Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!