Tuesday, April 28, 2009

பட்டாம்பூச்சிக்கு bye bye

வண்ண சிறகசைத்து
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே, என்
எண்ண இதழ் விரித்து
மலர்ந்திருந்த
கவிதை பூக்களில் நீ
தேனை மட்டுமா அருந்திச்சென்றாய்
சில மகரந்தங்களையுமல்லவா
தூவிச்சென்றிருக்கிறாய்.

எத்தனை பூக்களை
அறிமுகம் செய்துவைத்திருக்கிறாய்.

என் கவிதைகளில்
வாசம் விட்டுச்செல்லும்

வண்ணப்பூச்சியே
உன்னை வழியனுப்ப
மனதில்லைதான்..
என்றாலும் சென்று வா...
ஆனால்
மறுபடியும் வா
உன் அரும்பசி தீர
சில அரிய மலர்களில்
தேன் நிரப்பி
தருகிறேன்.

இப்போது
அன்புடன் போய்வா...

இந்த பட்டாம் பூச்சியை நான் அனுப்புவது


பூக்களையும், பட்டாம் பூச்சிகளையும், கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் மறந்து பதுங்கு குழியில் பயந்திருக்கும் பிள்ளைகளின் அவலத்தை தன் கவிதைகளில் கண்முன்னே காட்டும் திரு. தீபச்செல்வன் [
http://deebam.blogspot.com/] அவர்களின் தோட்டத்திற்கு. கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். இவரது 'பதுங்குக்குழியில் பிறந்த குழந்தை 'புத்தகத்தை கண்காட்சியில் வாங்கியதன் பின்பே இவரது வலைப்பதிவைப்பார்த்தேன். நெஞ்சை உலுக்கும் இலங்கை தமிழர் படும் அவதிகள் புகைப்படங்களாகவும் கவிதைகளாகவும் இவரது பதிவில். இவருக்கு இவ் விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். அவர் இதை ஏற்றுக்கொண்டால் பட்டாம்பூச்சி விருது பெருமை பெரும்.

அடுத்ததாக அகரம் அமுதா [http://agaramamutha.blogspot.com/] அவர்களுக்கு
வார்ப்பு இதழில் வெளியான இவரது கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர். சிறந்த மரபு கவிதைகள் எழுதக்கூடியவர். இவரது 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எளிமையாக வெண்பா இலக்கணம் கற்றுக்கொடுத்திருப்பார்.மிக அற்புதமான ஆசிரியர். இவரது தமிங்கிலிஷ்.காம்,இலக்கிய இன்பம், அகரம் அமுதா ஆகிய வலைத்தளங்கள் இவரது மற்ற முகங்களை அடையாளம்காட்டும். இவரது ஊதுபத்தி கவிதை மிக இனிமையானது. இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறார். அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம். இவருக்கு இந்த விருதை குரு தட்சினையாக வழங்குகிறேன். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.

அடுத்ததாக தோழி ஹேமா [
http://kuzhanthainila.blogspot.com/] பின்னூட்டங்கள் வழியாக இவரை அறிந்தேன். யாழ்பாணத்துக்காரர். தன் தேசத்து துயரைத் தன் கவிதைகளில் வழியவிட்டிருப்பார்.ஊடகங்க்கள் மூலம் நாம் காணும் இலங்கை வேறு. தோழி ஹேமா மற்றும் திரு.தீபச்செல்வன் காட்டும் இலங்கை வேறு.இவருக்கு இவ் விருதைத்தருவது இவர் தேசத்து மக்கள் வாழ்வில் மலர்கள் மலரவும், மலர்தோறும் பட்டாம்பூச்சிகள் வட்டமிடவும்,பதுங்க்கு குழிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவும் இறைவனை பிரார்த்தித்த படி.
அதுமட்டுமல்ல இவரடு இன்னொறு வலையான உப்பு மடச்சந்தியில் தோஸ்து சென்னைத்தமிழை ஆராய்ந்து தூள் கிளப்பியிருப்பார். அதற்காக டாக்டர் ? பட்டமெல்லாம் பெற்றிருப்பார். நாமும் இந்த விருதை கொடுத்து வைப்போமே.
எனக்கு பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்திய திரு.சொல்லரசனின் [
http://sollarasan.blogspot.com/] வலைமூலமாகத்தான் பல வலைப்பக்கங்களை புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. என் பதிவுகளில் பின்னூட்டமிட்டு எனக்கு உற்சாகமூட்டினார். அவருக்கு நன்றியுடன் பட்டாம்பூச்சிக்கு bye,bye.