Wednesday, October 15, 2008

அம்மா

10.10.2008

எனது பிறந்த நாள் உனக்கானது..

வலி பொறுத்து

எனைமடி தாங்கி

மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன....

எத்தனையோ தூரங்கள்

நாங்கள் கடந்தலும்

எங்களின் முதலடியை

எடுத்து வைத்தவள் நீ

எங்களுக்கு முகவரி தந்தவளும் நீ...

உன் உயிர்குடித்தே

எங்களின்

வாழ்நாள் கணக்குத் துவங்கியது..

உன்ஆசைகளை

கனவுகளை

கொண்டே

எங்கள் பயணத்திற்கு

பாதை வகுத்தாய்...

முட்களையும்

மலராக்கும்

வித்தை தெரிந்திருந்தாய்...

உன் காயங்களை

எங்களின் பாதையில்

எச்சரிக்கை பலகையாக்கினாய்...

உன்

உழைப்பை

விடா முயற்சியை

தன்னம்பிக்கையை

எங்கள் பாதையில்

வெளிச்சம் தரும் 

விளக்குகளாக்கினாய்...

எங்கள் சிறகுகள் விரிய

நீ வானம் ஆனாய்...

ஒருபுறம் வெப்பம் தாங்கி

மறுபுறம் நிழல் தந்து

நிற்கும் விரூட்சம்...

ஏற்றிவிட்டு அமைதியாய்

நின்றிருக்கும் ஏணி...

வாசம் தந்து

வாடும் மலர்...

சுவாசம் தந்து

வீசும் காற்று....

இப்படி

எத்தனையோ

விஷயங்கள்

நினைவூட்டும்

உனக்கான என்கடமையை....

இனி

மாற வேண்டும் அம்மா..

நீ என் மகளாக...

என் மடித்தூங்கி

உன்கவலை மற..

என் கைப்பிடித்து

உன் காலடி

எடுத்துவை..

நீ கொடுத்த அமுதம்

என் கண்ணில் நீராய்...

நீ கற்றுத் தந்த தமிழ் கொண்டு

ஒரு கவிதை மலர்

உன் காலடியில்...

ஆசிர்வதி அம்மா..

இன்றெனது

பிறந்தநாள்

இனிமை கொள் அம்மா

என் பிறந்த நாள்

உனக்கானது

வலி பொறுத்து

எனை மடிதாங்கி

மாதங்கள் வருடங்கள் 

ஓடிவிட்டன.........