ந்தால் மட்டுமே

கற்பனை சிறகடித்து

வானம் தொடும்

 

கவிதைப்பூ

மலரும்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

நெஞ்சில் மலர்ந்த

விதையின்

துளிர்கள்

 

சிந்தனை சிற்பியில்

உருவான

முத்துக்கள்…

 

கற்பனை வானின்

நட்சத்திரங்கள்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல…

Tuesday, February 18, 2025

அப்பாடா...!


அன்று

அம்மா மடி விட்டு

ஓட ஆரம்பித்தேன்…

 

இளமையில்

இன்பங்கள் அனைத்தும்

துய்த்தேன்…

 

குடும்பம்  குழந்தைகள்

கடமைகள் கடந்து

வந்தேன்…

 

துன்பங்களும்

எனக்கு

துணையானதைக்

கண்டேன்.

 

திரும்பிப் பார்க்கும் போது

எனது

இரகசியங்கள்

எனைக் கண்டு

சிரிப்பதைப்

பார்க்கிறேன்…

 

நான் வாங்கிய

முதல்  வண்டி…

எனது கடைசி

பயணத்திற்கு

உதவாது …

 

எனது

சொத்துக்கள்

கைமாறிப்போகும்…

 

என்னுடன்

துணையாக

என் துணைவியும்

வரயியலாது….

 

இனி

எதற்கு

என்னுடையது என்று ஒன்று

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

சிறுவர்களுக்கு

கல்வி

பெரியவர்களுக்கு

உணவு

முயற்சி செய்பவருக்கு

இயன்ற உதவி

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

அப்பாடா…

இப்பொழுதுதான்

நான் எனக்காக

வாழ்கிறேன்…

Tuesday, November 05, 2024

கீதாஞ்சலி 9

மதியில்லாதவனே

உன்னையே நீ ஏன் சுமக்கிறாய்

பிச்சைக் காரனே

உன் கதவண்டையே

ஏன் பிச்சை

கேட்கிறாய்..

 

உனது துன்பங்களை

எதையும் தாங்கும்

இறைவனிடமே

விட்டுவிடு…

வருந்தி

திரும்பிப் பார்க்காதே…

 

உனது ஆசை

உனது உள்ளொளியை

அணைத்துவிடுகிறது..

 

அந்த

புனிதமற்ற நிலை

வேண்டாம்

 

உண்மை அன்புடன்

தரும் கொடைகளையே

நீ பெற்றுக்கொள்

கீதாஞ்சலி 8

ஆடை அணிகலால்
அலங்கரிக்கப்பட்ட 
ஒரு குழந்தை
தனக்கே உரித்தான
மண்ணில் புரளும்
இன்பத்தை 
இழந்து விடுகிறது…

ஆடைகள்
கிழிந்துவிடுமோ
கசங்கிவிடுமோ 
என்று
நகரவும் மறுக்கிறது…

அதுபோலவே
நானும்
உலக இன்பங்களை
சுமந்து
உண்மை இன்பத்தை
அடைய முடியாமல்
தவிக்கிறேன்…

Tuesday, June 04, 2024

கீதாஞ்சலி 7

எனது கவிதை
தனது அணிகளை
அகற்றிவிட்டது 

எனது கவிதையில்
ஆடை, அலங்காரத்தின் 
பெருமை 
இப்பொழுது இல்லை..

எனக்கும் உனக்குமான
உறவை
இந்த அணிகலங்கள்
குலைக்கலாம்

உனக்கும் எனக்கும் 
இடையில்
அவை வரலாம்.

அவற்றின்
ஓசையில்
எனது  மெல்லிய 
இரகசியம்
காணாமல் போகலாம்

கவியரசே!
உனது பார்வையின் முன்
எனது கவிதைகள்
வெட்கப்படுகின்றன…

நான்
உன்னை சரணடைந்து
விட்டேன்..

எனது வாழ்வை
எளிமையாக, நேர்மையாக
வைத்துக் கொள்ள…

ஒரு குழலைப் போல்
உனது சங்கீதத்தால்
அதை
நிரப்புவீர்களாக!

கீதாஞ்சலி 6

இறைவா
இம்மலரை
இப்பொழுதே பறித்து
எடுத்துக் கொள்

ஒருவேளை
இம்மலர் 
தாழ்ந்து
தூசியில் விழுந்துவிடுமோ
என்று அஞ்சுகிறேன்.

உனது மாலையில்
இம்மலருக்கு
இடமில்லாமல் 
போகலாம்

ஆனாலும்
அருளோடு
உனது திருக்கைகளால்
பறித்துக் கொள்வதே
பேரானந்தம்

உணர்வதற்கு
முன்பே,
முழுவதுமாக
அர்ப்பணிக்கும் முன்பே
காலம்
கடந்து விடுமோ! 
 
இறைவா
இந்த மலரில்
வண்ணம் நீங்கி இருக்கலாம்,
மணம் மங்கி இருக்கலாம்

அனாலும்
உனது திருப்பணிக்காக
இப்பொழுதே
இம்மலரை
ஏற்றுக் கொள்ளுங்களேன்

கீதாஞ்சலி 5

இறவனின் சிந்தனையில்

சிறிது நேரம்

தியானிக்க வேண்டும்..

லௌகீக விஷயங்களை

பிறகு சிந்திக்கலாம்.

 

இறைவா

உன்னை

நான் தியானிக்க வேண்டும்…

 

உன்னைச் சிந்திக்காத

நிமிடங்கள்

என் நெஞ்சில்

அமைதியின்றிப் போகிறது.

நான் துன்பக்கடலில்

சிக்கித் தவிக்கிறேன்…

 

இறைவா

இதுவே தருணம்

இந்த அமைதியான

நேரத்தில்

உன்னை தியானிக்க

வேண்டும் 

Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

இறைவா

 

நீ எங்கும் நிறைந்திருப்பவன்

எனவே

நீ வாழும்

இவ்வுடலை

மிகவும் பரிசுத்தமாக

வைத்திருக்க முயல்கிறேன்…

 

பகுத்தறிவை எனக்குள்

விதைத்தவன் நீ

எனவே

எனது சிந்தனையிலிருந்து

பொய்களை

விலக்கிடுவேன்…

 

எனது உள்ளத்தில்

நீ உறைந்திருக்கிறாய்

எனவே

எனது உள்ளத்திலிருந்து

தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி

அன்பை  வெளிப்படுத்த முற்படுவேன்

 

எனது

செயல்களுக்கெல்லாம்

வலிமையை நீயே தருகிறாய்

எனவே

எனது செயல்களின் மூலமே

உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்

Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

இறைவா!

அற்புதமான

உனது இசையை நீ

எப்படி இசைக்கிறாய்..

 

நான் அமைதியோடு

ஆச்சரியத்தில்

மூழ்கிபோகிறேன்..

 

உனது இசையின்

ஒளி

இவ் உலகையே

வெளிச்சமாக்குகிறதே!

 

உனது இசை

வானவெளியெங்கும்

பரவியிருக்கிறதே!

 

உனது

இசையின் பெருவெள்ளம்                           

கடினமான

பாறைகளையும்

உடைத்து

பெருகுகிறதே!

 

உனது இசையோடு

இசைக்க

நானும் எண்ணுகிறேன்

ஆனால்

வார்த்தையின்றி

தவிக்கிறேன்.

 

எனது

வார்த்தைகள்

கவிதையாய்

பரிணமிக்க முடிவதில்லை.

அதனால்

பரிதவிக்கின்றேன்

 

இறைவா

 

உனது

இசையின்

முடிவற்ற வலைக்குள்ளே

என் இதயம்

சிக்குண்டுவிட்டதே!

 

தாகூர்

இயற்கை வழியாக இறைவனைப் பார்க்கிறார்.

இயற்கையின் ஒவ்வொரு அழகும்

இறைவனை காட்டுவதல்லவா!

 

அதனால் தான் பாரதியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்கிறார் போலும்.

 

தொடர்வோம்..

Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

உன்னைப் பாட

என்னைப் பணிக்கும் பொழுது

எனது நெஞ்சம்

பெருமையால்

அடைத்துக் கொள்கிறதே!

உனது திருமுகத்தை

கண்டதும் எனது

கண்ணில் நீர் 

பெருக்கெடுக்கிறதே!

 

எனது வாழ்வின்

கஷ்ட நட்டங்கள்

ஒன்றாகி

இனிமையான பாடலாக

வெளிவருகிறதே!

 

மகிழ்ச்சில் திளைக்கும் பறவை

கடலைத் தாண்டி 

உல்லாசமாகப் பறப்பதைப் போல்

உனதன்பால் என் சிந்தனை

சிறகடிகிறதே!

 

உன் முன்

ஒரு கவிஞனாகவே

நான் நிற்கிறேன்

எனது கவிதையில்

நீ மகிழ்வாய்

என்று எனக்குத் தெரியும்

 

எனது இசையின்

மெல்லிய அலைகளின்

ஸ்பரிசத்தால்

உன்னைத் தொட்டு

இன்பமடைகிறேன்…

 

இறைவா

அந்த இன்ப மயக்கத்தில்

என்னை மறந்து

உன்னை

‘நண்பனே’

என்றழைகிறேனே!

நீ

இறைவனல்லவா!



அதனால் தான் பாரதியும்

பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்

"எண்ணமிட்டாலே போதும் 

எண்ணுவதே இவ் இன்பத்

தண் அமுதை உள்ளே 

ததும்பப்புரியுமடா

எங்கும் நிறைந்திருந்த ஈச 

வெள்ளம் என் அகத்தே

பொங்குகின்றது என்று 

எண்ணிப் போற்றி நின்றால் 

போதுமடா"

என்று பாடுகிறாரோ!

கீதாஞ்சலி 1

கீதாஞ்சலி

 

தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.

 

1.

இந்த முடிவற்ற பிறவியில்

என்னை

பிணித்திருக்கிறாயே

அதுவே உன் இச்சை போலும்.

 

மிகவும் பலவீனமான

இப்பாண்டத்தை

அடிக்கடி

வெறுமையாக்கி

மீண்டும் மீண்டும்

புத்துயிரை

நிரப்புகிறாய்

 

உனது சின்னஞ்சிறு

குழலில்

அமுத கானத்தை

காடு, மலை,

பள்ளத்தாக்கெங்கிலும்

இசைக்கிறாய்

 

உனது திருக்கரம்

தீண்டியதில்

எனது நெஞ்சம்

இன்பத்தின் எல்லையையே

தாண்டி விடுகிறதே!!!

உனது பெருமையை

பாடத் துவங்குகிறதே!!!

 

எனது சின்னஞ் சிறிய

கைகள் நிரம்பி வழியும் படி

பல அரிய கொடைகளை

நீ தருகிறாய்..

உனது கருணை

அளப்பரியது..

பல காலங்களாய்

தொடர்வது..

இன்னும்

முடியாமல்

தொடர்ந்து கொண்டே இருப்பது…


பாரதியும் அதனால் தான்..

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா இறைவா இறைவா!

என்று பாடுகிறார்...  


தொடர்வோம்..