Showing posts with label இறைவழிபாடு. Show all posts
Showing posts with label இறைவழிபாடு. Show all posts

Sunday, May 09, 2010

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [கபீரின் கனிமொழிகள் என்ற கபீரன்பனின் பக்கத்தை அறிமுகப்படுத்திய திரு.அவனடிமையாருக்கு என் நன்றிகள்]
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா

சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!

Wednesday, May 05, 2010

கந்தா கடைந்தேற வழிகாட்டு

[குறிலீற்று மா கூவிளம் விளம் மா
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]

காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!

Saturday, April 17, 2010

காப்பு உந்தன் கழலே

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா

கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
உடனாடும் வடிவேலும் மயிலும் காண
ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!

Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

இறைவழிபாடு 3

கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

இறைவழிபாடு 2

குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்


பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!


நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!

இறைவழிபாடு -1

மா மா காய்
மா மா காய்


கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!


மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!