Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

சீராய் கல்வி தந்திடனும்
   சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
   சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
  குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
  படியும் நெஞ்சில் நிலையாக...

விளையாட் டோடு விஞ்ஞானம்
  விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
  கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
   ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
  விளையும் நாளை வல்லரசு.

மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

Monday, September 19, 2011

சமச்சீர் கல்வி

சங்கப் பலகையின் சத்தியம் சாய்ந்திட
இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
கங்குலாம் இச்'சமச்சீர்' கல்வி!

Thursday, September 08, 2011

இசைப் பா

இயற்சீர் + இயற்சீர் +இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!

ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.

ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------

பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
ஒன்றேக் குறியென ஊழல் செய்து
உழைப்பவர் வாடிடவேப் - பொது

பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
பிச்சைக் காரரென - மக்களை
மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
வன்முறைக் காரர்களை - தன்

பொறுப்பை மறந்து , படிக்கும் பெண்களை
புழுவாய் துடித்திடச்செய் - மனங்
கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
காலால் மிதித்திடச்செய்-அவர்

நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
வாய்மை விதைதிடச்செய் - ஓம்

சக்தி சக்தி சக்தி என்றும்
சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
மக்கள் விழித்து வல்லமை யோடு
மாற்றம் கண்டிடச்செய்.

Thursday, January 06, 2011

வலையுலகம்

கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்

எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்

மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்

எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.



[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]

புத்தகம்

மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே

எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே

அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே

சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!


[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]

வெண்டாழிசை 4

தங்கத்தைப் புடம்போட தகதகக்கும் அதுபோல

பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி

சிங்கமென வெளிவருவாய் சிரித்து.

-------------------



மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்

பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்

விண்பிளந்து வருமோநல் விருந்து.



கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே

பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்

கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.



கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே

நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக

விட்டொழியும் வறுமையது விரைந்து.


1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]

வெண்டாழிசை -3

இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும்
முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால்
அடைந்திடும் நிலைக்கிலை ஈடு.


பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு
விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய
நசிந்திடா நலம்பெறும் வாழ்வு.

[முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.