Wednesday, December 24, 2008

தொட்டில் குழந்தைகள்

சின்ன சின்ன மத்தாப்பூக்கள்
சிரிக்கத்தெரிந்த ரோஜாக்கள்
தத்தி நடக்கும் மான் குட்டிகள்
கத்தி பேசும் கருங்குயில்கள்
கண்கள் இரண்டும் வண்டினங்கள்
காலைநேர பனித் துளிகள்
ஒலிஎழுப்பும் ஓவியங்கள்
ஒவ்வொன்றும் இரத்தினங்கள்
சக்கரக்கட்டி மனசுக்குள்
வெல்லக்கட்டி பேச்சுகள்
அத்தனையும் புறந்தள்ளி
அடிமனசை கல்லாக்கி
எங்கே சென்றனர் இவர் தாய்மார்கள்
குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
தொட்டில் குழந்தையாக்கிவிட்டு
எட்டிநின்று பார்ப்பாரோ
ஏக்கம் கொண்டு துடிப்பாரோ
தொல்லை ஒன்று விட்டதென்று
தன்சுகமே காண்பாரோ...
பிள்ளை ஒன்று பெறாததனால்
தள்ளி வைத்த என்கணவன்
தான் அறிவானோ...
எத்தனை சூரியன்கள் எனைச்சுற்றி
எத்தனை மின்மினிகள் அவர்கண்ணில்
முள்குத்தும் ஓர் நினைவை தள்ளிவைப்போம்
நாளை நமதென்று
நமதடியை எடுத்துவைப்போம்