Friday, March 29, 2013

அறம் செய விரும்பு

என்றுயிர்ப்  போகுமோ என்றறியா வாழ்விலே
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.

Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!

Friday, February 01, 2013

என் இரண்டாம் பக்கம்

தாயின்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...

திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...

"நான்'
அறிமுகமானேன்..

நான்

விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.

நான்

சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின

நான்

அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின

நான்

உருவாக்கினேன்
என் சிறிய உலகை

நான்

அழித்தேன்
என் அறியாமையை

நான்

வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்

நான்

பெற்றேன்
அதனால்
இழந்தேன்

இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்

நான்

திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.

இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது

மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!

முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?

முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க

மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்

நான்
என் இரண்டாம் பக்கத்தில்...