Thursday, July 21, 2016

நல்லறிவு பெற்றவளாம் சுவாதி என்பாள்
   நண்பனென வந்தவனால் தாக்கப் பட்டாள்
பல்லுதிர பலரெதிரே வெட்டிக் கொல்ல
   பயந்ததனால் எவரெதையும் செய்யா நின்றார்
சில்லிட்டு, நெஞ்சடைத்து, சின்னப் பெண்ணின்
   சாவதனைக் கண்டொருவர் மாய்ந்தே போனார்
பல்வேறு காரணங்கள் புனைந்துக் கூறி
   பத்திரிக்கை பிரபலங்கள் பாய்ந்தே வந்தார்

புரியாத புதிராகும் நடந்த உண்மை
   பொல்லாத காலமதை புறத்தே தள்ளும்
அறியாத பருவத்தில் வலையில் சிக்கி
   அறிவற்ற செய்வோரை அதிகம் கண்டோம்
சரியென்றும் தவறென்றும் தெளிய நல்லத்
   தருணமிது தவறான பாதைத் தள்ளி
அறிவாலே ஆய்ந்தறிந்து கொள்வோம் உண்மை
   அன்பினையும் நட்பினையும் காப்போம் போற்றி

முகநூலின் முழுவிவரம் உண்மை இல்லை
   உணராமல் உறவாட வருமே தொல்லை
நகரத்து வாழ்வினிலே நட்பு ணர்வு
   நாடகமாய் ஆனதிலே அழிவே எல்லை
முகங்காட்டும் கண்ணாடி உளமா காட்டும்
   உண்மையதை ஊடகமா எடுத்து ரைக்கும்
பகலவனால் இருள்மறையும் காட்சித் தோன்றும்
  பகுத்தறிவே சரியானப் பாதைக் காட்டும்...