Showing posts with label தாகூர் பாடலின் தழுவல். Show all posts
Showing posts with label தாகூர் பாடலின் தழுவல். Show all posts

Tuesday, November 05, 2024

கீதாஞ்சலி 9

மதியில்லாதவனே

உன்னையே நீ ஏன் சுமக்கிறாய்

பிச்சைக் காரனே

உன் கதவண்டையே

ஏன் பிச்சை

கேட்கிறாய்..

 

உனது துன்பங்களை

எதையும் தாங்கும்

இறைவனிடமே

விட்டுவிடு…

வருந்தி

திரும்பிப் பார்க்காதே…

 

உனது ஆசை

உனது உள்ளொளியை

அணைத்துவிடுகிறது..

 

அந்த

புனிதமற்ற நிலை

வேண்டாம்

 

உண்மை அன்புடன்

தரும் கொடைகளையே

நீ பெற்றுக்கொள்

கீதாஞ்சலி 8

ஆடை அணிகலால்
அலங்கரிக்கப்பட்ட 
ஒரு குழந்தை
தனக்கே உரித்தான
மண்ணில் புரளும்
இன்பத்தை 
இழந்து விடுகிறது…

ஆடைகள்
கிழிந்துவிடுமோ
கசங்கிவிடுமோ 
என்று
நகரவும் மறுக்கிறது…

அதுபோலவே
நானும்
உலக இன்பங்களை
சுமந்து
உண்மை இன்பத்தை
அடைய முடியாமல்
தவிக்கிறேன்…

Wednesday, April 10, 2024

கீதாஞ்சலி 4

இறைவா

 

நீ எங்கும் நிறைந்திருப்பவன்

எனவே

நீ வாழும்

இவ்வுடலை

மிகவும் பரிசுத்தமாக

வைத்திருக்க முயல்கிறேன்…

 

பகுத்தறிவை எனக்குள்

விதைத்தவன் நீ

எனவே

எனது சிந்தனையிலிருந்து

பொய்களை

விலக்கிடுவேன்…

 

எனது உள்ளத்தில்

நீ உறைந்திருக்கிறாய்

எனவே

எனது உள்ளத்திலிருந்து

தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி

அன்பை  வெளிப்படுத்த முற்படுவேன்

 

எனது

செயல்களுக்கெல்லாம்

வலிமையை நீயே தருகிறாய்

எனவே

எனது செயல்களின் மூலமே

உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்

Sunday, April 07, 2024

கீதாஞ்சலி 3

இறைவா!

அற்புதமான

உனது இசையை நீ

எப்படி இசைக்கிறாய்..

 

நான் அமைதியோடு

ஆச்சரியத்தில்

மூழ்கிபோகிறேன்..

 

உனது இசையின்

ஒளி

இவ் உலகையே

வெளிச்சமாக்குகிறதே!

 

உனது இசை

வானவெளியெங்கும்

பரவியிருக்கிறதே!

 

உனது

இசையின் பெருவெள்ளம்                           

கடினமான

பாறைகளையும்

உடைத்து

பெருகுகிறதே!

 

உனது இசையோடு

இசைக்க

நானும் எண்ணுகிறேன்

ஆனால்

வார்த்தையின்றி

தவிக்கிறேன்.

 

எனது

வார்த்தைகள்

கவிதையாய்

பரிணமிக்க முடிவதில்லை.

அதனால்

பரிதவிக்கின்றேன்

 

இறைவா

 

உனது

இசையின்

முடிவற்ற வலைக்குள்ளே

என் இதயம்

சிக்குண்டுவிட்டதே!

 

தாகூர்

இயற்கை வழியாக இறைவனைப் பார்க்கிறார்.

இயற்கையின் ஒவ்வொரு அழகும்

இறைவனை காட்டுவதல்லவா!

 

அதனால் தான் பாரதியும்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

என்கிறார் போலும்.

 

தொடர்வோம்..

Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

உன்னைப் பாட

என்னைப் பணிக்கும் பொழுது

எனது நெஞ்சம்

பெருமையால்

அடைத்துக் கொள்கிறதே!

உனது திருமுகத்தை

கண்டதும் எனது

கண்ணில் நீர் 

பெருக்கெடுக்கிறதே!

 

எனது வாழ்வின்

கஷ்ட நட்டங்கள்

ஒன்றாகி

இனிமையான பாடலாக

வெளிவருகிறதே!

 

மகிழ்ச்சில் திளைக்கும் பறவை

கடலைத் தாண்டி 

உல்லாசமாகப் பறப்பதைப் போல்

உனதன்பால் என் சிந்தனை

சிறகடிகிறதே!

 

உன் முன்

ஒரு கவிஞனாகவே

நான் நிற்கிறேன்

எனது கவிதையில்

நீ மகிழ்வாய்

என்று எனக்குத் தெரியும்

 

எனது இசையின்

மெல்லிய அலைகளின்

ஸ்பரிசத்தால்

உன்னைத் தொட்டு

இன்பமடைகிறேன்…

 

இறைவா

அந்த இன்ப மயக்கத்தில்

என்னை மறந்து

உன்னை

‘நண்பனே’

என்றழைகிறேனே!

நீ

இறைவனல்லவா!



அதனால் தான் பாரதியும்

பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்

"எண்ணமிட்டாலே போதும் 

எண்ணுவதே இவ் இன்பத்

தண் அமுதை உள்ளே 

ததும்பப்புரியுமடா

எங்கும் நிறைந்திருந்த ஈச 

வெள்ளம் என் அகத்தே

பொங்குகின்றது என்று 

எண்ணிப் போற்றி நின்றால் 

போதுமடா"

என்று பாடுகிறாரோ!

கீதாஞ்சலி 1

கீதாஞ்சலி

 

தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.

 

1.

இந்த முடிவற்ற பிறவியில்

என்னை

பிணித்திருக்கிறாயே

அதுவே உன் இச்சை போலும்.

 

மிகவும் பலவீனமான

இப்பாண்டத்தை

அடிக்கடி

வெறுமையாக்கி

மீண்டும் மீண்டும்

புத்துயிரை

நிரப்புகிறாய்

 

உனது சின்னஞ்சிறு

குழலில்

அமுத கானத்தை

காடு, மலை,

பள்ளத்தாக்கெங்கிலும்

இசைக்கிறாய்

 

உனது திருக்கரம்

தீண்டியதில்

எனது நெஞ்சம்

இன்பத்தின் எல்லையையே

தாண்டி விடுகிறதே!!!

உனது பெருமையை

பாடத் துவங்குகிறதே!!!

 

எனது சின்னஞ் சிறிய

கைகள் நிரம்பி வழியும் படி

பல அரிய கொடைகளை

நீ தருகிறாய்..

உனது கருணை

அளப்பரியது..

பல காலங்களாய்

தொடர்வது..

இன்னும்

முடியாமல்

தொடர்ந்து கொண்டே இருப்பது…


பாரதியும் அதனால் தான்..

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா இறைவா இறைவா!

என்று பாடுகிறார்...  


தொடர்வோம்..

Friday, April 02, 2021

காத்திருப்பு

தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பமாக ஆண்டாள் திருப்பாவையில் பாடவில்லையா! அது போலவே இறைவனை அடையும் நாளுக்காக காத்திருப்பதையே இப்பாடலில் காட்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்பதைத்தானே ஆழ்வார்களும்/ நாயன்மார்களும்  காட்டினார்கள். அவன் அருளுக்காகத் தான் காத்திருக்கிறார்.

தாகூரின் இப்பாடலைத் தழுவி ஆசை மட்டுமே காரணமாய் முயன்று எனது கவிதையை ஆக்கியிருக்கிறேன். 

Waiting

The song I came to sing
remains unsung to this day.
I have spent my days in stringing
and in unstringing my instrument.

The time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart…..

I have not seen his face,
nor have I listened to his voice;
only I have heard his gentle footsteps
from the road before my house…..

But the lamp has not been lit
and I cannot ask him into my house;
I live in the hope of meeting with him;
but this meeting is not yet.

காத்திருப்பு

எனது வாழ்வின் பாடல்
இன்னும்
இசைக்கப் படாமலே
இருக்கிறது

எனது
வீணையின் நரம்புகளை
நான் சரிசெய்து கொண்டே
இருக்கிறேன்

எழுகின்ற ஆசையால்
எரிகின்ற நெஞ்சத்தில்
எழுதாத என்கவிக்கு
இசையமைத்துப் பார்க்கின்றேன்…

தேடலின்
சுமைமட்டுமே
துணையாகக்
காத்திருக்கின்றேன்…

நான் அவன்
முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
என்றாலும்

என்னருகில் அவன்
காலடி ஓசையைக்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்…

அழைத்தால்
வருவானோ!!
அகம் நெகிழ
நினைத்தால் வருவான்…

இதய வாசல் திறந்தால்
இருள் விலகினால்
வெளிச்சமாய்
அவன் வருவான்…

அவன் வரும் நாளில்
எனது வாழ்வின் பாடல்
இனிமையாய்
இசைக்கப்படும்…