Thursday, September 14, 2023

நிலவே!!!

நிலவே!

உன்னை நாங்கள்

அடைந்து விட்டோம்!

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

இந்திய மக்களின்

இதயத் துடிப்பல்லவா நீ!

 

ங்கள் பாட்டிமார்கள்

உன்னைக் காட்டித்தான்

தம் பிள்ளைகளுக்கு

உணவளித்தார்கள்

 

எங்கள் தாய்மார்களோ!

நிலா நிலா ஓடிவா!

என்று உன்னைத்

துணைக்கழைத்தார்கள்...

 

நாங்களோ !

உன்னை அடைந்தே விட்டோம்..

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

ஒருவேளை

நாளை எம் பிள்ளைகள்

உன்னை

சொந்தம் கொண்டாடுவார்களோ!

 

நிலவே

உனக்கும்

எங்களுக்குமான

இந்த இடைவெளியை

 

அன்று

கற்பனையால் கடந்தோம்..

 

இன்று

அறிவியலால் அளந்தோம்..

 

நிலவே

உன் அழகு

இன்றும் எங்களை

வசப்படுத்துகிறது..

 

எங்கள் குழந்தைகளுக்கு

கற்பனையை

கலையை

உன்மூலமாகத்தான்

சொல்லித்தருகிறோம்…

 

எங்கள் காதலுக்கும்

கவிதைக்கும்

நீயே அடிப்படை…

 

ஆனாலும்

 

நிலவே!

சற்று தள்ளி நில்

மனிதனை

அருகில் வரவிடாதே!

 

உன் அழகு

கனிமங்களை

அவன்

அள்ளிக் கொள்ளலாம்…

 

அழகிய பூமியில்

ஆயிரம்

கோடுகள்

கிழித்தவர்கள் நாங்கள்..

 

இன்றும்

நடந்துக் கொண்டே

இருக்கிறது

கோடுகளுக்கான

சண்டை …

 

உன்னையும்

துண்டாடவிடாதே!

 

வடதுருவம்

தென் துருவம்

என்று

இப்பொழுதே

துண்டாடுகிறார்கள்..

 

மனிதனை

அண்டவிடாதே!

 

எங்கள் சந்திராயனைத்

தூங்கவிட்டுவிடு

சந்திரனே!

 

உன் அழகை

கனிமங்களை

மனித இச்சைக்கு

அளித்துவிடாதே!

ஆசைக்கு

அளவில்லாதவர்கள் நாங்கள்

 

நிலவே!

அழகே!

உன்னைத் தொட்ட

எங்கள்

இதயத்தில்

உன் காதல்

என்றும் நிலைத்திருக்கும்…

 

எங்கள்

ஓவியத்திற்கு

வடிவமாய்

 

கவிதைக்குப்

பொருளாய்..

 

காதலுக்கு

துணையாய்

 

மட்டுமல்ல

 

எங்கள்

அறிவியல் அறிவிற்கும்

சாட்சியாய்..

 

என்றும், என்றும்

நீயே…

நிலவே !!!

Sunday, August 13, 2023

அலுவலகம்


இது ஒரு நீண்ட
இரயில் பயணம்…

25 முதல் 60 வயது வரைத்
தொடரும் நெடிய பயணம்

அறியாத வயதில்
ஆசையாய் ஏறிக்கொள்வோம்

அங்கும் இங்கும் தேடி
நமது இடத்தை கண்டிபிடிப்போம்

நமது இடம்
நமக்குப் பிடித்தது தானா?

இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்…

நமது உடன் பயணம் செய்பவர்கள்
நமக்கு பிடித்தவர்களா?

இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்…

உடன் வருபவர்கள்
ஜாதி, இனம், மொழி என
எப்படி பட்டவரானாலும்
பயணம் ஒன்றுதான்

சிலருக்கு
ஜன்னல் அருகில் இடம்
கிடைக்கும்…

சிலருக்கு
மத்தியில் …

சிலருக்கோ
பர்த் கிடைக்கும்

ஜன்னல் அருகில்
இடம் கிடைத்தாலும்
முனகிக் கொண்டே சிலர்.

சிலர் ஆடிப்பாடி
கொண்டாட்டமாய்…

ஆர்வமாய் சிலர்
இங்கும் அங்குமாய்
திரிந்தபடி...
  
சிறிது தூரம் சென்றதும்
ஆட்டம் பாட்டம் குறைந்து
தனக்கான உணவை
வைத்துக் கொண்டு
பயணம் தொடரும்..

என் இடம், உன் இடம்
என்ற பாகு பாடு மறைந்து
உணர்வுகள் பரிமாறப்பட்டு
அமைதியாய் சில நேரம்…

சிலருக்கு
வாழ்க்கைத் துணையை
கூட பயணம் கொடுக்கும்

ஒரு சிலருக்கு
ஏசி அறை
கிடைக்கும்…

அனால் அங்கு
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதே
இல்லை….

சிலர் பேச வந்தாலும்
சிறிது நேரத்தில்
அமைதியாய் விடுவார்கள்

சிலரோ
முதல் வகுப்பில்
பயணிப்பார்கள்..

இவர்கள்
தனிமையைத்
தானாகத் தேடிக் கொண்டவர்கள்
யாரோடும் பேசமாட்டார்கள்.

தனக்கு வேண்டியதை
உதவியாளரிடம்
கேட்டுப் பெறுவார்கள்.

அவர்கள் அறை என்னவோ
பெரியதுதான்
அனால் உதவிக்குக் கூட
உள்ளே செல்ல முடியாது

60 வயதில்
ஒவ்வொருவராக
இறங்கி கொள்வார்கள்…

பயணிகள்
பிரியாவிடை கொடுப்பார்கள்
தொலைபேசி எண் கூட
பகிர்ந்து கொள்வார்கள்

அனால் பிரிந்ததும்
மிகச்சிலரே தொடர்வார்கள்

இரயில் விட்டு
இறங்கியப் பிறகு
வாழ்க்கை பொதுவானது

முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
என்பதெல்லம்
மறைந்துப் போகும்..

வாழ்க்கை பயணத்தில்
ஜாதி இனம் மொழி
என்று எல்லா
வித்தியாசங்களும் இருக்கும்
ஆனால்
இவற்றைத் தாண்டி
நாம் வளர்ந்து விடுவோம்…

சிலர் அந்த எண்ணத்துடன்
சிறிது தூரம் செல்வார்கள்
அனால் வாழ்க்கை
கற்றுக் கொடுக்கும்

சில சமையம்
மீண்டும் வருவோம்
சிலரை ஏற்றவோ
அல்லது இறங்குபவர்களை
வாழ்த்தவோ

அப்போது
நமது இடம்
யாரோ ஒருவருடையது…
அது நமது சொந்தமில்லை…

நாமோ அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை….

வாழ்க்கை பயணத்தை
அறிந்தவர்களாகிறோம்...

Saturday, August 12, 2023

இரகசியம் அழகானது

பூவின் இரகசியம்

தேன்

மெதுவாக

வண்டை அழைக்கும்….

 

புல்லின் இரகசியம்

பனித்துளி

சூரியனோடு

சொந்தம் கொண்டாடும்…

 

மேகத்தின் இரகசியம்

மின்னலாய்

வெளிப்படும்

 

நீள் நதியின்

இரகசியம்

வயல்களில்

விளைச்சலாய்…

 

காற்றின்

இரகசியம்

தென்றல்

 

கடற்கரையின்

இரகசியம்

கிளிஞ்சல்கள்…

 

மண்ணின்

இரகசியம்

மரங்களாய்…

 

வானோ

வெள்ளி நீர்த் தூறலாய்…

 

ஒளி இருளோடு

பேசும் இரகசியம்

நட்சத்திரங்கள்…


இருள் ஒளியோடு

பேசும் இரகசியம்

நிழல்களாய்...

 

குழந்தையின்

இரகசியம்

சிரிப்பு…

 

பெண்ணின்

இரகசியம்

பார்வை…

 

ஆணின்

இரகசியம்

அவன் அணைப்பில்….

 

எழுத்தின்

இரகசியம்

இனிய

கவிதையாய்….

 

இரகசியம் அழகானது…

Monday, July 24, 2023

நட்பு

எனது
தொலைபேசியிலிருந்து
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்

நட்பு என்ன
பணமா?
பதவியா?
இல்லை
வலைத்தளங்களில் விழும்
“லைக்’ குகளா?

அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்.

அடடா!
என் கவிதைகளைப்
பகிர
நண்பர்களில்லையே!!!

தனிமையில்
நான் எழுதிய
கவிதைகளைப்
பகிர்ந்துக் கொள்ள
நல்ல
நட்பிற்காக
காத்திருக்கிறேன்…

கிழிசல்

என்
கவிதை புத்தகத்தை
நீ
திருடிக் கொண்டுவிட்டாய்…
இல்லை என்று
சத்தியம் செய்தாய் நீ..
என்னிடம் கேட்டால்
நானே கொடுத்திருப்பேனே!

என் இதயத்தின்
கிழிசலில்
நட்பு
மாட்டிக் கொண்டு
உடைந்து போனது….

கவலை மற

மூளையில்
இரத்தக் கசிவு
எனக்குத் தான்…

சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்

'நடப்பது நடக்கும்
கவலை மற'…

ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?

'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…

என் துக்கங்களை
எங்கே
எறிவது….

நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…

ஆஹா
இது என்ன!

என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!

என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!

கலையே!
கற்பனையே!!
நான் உன்னை
காதலிக்கின்றேன்..

இந்த
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?

------

Sunday, April 17, 2022

புனித வெள்ளி

ஆணியில் அறைந்தது
ஆணவம் செய்தது… 

அளவிலா கருணையோடு
அன்றுயிர்த் தெழுந்த
ஆண்டவன் செய்கையோ
அன்பின் எல்லையது...

மாயையால் மனிதர்
மாண்பினை இழந்தனர்
மாசிலா தேவனோ
மன்னித்து அருளினார்...


இன்றிந்த நாளிலே
இறைவன் அருளினை
இதயத்தில் ஏற்றுவோம்...
என்றும் போற்றுவோம்....

புனித வெள்ளி
நம் மனத்தை  புனிதமாக்கட்டும்!!!

உமா

Thursday, March 31, 2022

இனியவைகூறல்



வேலினை ஒத்த கண்கள்

வில்லினை ஒத்த நெற்றி

தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்

தாமரை நிறத்தால் ஒக்கும்

தோளிரண்டு மூங்கில் என்றும்

துடியிடை மின்னல் போலும்

ஆயிழை தன்னைக் கண்டார்

யாரவள் மனத்தைக் கண்டார்???

Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

அன்று!

அவள் கண்களில்

ஒளி இருந்தது

அவளோ!

இருட்டு அறையில்

சிறைப்பட்டிருந்தாள்…

 

சுதந்திர வெளிச்சம்

சூழ்ந்த போது

அவள் பார்வையோ

பறிக்கப்பட்டது…

 

பறந்த வெளியில்

பாதை தெரியவில்லை…

 

அடிமைச் சிறைவிட்டு

அடியெடுத்து வைத்தாலும்

ஆண்களின்  பார்வை

அச்சமூட்டியது…

 

அடிமைக் கூடு

அழிக்கப்பட்டப் போது

அவளது

அழகிய சிறகுகள்

சிதைந்தே இருந்தன…

 

எதிர்பார்ப்புகளால்

அவள்

இயக்கம்

தடுக்கப்பட்டது…

 

உலகம்

பட்டுப்பூச்சியை

பருந்தாய்

பறக்கச் சொன்னது…

 

பறந்தால் மட்டுமே

பெண் எனச் சொன்னது…

 

இருட்டு அறையிலும்

இயங்கிய கண்கள்

வெளிச்சம் கண்டு

விலகிச் செல்லுமா?

 

சின்னச் சிறகை

மெல்ல விரித்தே

வானம் அளந்தது.

வண்ணத்துப் பூச்சி..

 

பறந்த வெளிதான்

பாதை வகுத்து

பயணம் தொடர்ந்தாள்

பெண்

 

கிழட்டுப்

பார்வைகளை

கிழித்து எறிந்தாள்

 

புதிய உலகம்

புதிய பார்வை

புதிய பாதை

புதிய பயணம்

 

புதிதாய் என்றும்

பொலிவாள் பெண்…

 

பூவும் அல்ல

புயலும் அல்ல

 

அவள் பெண்…


(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது) 

Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

முடியாது என்பது
ஒரு கெட்ட வார்த்தை...
 
பொய்யை, 
பழிச்சொல்லைக் காட்டிலும்
பெரும் கேடு 
விளைவிக்கக்கூடியது...
 
உறுதியை 
உற்சாகத்தை
உடைக்கக்கூடியது...
 
முடியாது 
உறுதியற்ற மனத்தின் வெளிப்பாடு...
 
முடியாது என்பது 
முயற்சியின்மையின் மகன்
செயலின்மையின் சகோதரன்
சோம்பேறித் தனத்தின் தலைவன்
 
முடியாது
நம்பிக்கையை
கனவுகளை 
கலைக்கக்கூடியது
குறிக்கோளை 
குலைக்கக்கூடியது
 
முடியாது என்ற வார்த்தை
வெட்கக் கேடு,
சொல்லவும் நா கூச வேண்டியது

முடியாது 
உன்னில் புகுந்தால்
உன்னை உடைக்கும்
 
முடியாது என்பதை
முழுமனத்துடன்
வெறுத்துத் தள்ளிவிடு
விலக்கி எழு.
 
முடியாது
தைரியத்தின்
தன்னம்பிக்கையின்
உழைப்பின் எதிரி
 
உனது 
தைரியத்தின் கூரிய வாளால்
உழைப்பின் உறுதியால்
தன்னம்பிக்கைத் தனலால்
உடைத்து எரி
 
நம்பு!!
 
முடியாததை
முடித்து வைப்பது 
முடியும் என்ற முடிவு மட்டுமே!!

உன்னால் முடியும் நம்பு!!!

Edgar Albert Guest ன் Can't என்ற கவிதையின் தழுவல். எனது முயற்சி..

Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

படிப்போர்க் கின்பம் பாரதியின்
பாட்டில் உண்டு பாரதிலே
படைப்போர்க் குண்டு பாடங்கள்
பக்தி, வீரம், காதலையே
சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது
சொல்லில் ஆழ்ந்த கருத்ததிலே 
விழைவோர்க் குண்டு விண்ணளவு 
விரிந்த பார்வை, மெய்யறிவு...

 

Wednesday, June 09, 2021

நலம் தா ஞாயிறே !!!

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

ஏழை இவளின் 
இதயம் தைக்க
ஏன்நீ விழைந்தாய் இன்னுயிரே! என்
எண்ணம் மனத்தில் 
இனியும் வேண்டாம் 
எனறே மறைந்து நின்றனையோ!

கண்ணில் மறைந்தால்
கதியென் னாகும்
கருணைக் காட்டு கதிரவனே! உன்
காலச் சுழற்சியில் 
காண்பவர் ஆயிரம் 
கடுப்போ என்தன் எதிர்வரவே! 

விருப்பு வெறுப்பு
எதுவும் இன்றி
ஒன்றாய் காண்பது உன்னியல்பு! இன்று 
நெருப்பாய் என்தன் 
நினைவைத் தள்ளி 
வதைப்பது சரியோ!  நீயியம்பு...

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று நடக்குது...
சத்தி யத்தின்  நித்தி யத்தை
சற்ற சைத்துப் பார்க்குது...

குதிரை யில்லை யானை யில்லை 
கொல்வ திங்கோர் கிருமியே... 
எதிரில் நிற்கும் எவரென் றாலும் 
எடுத்துக் கொள்ளு மாவியை...

ஒண்டி யண்டி குண்டு விட்டிங் 
குயிர்ப றித்த லின்றியே 
மண்ணில் வந்து மூச்ச டைத்து 
மாந்தர் தம்மை மாய்க்குதே...  

கண்ட துண்டு கேட்ட துண்டு 
காய்ச்சல் கொல்லு மென்பதை
எண்ணி றந்த உயிர்கள் சாவ
தென்ப திங்கே கொடுமையே...

முகத்தை மூடி கையைக் கழுவி
முயன்று தடுக்க வேண்டுமே!
முடிவில் லாமல் தாக்கு மிந்த
முகமில் லாத பகைவனை...

தள்ளி நின்று தனித்தி ருந்து 
கூட்டங் கும்பல் தவிர்க்கவே! 
மெல்ல மெல்ல மறையு மிந்த 
மனித குலத்தி னெதிரியே!!!  

Friday, April 02, 2021

காத்திருப்பு

தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பமாக ஆண்டாள் திருப்பாவையில் பாடவில்லையா! அது போலவே இறைவனை அடையும் நாளுக்காக காத்திருப்பதையே இப்பாடலில் காட்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்பதைத்தானே ஆழ்வார்களும்/ நாயன்மார்களும்  காட்டினார்கள். அவன் அருளுக்காகத் தான் காத்திருக்கிறார்.

தாகூரின் இப்பாடலைத் தழுவி ஆசை மட்டுமே காரணமாய் முயன்று எனது கவிதையை ஆக்கியிருக்கிறேன். 

Waiting

The song I came to sing
remains unsung to this day.
I have spent my days in stringing
and in unstringing my instrument.

The time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart…..

I have not seen his face,
nor have I listened to his voice;
only I have heard his gentle footsteps
from the road before my house…..

But the lamp has not been lit
and I cannot ask him into my house;
I live in the hope of meeting with him;
but this meeting is not yet.

காத்திருப்பு

எனது வாழ்வின் பாடல்
இன்னும்
இசைக்கப் படாமலே
இருக்கிறது

எனது
வீணையின் நரம்புகளை
நான் சரிசெய்து கொண்டே
இருக்கிறேன்

எழுகின்ற ஆசையால்
எரிகின்ற நெஞ்சத்தில்
எழுதாத என்கவிக்கு
இசையமைத்துப் பார்க்கின்றேன்…

தேடலின்
சுமைமட்டுமே
துணையாகக்
காத்திருக்கின்றேன்…

நான் அவன்
முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
என்றாலும்

என்னருகில் அவன்
காலடி ஓசையைக்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்…

அழைத்தால்
வருவானோ!!
அகம் நெகிழ
நினைத்தால் வருவான்…

இதய வாசல் திறந்தால்
இருள் விலகினால்
வெளிச்சமாய்
அவன் வருவான்…

அவன் வரும் நாளில்
எனது வாழ்வின் பாடல்
இனிமையாய்
இசைக்கப்படும்…

Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்


நாணலே மெத்தையாய்

நாணமே போர்வையாய்

நல்லதொரு தூக்கம்

விடியலை வரவேற்கும்  விழிப்பு

உள்ளத்தில் அமைதி

உண்மையால் உறுதி

ஆற்றை குடித்து

காற்றில் மிதந்து

காய் கனி

கடித்து உண்டு

வேட்டை யாடியும்

விளை யாடியும்

சில மணிகள்

இயற்கையைப் படித்து

இதயத்தால் வாழ்க்கை

கள்ளமில்லா காதல்

கடுப்பில்லா மனம்

களைப்பில்லா குணம்

காட்டாற்று வெள்ளம்

கரைப்புரள

காலம் கரைக்கட்டியது

ஏட்டைக் கிழித்தது

எழுத்தாணி

இன்றைய நாகரீகம்

எழுந்தது…

Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது.
தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம்

Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

கொல்லும் கொடிய வைரஸாம்,
கொரோனா' என்றே பெயரதற்காம்...
வீட்டில் இருக்கச் சொன்னாங்க, 
விரட்டி அடிப்போம் என்றாங்க...

அதனால்...

பள்ளிக் கூடம் போகல,
பாடத் திட்டம் எதுவுமில்லை...
வீட்டுப் பாடம் கொடுக்கல,
விடிய விடிய படிக்கல...

ஆனால் 

வேடிக்கை யாக தினந்தினமும்
வாழ்க்கைப் பாடம் கற்றோமே!!
ஒழுக்கம் உயர்வு என்பதனை
உணர்ந்தோம் பழகி பார்த்ததனால்...

அடிக்கடி கையை கழுவிக்கொள்!
ஆசாரக் கோவை மனதிற்கொள்!
அடுப்படி உணவே மருந்தென்றே
ஆச்சி சொன்ன பாடந்தான்...

அழகாய் நாங்கள் கற்றோமே!
ஆனால் சிறிய சந்தேகம்...
பள்ளிக் கூடம் திறந்ததுமே
பாழாய் போகும் இப்பாடம்...

மீண்டும் பழைய திட்டம்தான் 
மதிப்பெண் ஒன்றே குறிக்கோளாய்
மனனம் செய்யும் வழிமுறைதான்...
மாற்றம் உணடோ சொல்வீரே!!!

அதனால் 

ஐயா! எங்கள் பெரியோரே!!!
அருமை யான தருணமிது!!!
அறிந்தே கல்வி கொள்கையினை
மாற்றி அமைக்க முயல்வீரே!!!

Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

Sunday, May 10, 2020

குறள் தாழிசை

உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால்
அடைந்திடும் நன்மை பல...

சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால் 
இல்லை உனக்கே இழிவு...

உள்ளத்தால் ஒன்றி உழைப்பவர்கே அன்றி
உலகத்தில் இல்லை உயர்வு...

மனத்திற்கு நல்ல மருந்தாம் சிரிப்பு
உடலுக்கும் அஃதே உரம்...

உள்ளத்தால் உண்மை உரைப்பார்தம் உள்ளத்திற்கு
உண்டோ உடைக்கும் உளி... 

Saturday, May 09, 2020

குறும் பா

எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது 
மழை...

வெளிச்ச உண்டியல் 
உடைந்து 
இருட்டு தரையில் 
சிதறிய
சில்லரை காசுகள் 
நட்சத்திரங்கள்...

சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள் 
நட்சத்திரங்கள்...

சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது 
அலை பேசி...

திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது 
புத்தகம்...

குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது 
தட்டில் உணவு...

வானத் தரையில் 
கொட்டிவிட்ட 
கறுப்புச் சாயம்
இருள்...

அழுகை 

கண்ணம் துடைத்து 
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி 
பளிச்சென்றிருந்தது 
மனம்...

எப்பொழுதும் 
தலைகுனிய 
வேண்டியிருக்கிறது 
இவரிடம்
சவரத்தொழிலாளி

மழையைத் தடுக்கும் 
குட்டி வானம்
குடை...


Wednesday, May 06, 2020

மல்லிகை பூச்சரம்

கொட்டும் அருவி
குழவியர் வாயமுதம்
வீமும் மழைத்துளி 
விண்பரவும் நிலவொளி
நரைத்த முடி
நண்பகல் சூரிய ஒளி
முத்துப் பற்கள் 
முகம் காட்டும்
உன் சின்னச் சிரிப்பு
உருகி வழியும்
வெள்ளி இழை...

இத்தனை அழகாய்
உன் ஒற்றை 
பின்னலில் 
நான் வைத்த
மல்லிகைப் பூச்சரம்...

Sunday, May 03, 2020

அனுபவம்

வியர்வைத் துளிகளில் வழிந்திடும் அனுபவம்...
வெள்ளை இழையென ஒளிர்ந்திடும் அனுபவம்...
கற்றலில் பெறுவதும் கலைகளின் அனுபவம்...
உற்றவர் அற்றவர் உணர்த்திடும் அனுபவம்...
 
புத்தக அறிவினால் புதுப்புது அனுபவம்...
சத்தமே இன்றியுன் தனிமையும் அனுபவம்...
நித்தமுன் செயல்களில் நீபெறும் அனுபவம்...
புத்தியில் விதையென வளர்ந்திடும் அனுபவம்...

Monday, April 27, 2020

தடம்

புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை
கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ
சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச் 
சொல்லில் சுவையின் தடம்...

Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

எப்பொழுதெல்லாம் 
தர்மம் அழிந்து அதர்மம் 
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம் 
'நான் 'அவதரிப்பேன்...

ஏற்றுக் கொண்டோம் 
இறைவா... நீ
கண்ணனாக வா 
'கொரோனா' வாக வேண்டாம்...

அழிக்கப்படுவது 
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...

காக்கப்படுவது 
கருணையாக ,
காதலாக 
இருக்கட்டும்...

மயக்கத்தைப் போக்கி 
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...

மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...

இறைவா 
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...

கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!

Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

மனிதனின் 
சிந்தனை தோட்டத்தில் 
மலர்வது
யோசனை பூக்கள்...

வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள் 
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள் 
மயக்கும்... 

எண்ணங்கள் 
விதையாக 
எழுத்துக்கள் 
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள் 
பூத்துக் குலுங்கும்...

சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...

சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும்  பொதுவாக...


 

Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

வாழ்க்கை பயணத்தில் சில
மின்னல் பொழுதுகள்...

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...

அவனுக்கு!

அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய் 
தன்னை உணர்ந்த 
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னல் பொழுது!!

அவளுக்கு

தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம் 
அழகிய மின்னல் பொழுது!!

வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை 
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...

யாருக்கில்லை அந்த 
அற்புத மின்னல் பொழுது!!

முதல் வெற்றி
வாசல் தட்டிய 
வசந்த நிமிடம்...

காதல் சொன்ன
கணப் பொழுது...

வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது

கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...

தாயின் சிதையில் 
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும் 
நிமிடங்கள்...

யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னல் பொழுதுகள்...

Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே 
சண்டை இல்லை ...

சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...

வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...

வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...

அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி 
செயல்கள் நடந்தது...

சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது

நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ

உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...

சற்றே

திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...

ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...

எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...

இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை 
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!





Tuesday, March 31, 2020

கடல்

அலை கடலின் ஓசை
ஆழ் கடலில் இல்லை...

ஆழ் கடலின் அமைதி
அலை கடலில் இல்லை...

அலைகடல் ஓயாது
ஆழ்கடல் பேசாது...

சிந்தனையில் 
ஆழ்கடல் அமைதி 
அறிவின் துவக்கம்... 

செயலில்
அலைகடல் ஆரவாரம்
இயக்கத்தின் அடையாளம்... 

கடலின் ஆழம் 
அலையில் தெரியாது...
அலைகள் இன்றி
ஆழ்கடல் கிடையாது....

சிந்தனை 
செயலுக்கு அடிப்படை
செயல்கள் இன்றி
சிந்தனை சிறக்காது.... 

நிழல்கள் நகர்ந்த பொழுது...

நிழல்கள் 
நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...

தாயின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
தானாக எழுந்து 
நடக்கலானேன்...

தந்தையின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
எனக்கென
தடம் ஒன்று 
இருக்கக் கண்டேன்...

நல்லாசிரியர் நிழல் 
எனைவிட்டு 
நகர்ந்த பொழுது, 
என் அறிவின் ஒளியில் 
இயக்கம் கொண்டேன்...

இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில் 
வாழ்வில் 
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!. 

Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு 
'சிந்தனை' உரமாகிறது...

நல்லவர்கள் சிந்தித்தால் 
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள் 
நமக்கெல்லாம் விளைகிறது...

மாறாக சிந்திப்போர் 
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள் 
தீயாக சுடுகிறது....

சொல்லோடு சிந்தனை 
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது 
நற்கவிதை ஆகிறது...

சிறப்பான சிந்தனை 
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...

மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில் 
சிந்தனையைச் தெளிவாக்கு....

கொரானா

எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி 
நலம்காப்பீர் நல்லோரே!!



Sunday, December 29, 2019

2019 --》2020

2019
இலவு காத்த  கிளியாக 
ஏமாற்றப்பட்ட சில எதிர்பார்ப்புகள்....
இழந்த சில நட்புகள்...
என்று
எப்போதும் போல் 
சில தருணங்கள்... 2019 ல்
என்றாலும்

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே

என்பது போல் 
நான் கேட்டது எனக்கு கிடைக்கவில்லை என்றாலும்,
இறைவன் கொடுத்தது மிகச் சிறப்பானதாகவே அமைந்தது...
23 வருடங்களுக்குப் பிறகு என் தந்தையை சந்தித்த அந்த நொடி 
இதயம் நின்று மீண்டும் துடித்தது...
அவருக்கான எனது கடமையைச் செய்ய இறைவன் அருளிய வாய்ப்பு...
இன்னும் சற்றும் எதிர்பார்க்காத நேரம், சாகித்ய அகாதமியில் பேசும் வாய்ப்பு...
மனதிற்கு பிடித்ததாக சில படைப்புகள் எழுதிய தருணங்கள்...
நிறைய பயணம், கோவில், இறைவன் தரிசனம்,
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு பகிர்ந்த சில இனிமைகள்...
என்றும் மறக்க இயலாத நல்லவர் நட்பு...
இது போதும்  எனக்கு இது போதுமே...

2020

இன்னும் இழந்த 
23 வருடங்களையும்
எண்ணத்தில் வாழ்ந்து பார்க்கும்
ஆவலோடு 2020 ஐ எதிர்பார்த்து...
எனது பயணம் தொடர்கிறது...

இறைவனுக்கு நன்றியோடு...

Saturday, December 14, 2019

நானும் நீயும்

நான் மழை,
நீ மேகம்!
என்னைத் தந்தவன் நீ... 

நான் நிலம், 
நீ மண்!   
என்னுள் நிறைந்தவன் நீ...

நான் சுடர்
நீ திரி!
என் ஆதாரம் நீ...

நான் நட்சத்திரம், 
நீ இருள்!
என்னை அடையாளம் காட்டுபவன் நீ...

நான் சுவாசம், 
நீ காற்று!
உன்னால் தான் என் உயிர்ப்பு...

நான் தமிழ், 
நீ இனிமை!
என் இயல்பான இணை நீ...

Sunday, November 24, 2019

குறிஞ்சிப் பாட்டு

தமிழரின் பண்பாட்டை எடுத்துச் சொல்ல 'கபிலர்' எழுதிய குறிஞ்சிப் பாட்டு பற்றிய எனது கட்டுரை இங்கு... https://sangailakkiyamsuvaippom.blogspot.com/2019/11/blog-post.html

Tuesday, November 12, 2019

எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

Rabindranath Tagore's Poem 
'Where The Mind is Without Fear'
in Tamil
எங்கே
மனம்
பயமின்றி இருக்கிறதோ!!!

எங்கே
பெருமிதத்துடனும்
தைரியத்துடனும்
தலை 
நிமிர்ந்து நிற்கிறதோ!!!

எங்கே
அறிவு
சுதந்திரமாக
செயல்படுகிறதோ!!!

எங்கே
பூமி
குறுகிய கோடுகளால்
துண்டாடப்படாமல்  இருக்கிறதோ!!!

எங்கே
உண்மையின் ஆழத்திலிருந்து
வார்த்தைகள் வெளிவருகின்றதோ!!!

எங்கே
அயர்வில்லாத
விடாமுயற்சி
முழுமையான வெற்றியை
அடையமுடிகிறதோ!!!


எங்கே
பகுத்தறிவுச் சிந்தனை
மூடப்பழக்கத்தின் முன்
மண்டியிடாமல்
தன் பாதையில்
பயணிக்கிறதோ!!!

எங்கே
புதிய சிந்தனை
புதிய செயல்கள்
என்னும்
விசாலப் பார்வைக்குள்
மனம் உன்னால்
செலுத்தப்படுகிறதோ!!!

இறைவா!!!
அங்கே
அந்த சுதந்திர உலகில்
என் நாடு
விழிக்கட்டும்...

Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

இந்தக்  காகிதம் 
என்னில் 
எழுது எழுது
என்று என்னை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது....

இப்படித்தான் 
வாழ்வின் இனிமைகள் 
எல்லாம் நம்மை
வாழ்ந்துப் பார்,
அன்பை உணர்ந்துப் பார்
என்று வரவேற்றவாறே
இருக்கின்றன...

பிறகு ஏன் இன்னும் 
பொறாமை, வெறுப்பு, கோபம்
எனும் நெருப்பால்
நம்மை நாமே
அழித்துக் கொண்டே
இருக்கிறோம்...

அறியாமையே அறிவு...

I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward.

Khalil Gibran

நான் 
'முழுமையான உண்மை '
என்பதை
அறியாமலிருக்கிறேன்...
ஆனால் என்
அறியாமையை உணர்ந்து 
அடக்கத்தோடு இருக்கிறேன்...
அதனாலேயே 
மதிக்கப்படுகிறேன்...

தமிழில் எனது கவிதையாக்கம்...

மண்ணின் கவிதைகள்

'Trees are poems the earth writes 
upon the sky, We fell them down and 
turn them into paper,
That we may record our emptiness.'

Kahlil Gibran

மண்
வான் மீது எழுதும் 
கவிதை 
மரங்கள்...
நாம்
மரங்களை அழித்து 
காகிதமாக்கி
நமது
வெறுமைகளை
பதிவு செய்து கொண்டிருக்கிறோம்...

எனது கவிதையாக்கம் தமிழில் ...

Saturday, November 09, 2019

நட்பு

In the sweetness of friendship let there be laughter, and sharing of pleasures. For in the dew of little things the heart finds its morning and is refreshed.
Khalil Gibran


நமது இனிமையான 
நட்பில்...
மகிழ்ச்சியும் 
பகிர்தலும்
நிறைந்து இருக்கட்டும்...
ஏனெனில் 
நம் இதயத்தாமரை
இந்த 
சின்ன சின்ன விஷயங்களில் 
தனக்கான 
உதயத்தைக் கண்டு
மலர்கிறது...

தமிழில்...
எனது முயற்சி...

Saturday, November 02, 2019

மழையின் பாடல்

Khalil Gibran's poem
'The Song of the Rain'
In Tamil...
எனது இன்னொரு முயற்சி...

மழையின் பாடல்

நான்

வானிலிருந்து வீழும்

வெள்ளி இழை…

 

இயற்கை தன்

வயல்களையும்,

பள்ளத்தாக்குகளையும்

பொலிவாக்க

என்னை

அழைத்துக் கொள்கிறாள்…

 

நான்

விடியலின்

தோட்டத்தை அலங்கரிக்க

இறைவனின்

மகுடத்திலிருந்து

உதிர்க்கப்பட்ட

முத்து...

 

நான் 

மேகத்தின் கண்ணீராய்

கொட்டும் போது

மலைகள் சிரிக்கின்றன…

 

நான்

'தாழ்ந்து' 

தொடும் போது

மலர்கள்

'மலர்ச்சி' கொள்கின்றன…

 

நான் 

வீழும் போது

உலகம் மகிழ்ந்து

எழுகிறது….

 

பூமியும் மேகமும்

காதலர்கள்..

நான்

அவர்கள் அன்பின்

தூதுவன்…

 

நான்

பலர் தாகத்தைத்

தீர்க்கிறேன்..

 

பலர் காயங்களை

ஆற்றுகிறேன்…

 

இடி எனது

வருகையை

உலகுக்குக் கூறும்

 

வானவில்

எனது

நிறைவைச்

சொல்லும்...


அகிலத்தில் 

ஐம்பூதங்களின்

சேர்கையாய்

பிறந்த உயிர்கள் எல்லாம் 

மரணத்தின்

விரிந்த சிறகுகள் கொண்டு 

மேலெழும்பி

பேரான்மாவை அடைவது போல்...

நானும்

கடற்பரப்பில் இருந்து 

தோன்றி

காற்றோடு

மேலெழும்புகிறேன்…


நீரின்றி வறண்டு

எனக்காகக் காத்திருக்கும்

வெளியைக் கண்டால்

காதலோடு கீழிறங்கி

மலர்களையும்

மரங்களையும்

அணைத்துக் கொள்கிறேன்…

 

நான்

தூறலாய் உங்கள்

ஜன்னல் தொடும் போது

எனது மெல்லிசையை

எல்லோரும் கேட்கிறார்கள்

மென்மையான சிலரே

மனத்தில் கொள்கிறார்கள்…

 

காற்றின் சூடு

என்னைப் பிரசவித்தது…

நானோ அதை

தணித்து விட்டேன்…

 

பெண் ஆணிடமிருந்து

பெற்ற பலத்தால்

அவனையே வெல்வது போல்…

 

நான்

கடலின் பெருமூச்சு

சமவெளியின் சிரிப்பு

வானத்தின் கண்ணீர்…

எனவே

 

பாசத்தின்

பெருமூச்சோடு,

ஆன்மவின்

மகிழ்ச்சியோடு

எண்ணற்ற 

நினைவுகளின்

கண்ணீரோடு

 

எனது அன்பைப்

பொழிகிறேன்…

--
S.UMA
9003014271

Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil...

கண்ணீரும் புன்னகையும்
______________________________
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது
துயரங்களை எல்லாம் 
சந்தோஷங்களாக
மாற்றிக் கொள்ள
விழையமாட்டேன்...

எனது  கண்ணீர் 
துக்கத்தால் தோன்றி 
சோகத்தின் வெளிப்பாடாக
நகைப்புக்குள்ளாவதை 
நான் நாட மாட்டேன்...

ஆனால் 
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது கண்ணீர் 
என்னைத் தூய்மையாக்கும்...
வாழ்வின் இரகசியங்களையும்
அதன் மர்மங்களையும்
எனக்கு அடையாளம் காட்டும்...

எனது புன்னகை 
என் மக்களின் 
மிக அருகில் 
என்னை அழைத்துச் செல்லும்...

படைப்பின் மகத்துவத்தை
எனக்கு உணர்த்தும்...

எனது கண்ணீர் 

துவண்ட நெஞ்சங்களின்
துணையாக 
என்னைச் சேர்க்கும்....

எனது புன்னகை 

வாழ்வின் 
அர்த்தத்தை 
நான் அறியச் செய்யும்...

நான் 
மனக்கசப்போடு
நம்பிக்கையின்றி
வாழ்வதைவிட

ஆசையோடும்
ஏக்கத்தோடும்
இறப்பதையே 
விரும்புகிறேன்...

அன்பிற்கும்
ஆராதனைக்குரிய அழகிற்குமான
எனது தேடல்..
எப்போதும் என் நெஞ்சில்
நிலைத்திருக்க வேண்டும்...

தேடல் இல்லாத போது
வாழ்க்கை 
இழிவானதாகிறது....

அன்பிற்காக ஏங்கும் 
ஆன்மாவின் ஒலி
மெல்லிசையை விட
இனிமையானது....

மலர்கள் 
மாலையில் 
ஏக்கத்தோடு தன்
இதழ்களை மூடிக்கொள்கின்றன...

காலையில் 
கதிரவனின் காதல்
முத்தத்தால் தங்கள் 
இதழ் விரிகின்றன....

பூக்களின் வாழ்க்கை 
ஏங்கியும், நிறைவேறியும்
நகர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

மேகம்
கடலிலிருந்து
எழுந்து
நிலம் கடந்து
மலை அடைந்து
சில்லென்று தென்றல் தீண்ட
மழையாய் பொழிகிறது...

மழைநீர் 
மலையில் விழுந்து.,
வயலில் விளைத்து 
ஓடையாய் ஓடி மீண்டும் 
கடலிலே கலக்கின்றது....

மேகங்களின் பயணம் 
பிரிந்தும் சேர்ந்தும் 
தொடர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

ஆன்மாவின் பயணமும்
அப்படியே...

பேரான்மாவிலிருந்து
பிறந்து
துயரத்தின் மலைக்கடந்து,
சந்தோஷ சமவெளி தாண்டி,
மரணத்தின் 
மென் தீண்டலால்
மீண்டும் 
தனது இருப்பிடமான
பேரான்மாவையே அடைகிறது...

இறைவனை நோக்கிய
ஆன்மாவின் பயணம்...

கண்ணீரும் புன்னகையுமாய்

எனவே

எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
நிறைந்து இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

Tuesday, October 29, 2019

விடுதலை

Rabindranath Tagore's poem
'FREEDOM' in Tamil. 

விடுதலை 
_____________

என் தாய்த்திரு நாடே!!!

உனக்கு 
உன் பயங்களில் இருந்து
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
பழமையின் சுமையால் 
தலைக்கவிழ்ந்து
முதுகு வளைந்து 
கிடக்கிறாய்...
வருங்காலத்தின் சைகைகளை
அறிய முடியாமல்....
குருடாகி நிற்கும் உனது
இந்நிலையிலிருந்து...
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....

உன் 
சோம்பலில் இருந்து
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன் 

நீ
இரவின் நிசப்தத்தில் 
உண்மையின் 
பாதைக் காட்டும் 
நட்சத்திர வெளிச்சத்தில் 
நம்பிக்கை கொள்ளாமல் 
ஒளிந்துக் கொள்கிறாய்....

என் தாய்த்திரு நாடே!!!
விதியின் பிடியில் இருந்தும்
உனக்கு
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
கடலில் மிதக்கும் 
கட்டுமரமாய் இருக்கிறாய்...
உனது பாய்மரம்
காற்றின் வீச்சால்
திக்குத் தெரியாமல் 
அலைகழிக்கப்படுகிறது...
உன் துடுப்புகளோ
மரணத்தின் 
கொடிய  பிடியில்
அழுத்தப்படுகிறது...

நீ
கயிற்றால் ஆடும்
பொம்மலாட்டப் பதுமையாய் 
இருக்கிறாய்...

குறிக்கோளற்று 
பழக்கத்தால் ஆட்டுவிக்கும் 
உன் எஐமானனுக்காக
பயத்தோடு காத்திருக்கிறாய்....
என்ற  பழியிலிருந்தும்
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....

உனக்காக காத்திருப்பேன்...

நீ பேசாத பொழுதுகளில்
என் நெஞ்சில் 
உன் மௌனம் நிறைத்து 
காத்திருப்பேன்...

ஆயிரமாயிரம் 
கண் கொண்டு
விடியலுக்காக
காத்திருக்கும்
ஆழ்ந்த இரவு போல்
அமைதியாய் காத்திருப்பேன்...

இரவு விடியும்..
இருள் விலகும்...
வானம் உடைத்து
வரும் பெருமழையாய்.. 
உன் குரல் 
என் செவி நுழையும்....

கூட்டை விட்டு
சிறகு விரித்து
இராகம் பாடும்
உன் வார்த்தைகள்...
தன் மெல்லிசையால்
என் 
இதயப் பூக்களின் 
இதழ்விரித்து
மனம் நிறைக்கும்....

அந்த நிமிடத்திற்காக
அமைதியாய் காத்திருப்பேன்...



வங்காள கவி இரவீந்திரநாத் தாகூரின் Patience என்ற கவிதையை தமிழாக்கும் எனது முயற்சி...


PATIENCE 

 If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil
and its head bent low with patience.

The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.

Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.








Monday, October 28, 2019

தனிமை


எனது 
ஆரவார பேச்சுகள் 
புகழப்பட்ட போதும்...
அமைதியான பண்புகள்
இகழப்பட்ட போதும்...
என் தனிமைப் பிறந்தது ...


“My loneliness was born when men praised my talkative faults and blamed my silent virtues.” - Kahlil Gibran ன் வரிகளை தமிழாக்கும் எனது சிறிய முயற்சி...

Thursday, October 24, 2019

பூவின் பாடல்

நான்
இயற்கை அன்னை 
தினமும் பேசும் 
அன்பு மொழி...

நான்
நீல விதானத்திலிருந்து 
பச்சை விரிப்பில் விழுந்த
நட்சத்திரம் ...

நான்
குளிர்கால 
ஏகாந்தத்தின் விந்து...
கோடையின் மடியில் தவழ்ந்து 
இலையுதிர் காலத்தில் இமைமூடி
வசந்தம் பெற்றெடுத்த
வண்ண மகள்...

காலையில் 
காற்றோடு கலந்து 
கதிரவன் வரவைக்
கட்டியம் கூறுவேன்...
மாலையில் 
பறவைகளின் கீதத்தோடு
பகலுக்கு பிரியாவிடையளிப்பேன்...

இந்த பூமி
எனது வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...
காற்று
எனது வாசத்தால்
நிரம்பியுள்ளது...

நான்
இரவின்
ஆயிரமாயிரம் கண்களால் 
துயில் கொள்கிறேன்...

பகலின்
ஒற்றைக் கண்ணால்
விழிக்கிறேன்...

நான் 
பனியை அருந்தி 
புட்களின் இசையோடு
புற்களின்  அசைவிற்கேற்ப
நடனமாடுகிறேன்...

நான் 
காதலர்களின் பரிசு...
திருமணங்களில் அலங்காரம்...

நான்
இறந்தவர்களுக்கான
கடைசி பரிசு...

நான் 
மகிழ்ச்சியில் ஒரு பாதி...
துக்கத்திலும் ஒரு பாதி...

ஆனாலும் 
நான் 
வெளிச்சம் நோக்கியே 
என்
விழிகளைத் திறக்கிறேன்...
எனது இருண்ட நிழலை
நான் பார்ப்பதில்லை...

மனிதர்கள் 
கற்க வேண்டிய
பாடம் இது...


கலில் ஜிப்ரானின் ' Song of the flower' கவிதையை தமிழாக்கம் செய்யும் எனது முயற்சி  




Wednesday, October 23, 2019

பயம்


எல்லா 
நதிகளின் பயணமும்
கடலை நோக்கியே...

மலையில் பிறந்து ..
காட்டைக் கடந்து ..
வயலில் விளைத்து..
கடலில் விழுவதுதானே..
நதியின் போக்கு...

கடலில் கலக்க நதி
கலக்கம் கொண்டால்
திரும்ப முடியுமா?

உணர்...

கடலில் கலப்பதால்
காணாமல் போவதில்லை நதி
கடலாகவே மாறிப்போகிறது...

உன் வாழ்க்கை நதியை
உனக்கான கடலில் 
கலக்க விடு...

Wednesday, October 16, 2019

வெண்பா

ஆளும் பொறுப்பு உம்கையிலென்றால் என் செய்வீர் என்பது கேள்வி...
என் பதில் வெண்பாவில்... 


ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில்
வீட்டுக் கழிவெல்லாம் வீதியிலே வீசுவோரை
நீட்டுன் கரமென்று நீள்கொம்பால் நான்கடி
போட்டுப் புரியவைப்பேன் பார்


அமுதன் அவர்களின் அறிவுறுத்தல்

தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; நாட்டில் 
அடிதடியால் முன்னேற்றம் ஆகா(து) - உடனடியாய்த்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும் 
சட்டம்தான் நன்மை தரும்!       


 என் பதில்


திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்
தட்டிச் சரிசெய்தா லென்? 

Tuesday, September 03, 2019

சொல்லடா உன்தன் காதல்!!!

சில்லென வீசும் காற்றில்
சிலிர்த்திட மழையின் தூறல்
மெல்லென என்னைத் தீண்ட
மனத்தினில் உன்தன் நேசம்
புல்லிலே பனியைப் போல
பூத்திடும் மாயம் என்ன!!! 
சொல்லிலே தேனைக் கூட்டிச்
சொல்லடா உன்தன் காதல் ...
என்னுளே செய்யும் மாற்றம்
எழுத்திலே வருவ தில்லை
கண்ணிலே உன்தன் காட்சி
கனவிலும் உன்தன் ஆட்சி
எண்ணமோ உன்னை அன்றி
எதிலுமே செல்வ தில்லை
தண்ணெனும் நீரும் என்னைத்
தனலெனக் காய்ப்ப தென்ன!!!

Friday, August 23, 2019

கண்ணனைக் கொண்டாடுவோம்


கண்ணனைக் கொண்டாடு வோமே – மாயக்
கண்ணனைக் கொண்டாடு வோமே…

விண்ணை யளந்திட்ட  தாலே – குழல்
ஊதிக் களைத்திட்ட  தாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…
                                           
மண்ணை  யுண்டத்தன் வாயால் –உயர்
ஞான உரைச் சொன்னதாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

குன்றைப் பிடித்த தனாலே –ஆயக்
குலத்தினைக் காத்ததனாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கோபியர் துகில் கொண்டதனை -தேவி
திரௌபதிக்கு தந்ததனாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

தர்மத்தின் பால் நின்றதனாலே – கெட்ட
தீமைகள் அழித்திட்டதாலே

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கண்ணனைச் சரணடைந்தாலே  – ஞான
கண்ணினைத் திறந்திடுவானே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

கடமைகள் செய்திடுவோமே – அவன்
சொன்னச் சொல்காத்திடுவோமே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…

அன்பை விதைத்திடுவோமே – நல்
அறங்கள் வளரக் காண்போமே…

கண்ணனைக் கொண்டாடு வோமே – மணி
வண்ணனைக் கொண்டாடு வோமே…