Wednesday, July 14, 2010
நெஞ்சில் தைக்குமே முள்.
கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.
[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.
சிரித்து வாழ வேண்டும்.
1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.
2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!
3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!
நல்லோர் நட்பு.
காசு பணத்தால் விளையும் நன்மை
கையில் உள்ள வரைதான் உண்மை
நேசங் கொண்ட நல்லோர் நட்போ
நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!
Wednesday, June 23, 2010
வெண்செந்துறை
2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.
அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.
ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!
அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.
[திரு.தமிழநம்பி அவர்கள் தமிழ்த் தோட்டத்தில் மரபுப் பா பயிலரங்கத்தில் பா எழுத முதலிலிருந்து சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வந்து பயன் பெறவும்.]
Monday, May 31, 2010
கலிமண்டிலம்
புளிமாங்காய் + தேமா + புளிமா
வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
Wednesday, May 26, 2010
நன்றே நாடுக!
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
Thursday, May 20, 2010
ஈகை
தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.
Wednesday, May 19, 2010
அக்னி' பரீட்சை
அக்கினிப் பரீட்சையில்
வென்றது
சீதை..
தோற்றது
இராமன்
நியாயம்
இன்றோ!
அக்னி' பரிசோதனையில்
வென்றது
அறிவியல்..
தோற்றது
மனிதநேயம்
ஒற்றுமை
செய்தி: அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 2000கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் அக்னி 2 ஏவுகனை பரிசோதனை வெற்றி.
கூட்டம்
மெத்தக் கூட்டம்
உள்ளே
நுழைய முடியவில்லை
எப்படி தேடுவது?
'பாச' கயிற்றோடு
நிலைய அதிகாரியின்
அறையை அடைந்தான்
கிடைத்து விட்டார்கள்
அவர்கள் இருவரும்
செய்தி: புதுதில்லி இரயில் நிலையத்தில் இரயில்கள் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தாய் மகன் இருவர் பலி.
Sunday, May 09, 2010
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
திரு கபீரன்பனின் கட்டுரையும் காண்க.
கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா
சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!
Saturday, May 08, 2010
புத்தகம்
நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.
வாழ்த்து
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.
Wednesday, May 05, 2010
கந்தா கடைந்தேற வழிகாட்டு
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]
காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!
Tuesday, May 04, 2010
இயற்கை வளங்களைக் காப்போம்.
புளிமா புளிமா புளிமா
கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.
Thursday, April 22, 2010
சென்னை மாம்பல மகிமை
விடமெனக் கக்கிடும் புகையை
ஆதியும் இன்றி அந்தமும் இல்லா
ஆண்டவன் போல்பெருங் கூட்டம்
காதினை அடைக்கும் கத்திடும் ஓசை
கரைந்திடும் கையிரு காசும்
ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில்
இருப்பினும் போய்வரல் இனிதே!
துயராய் போனத் தொலைக்காட்சி
தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை
வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க
வஞ்சகமும் வசைச்சொல்லும் வேதனையும் மிஞ்சும்
விழியெல்லாம் பூத்திடவே விடியும்வரைப் பார்த்து
விடிந்தவுடன் தூங்கிவிழ வேலையெலாங் கெட்டு
அழித்திடுமே அன்றாடம் அழுதிடுமோர் பேச்சு
அருந்தமிழின் அழகெல்லாம் அமைதியோடு போச்சு.
Tuesday, April 20, 2010
பிளாஸ்டிக்
காய் காய் காய் மா
காய் காய் காய் மா
தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!
சேமிப்பு
காய் காய் காய் மா
சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.
Saturday, April 17, 2010
காப்பு உந்தன் கழலே
காய் + காய் + மா + தேமா
கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
உடனாடும் வடிவேலும் மயிலும் காண
ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!
Thursday, April 15, 2010
இயற்கை வளங்களைக் காப்போம் 1
விளம் விளம் மா
நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
நாமதை நன்குணர்ந் திங்கே
காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
காற்றினை மாசற காத்தே
வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
விளக்கினில் சூரிய ஆற்றல்
கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.
துவளாது உழைப்பீர்.
விளம் விளம் மா
காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!
Monday, April 12, 2010
கோடைக்காலம்
விளம் விளம் மா
வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.
முயன்றிட வெற்றி உண்டாம்
விளம் மா தேமா
அழைத்திட வருமோ வெற்றி
அயர்ந்திடா[து] எரும்பைப் போல
உழைத்திடு உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
முளைதிடுஞ் செடியைப் போல
முயன்றிட வெற்றி உண்டாம்
Friday, April 09, 2010
என் இனிய தமிழ் மொழியே!
ஓ
என் இனிய மொழியே
என் இதயத்தின் ஒலியே
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
உனக்கு
அதிகமான
கவனிப்புத் தேவைபடுகிறது
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
எல்லோரும் உன்னைக் கடந்து
சென்றுவிடுகிறார்கள்
உன் சிறந்த சொற்களை
நீ
சுவைப்பதில்லை
வேற்று மொழி
மருந்திலேயே
வீக்கம் கொள்கிறாய்
அசைப் போடுவதே
உன்
அன்றாட வேலையாகிவிட்டது
முன் பிறந்தும்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
பின்னவள் ஹிந்தியோ
பெரியவளாகிப் போனாள்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தயத்தில் மட்டும்
முதல் பரிசு
உனக்கு
ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில்
கன்னித் தமிழே
கவிதைச் சோலையில்
கதையில்
காணும் நாடகத்தில்
உன்
புன்னகையே
உன் இதழ்களை
அலங்கரிக்கட்டும்
அந்நிய சாயப் பூச்சு
வேண்டாம்
சொந்தப் பூவையேச்
சூடிக்கொள்
வண்ணங்கள் கலக்கலாம்
எண்ணங்கள் கலக்கலாம்
உன் சுவடுகள்
கலைக்கப்படாமல்
காப்பாற்று...
Sunday, April 04, 2010
இறைவழிபாடு 4
மா மா மா
மா மா மா
வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!
கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.
இறைவழிபாடு 3
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா
கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!
பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?
இறைவழிபாடு 2
விளம் மாங்காய்
பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!
நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!
இறைவழிபாடு -1
மா மா காய்
கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!
மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!
Saturday, April 03, 2010
இயற்கை -2
மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.
மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!
சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!
இயற்கை 1
மா மாங்காய்
மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்...
சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.
தமிழர் நிலை - 2
விளம் மா தேமா
சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்
அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!
Tuesday, March 30, 2010
தமிழ்
விள +விள+ மா
பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்
சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!
தமிழர் நிலை - 1
விளம் மா தேமா
பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.
பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.
Monday, March 15, 2010
நல்வழி அறிவீர்
விளம்+ விளம்+ மா
காலை எழுந்திட வேண்டும்
கனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்
தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.
சிறுவர் பட்டாளம்
மா மா மா
சிட்டுக் குருவிக் கூட்டம்
சிரிக்கும் சின்னத் தோட்டம்
பட்டப் பகலில் நிலவு
படிக்க வந்த தோற்றம்
கொட்டி விட்ட மணிபோல்
குலுங்கச் சிரிக்கும் அழகை
எட்டிப் பார்க்கும் இறைவா
எனக்கும் மீட்டுத் தாதா!
குழந்தைகளுக்கு
மா+மா+மா
கண்ணே மணியே வாவா
கனவின் வடிவே வாவா
அன்பே வாழ்வின் வேராம்
அறிவே மூச்சுக் காற்றாம்
பண்பாய் வாழப் பழகு
படித்தே உயர்வது அழகு
உண்மை நேர்மை உழைப்பு
உன்னில் இருந்தால் சிறப்பு.
பண்ணும் இனிமைத் தமிழில்
படிக்க பேச விரும்பு
மண்ணைப் பெண்ணை மாற்றார்
மனத்தை மதிக்கப் பழகு
எண்ணந் தன்னில் ஈரம்
ஈகை பொறுமை இருந்தால்
வண்ணங் கலந்து வாழ்வும்
வளமாய் நிறைவாய் விளங்கும்.
பெண் குழந்தை வாழ்த்து
மா/விளம் +மா/விளம் +மா
மா/விளம் + மா/வ்ளம் +மா
[வெண்தளை ஏற்றது.]
1.தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே
நங்கையர் நாடு நலனே
நயனில் நிலையினர் உள்ளார்
இங்கவர் எண்ணம் இழிய
இடியென் றெழுந்த எழிலே
பொங்கு புகழொடு பெண்மை
பொலிந்திட வந்தனை வாழி
அழகுத் தமிழ் பழகு
.....விளம்+ விளம்+ மா
மழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************
அருளுடை வாழ்வு
விளம்+ விளம்+ மா
1.வண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.
Sunday, March 07, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!
Friday, March 05, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.
[என் ஆசானாகிய திரு தமிழநம்பியின் கருத்தை பணிவோடும்,பெருமகிழ்ச்சியோடும் இங்கே அளிக்கிறேன்.
"பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.பாராட்டு. நன்றி".]
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட
எழுதிடச் செய்வோமோ
என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
செந்தமிழ் கேட்போமோ
என்று எம்மவர் தமிழினில் படித்திட
எண்ணமேக் கொள்வாரோ
நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
நயத்தொடு கற்போமே!
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
காட்டிடும் வகையன்ன
மாலைப் போதினில் வெண்மதி வானிலே
மயக்கிடு மேயென்னை
சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
சூடிய உன்மீது
காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
காரிகை தன்னோடு.
Thursday, March 04, 2010
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
[திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சியே என் பாடல்கள்
பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்...........
பாரினர் பாராட்டைப்
பார மேயெனக் கண்டவன் தமிழினில்...........
பண்ணினி தென்றாலும்
பார தம்தரும் பழந்திரு மறைசில...........
பன்மொழிப் பெயர்ப்பாளன்
பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்...........
பாடெனப் புகழ்ந்தானே.]
பாடி பாரதி பாவினில் சொன்னதைப்
பழகிடல் தவறில்லை
கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
குறையவன் வாழ்நாளில்
ஏடி பாரடி இன்றைய நாளினில்
இந்தமிழ் இயலாதோ?
கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
கூடுமே எந்நாளும்...
நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
நாவினுக் கெளிதாமோ
பாடி பாரதி பாவினைத் தந்தது
பழகிடும் தமிழ்தானே
தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
தீதென ஆகாதே
வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
வதைத்தலும் கூடாதே...
கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
குறையுடைச் செயலன்றோ
வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
வேர்ச்சொலும் பலவாகும்
தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
தேறிடுந் தமிழுந்தான்
வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
வகையினை அறிவோமே!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே
கண்ணிலும் காதாலும்
விண்டு நீயுமே உணவினை சுவைத்திட
வேண்டுமுன் வாயாலே
மூன்றும் முக்கியம் நம்முடை சுவாசமோ
மூக்கினால் தானன்றோ
நன்று நம்முயிர் வாழுமிவ் உடலினை
நாமுணர் மெய்யென்போம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
வண்ணத்துப்பூச்சி
வண்ணச் சிறகை விரித்து பறந்து
வானம் அளப்பாயோ!
கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில்
காணும் ஒளிநீயோ
மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற
வண்ணம் உன்னாலோ
பொன்னில் அல்ல மின்னும் அழகை
உன்னில் கண்டேனே!
2.சிங்கம் சிறுத்தை சீறும் புலியும்
இருந்தால் காடாகும்
எங்கும் ஓடி வேட்டை யாடி
இரையைப் பிடித்துண்ணும்
தங்கும் வீட்டில் ஆடும் மாடும்
தடுப்புத் தொழுவத்தில்
பொங்கும் பாலை பருகத் தந்தே
புல்லைத் தானுண்ணும்
.3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி
காட்டும் தொழிலாளி
வீட்டில் உணவும் இல்லா திருக்கும்
விளக்கம் சரிதானோ
ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை
அழிக்கும் முதலாளி
கூட்டம் தன்னை சட்டம் போட்டே
குறைத்தல் நலம்தானே.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
பாரீர் கடலாகும்
கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
குடிக்கத் தோதாகும்
முட்டி மோதி ஓடும் ஆறும்
மொழியும் ஒருபாடம்
கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல்
காத்தல் நலனாகும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப்
பொன்னாய் மின்னும்!
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
கனியும் காலம்
Tuesday, February 23, 2010
ஈகை
உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!
முதுமை
விளம்/மாங்காய் + மா + தேமா
களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.
குழந்தைத் தொழிலாளி
விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா காட்டும்
கூலிக்கு வேலை செல்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
அன்றாடம் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!
கூடி வாழ்வோம்
கன்னங் கரிய காக்கையினம்
கூடி வாழும் தன்மையிலே
எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
கண்ணில் வீழும் மண்துகளை
கைகள் சென்று துடைப்பதுபோல்
மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
மாற்றும் மனதைக் கொள்வோமே.
பெற்றவர் உவகை
பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!
உழைப்பே உயர்வாம்
உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.
உடல் நலம் பேணிட...
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.
உண்மை அழகு
பாடும் குயிலின் அழகெல்லாம்
பாரீர் அதனின் குரலினிலே
வாடும் மலரும் ஓர்நாளில்
வாசம் அதனை மாற்றிடுமோ?
ஏடும் அழகாம் வெண்தாளில்
எழுதி கருத்தை விளக்கிடவே
நாடும் மனத்தில் அழகெல்லாம்
நன்மை தன்னில் காண்பீரே!
சேவற் கொடியோன் சிறப்பு.
பாவக் கரையழித்து காக்கும் கருணையே
சேவற் கொடியோன் சிறப்பு.
தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
அல்லல் அகலும் விரைந்து.
எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
தித்திக்கும் தேனாய் இனித்து.
வேலும் மயிலும் துணையென நம்பியே
நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.
Thursday, February 04, 2010
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.
Saturday, January 23, 2010
'காணும்' பொங்கல்
நன்றாய் காண' வேண்டும்
'காந்தி' சிலைமுதல்
'கண்ணகி' சிலைவழி
'மெரினா' கடற்கரை வரையிலும்
மெதுவாய் நடந்தால்
பெரிதாய் காணலாம்...
தீவுத் திடலில்
திரளும் கூட்டம்
பொருட்காட்சி காண
பெருகும் மக்களின்
பொருட்களில் நன்றாய்
பொங்கக் காணலாம்...
காக்கிச் சட்டையின்
கண்களில் கொஞ்சம்
கடுமைக் காணலாம்
கொடுத்தே விட்டால்
'மாமூலாய்' மகிழ்ச்சிக் காணலாம்...
மாநகரப் பேரூந்தில்
மக்கள் நெரிசல்
கூட்டமாய் இருக்கும் கொஞ்சம்
கூடவே காணலாம்...
காணும் பொங்கலில்
காணாது விட்டால்
பிரியாணி, பாக்கெட்,
பீடியு மில்லை, மீதியு மில்லை
ஓடியே சென்றுடை யணிந்து
வாடி! செல்வோம் வகையாய்
காணும் பொங்கல் நாமும் காணவே!
[அட இது நம்ம பிளேடு பக்கிரியும் அவங்க சம்சாரமும் கொண்டாடின காணும் பொங்கலுங்க.]
Wednesday, January 06, 2010
நன்றியுடன்
நற்றமிழ் தன்னை நானறிந் துய்யவே
கற்றிடச் செய்தவள்
ஈறாறு வயதில்
தேனாம் தமிழை
நாடி நான்படிக்க
பாட புத்தகத் துடனே
'பொன்னியின் செல்வனை'
என்னிடம் தந்தவள்
அன்புடை எந்தாய்....
என்றும் நன்றியோ(டு) என்மனம் நினைப்பது
அன்றென் வகுப்பில்
அருந்தமிழ் அளித்தென் ஆசைத் தீக்கு
நறுநெய் யிட்டநல்லா சிரியர் சிலர்
இல்லாயின் எந்தீ
சொல்லாம் எப்படி?...
வாழ்க்கைத் துணையாய் வந்தவன் தானுமென்
வாசிப்புத் துணையாய் நின்றான்.
நேசிக்கும் தமிழை
நேராய் நானுனர மேற்படிப்பு
படித்திடச் செய்தான்
படிப்படியாய் உயர்ந்திட எனக்கே
பக்கபல மாயிருந் தவர்பலர்
சக்கரையாய் இனிக்கும் அவர்நினைவு...
இங்கணம் இந்தமிழை
இயன்றவரைப் படித்திருக்க, தமிழ்பற்றால்
தாமறித் தமிழைநாம றியவலை தன்னில்
யாப்பிலக் கணங்கற் பித்தார் நன்றாய்
பாப்புனைய வல்லார்..
பொய்யிலாப் புகழுடை
அய்யன் வள்ளுவன்தன்
சொல்லாம் குறளினைக்
கல்லில் எழுத்தாய்
கருத்தில் இருத்தியோன்..
காலம் அழிக்கா கவிபுனைத் திறனை
அருந்தமிழ் தன்னில் எனக்களித் திட்ட
திரு.அகரம் அமுதா என்மனதில்
சிகரமென உயர்ந்தே நின்றார்..
சிறப்பாய் தனித்தமிழ்
பிறக்கும் இவரிடம், இன்தமிழில்
அறத்தோடு அழகாய் கருத்தைச் சொல்லும்
திறத்தான் திரு.தமிழ நம்பிநல்
மனத்தால் நற்றமிழை
எனக்களித்தார் நன்றியோடு
அவரைப் போற்றிப் பணிவேன்..
இவர்களின் துணையெனக் கிங்கே
அவரைக் கொடிக்கோர் கொம்பினைப் போன்றதே!...
Friday, January 01, 2010
சென்னையில் மார்கழி
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றயப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!
சென்னையில் இன்று
கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்
தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்
பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்
காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றாயச் சென்னை..
மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..
பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'
இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்
விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..
இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..
இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.
Wednesday, December 16, 2009
கசப்பு மருந்து.
காயம்
வலி
துன்பம்
துயரம்
பிரிவு
இழப்பு
தடை
தயக்கம்
இவை தன்
இருப்பை மறந்து
இயந்திரமாய்
மாறாதிருக்க
மனிதக் குழந்தைக்கு
இறைவன் ஊட்டிய
கசப்பு மருந்து.
கயமை
கர்வம்
கோபம்
பொறாமை
பேராசை
ஆணவப்
பிணிக்கு
ஆண்டவன் அளிக்கும்
அருமருந்து
அன்பு
தூய்மை
நேர்மை
விடாமுயற்சி
தன்னம்பிக்கை
தனைவளர்க்க
தெய்வம்
தரும் மருந்து.
மண்ணில்
மனிதம் காக்கும்
மா மருந்து..
[திருநெல்வேலிக்கே அல்வா! மாதிரி டாக்டர் தேவன் மாயம் அவர்களுக்கு சுரம் கண்டப் போது [சுரவேகத்தில் ?] அழகான காய்ச்சல் கவிதை எழுதியிருந்தார். அதை படித்ததும் எழுதியதுதான் இது.]
Thursday, October 22, 2009
நன்றாகச் செய்க நயந்து.
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.
எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]
என்றும் திருநாள் எனக்கு.
ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]
Tuesday, October 13, 2009
நல்லதே நாடுக
நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
நல்லதோர் விதையே மரமா கிடுமே!
நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!
அன்புடை வாழ்க்கை
துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே!
அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே!
கருத்துடன் கருமம் சிறக்கும் என்றுமே!
கரும்புடன் இனிப்பு கலந்தே இருக்குமே!
விரும்பியே வினைச்செய விளையும் நன்மையே!
நன்மையேச் செய்திட நானிலம் வாழுமே!
அன்பினைக் காட்டியே ஆளுவோம் மனதையே!
Friday, September 25, 2009
விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா
இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்தை என்ற கவிதைக்கு பின்னூட்டமாக எழுதபட்டது. இப் படம் எடுக்கப்பட்டச் சூழல் அவர் வரிகளிலேயே!!! (விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகத் திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு/தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாகக் காத்துக்கொண்டிருந்தப் பொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது.)
Sunday, September 20, 2009
பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]
புரட்சி புலவன் பாரதி தாசன்
பரந்த உலகினில்
பொருட்களை எல்லாம்
பொதுவாய் வைத்திடும்
புதுமைச் சொன்னான்..
உழைப்பின் பலனெலாம்
உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை
உரக்கச் சொன்னான்...
நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்
ஒன்றாய் உளஞ்சேர்
காதல் திருமணம்,
கைம்பெண் மறுமணம்,
மண்ணில் மாந்த ரெல்லாம்
ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..
இன்னும் நம்மிடை இருக்கும்
மூடப் பழக்கம்
மிதிக்கச் சொன்னான்,
பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..
பெண்ணைச் சமமாய் மதித்திட
கண்ணாய்த் தமிழைக் காத்திட
கருத்தில் நேர்மை
கருணை கண்ணியம் கலந்தே தந்தான்
விருந்தாய் அருந்தமிழ்..
அறிந்தே நாமதைச்
சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்
சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!
செல்வம் நிலையாமை - [ இணைக்குறள் ஆசிரியப்பா]
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!
Saturday, September 19, 2009
பாரதி - [ நிலைமண்டில ஆசிரியப்பா ]
அஞ்சி நடுங்கிய அடிமை நாட்டில்
நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும்
கொஞ்சும் தமிழும் கொண்டே பிறந்தவன்..
சிந்தை யிழந்த சிறுமதி யாளர்
நீசர் காலடி நித்தம் வணங்கிட,
நாசக் காரர் நம்மில் சிலரின்
நெஞ்சை உடைத்து நேர்மை புகுத்தி,
அஞ்சியோர் மனதில் ஆண்மை வளர்த்து,
நாட்டுப் பற்றை நரம்பில் ஏற்றி,
பாட்டின் வரியில் பகையை மிரட்டிய
அச்சம் தவிர்த்த ஆண்மையே பாரதி!
அகந்தை இல்லா அறிவே பாரதி!
கண்ணன் பாட்டில் காதலைத் தேடி
குயிலின் பாட்டில் ஞானம் கண்டவன்..
வறுமை அவனை வாட்டியப் போதும்
சிறுமைக் கொள்ளாச் சிந்தைப் பெற்றவன்..
காலன் வந்தப் போதும் அவனைக்
காலால் மிதிக்க கர்வம் கொண்டவன்
காக்கையும் குருவியும் நம்மின மென்றே
பார்த்திடும் அவன்வழி பகைவனுக் கருள்வது..
ஏற்றதை நாமும் இனித்தொடர்ந் தென்றும்
போற்றுவோம் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!
Monday, September 14, 2009
தமிழ்த்தாய் வாழ்த்து. - [நிலைமண்டில ஆசிரியப்பா.
தாயே வாழ்க! தமிழே வாழ்க!
தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
தமிழர் எழுக! தாயும் வாழ,
தன்னினம் வாழ, தமிழா எழுக!
இன்னல் யாவும் இன்றொடு முடிக!
கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க! வாழ்கவே!