Showing posts with label நேரிசை ஆசிரியப்பா. Show all posts
Showing posts with label நேரிசை ஆசிரியப்பா. Show all posts

Saturday, February 16, 2013

தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!

Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

என்றும் திருநாள் எனக்கு.


ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]

Monday, September 14, 2009

தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]


தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,
எங்கும் வளமுற இருகரை தன்னில்
பாயும் ஆறோ பருகத் தருமே
ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திட
பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
தேராய் என்றும் தருவதே மேலாம்!
ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
பேயாய் மனதில் பயமும் வளரும்
தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!


Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் பாடலுக்கு பின்னூட்டமாக எழுதியது. [முதலில் அப்பாடலைப் படிக்கவும்]

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லா கலையும் எளிதாய்க் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

திரு. தமிழநம்பி அவர்களின் [http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதியது.[முதலில் அப்பாடலைப் படிக்கவும்.]


அருந்தமிழ் உணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்,
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்.
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளாவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்போம் களைதனை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்தியச் செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

எடுமின் வாளை இடுமின் முழக்கம்
கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக்
கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்.
கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

நிலவும் வானில் தேயும் மற்றந்த
மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
அமிழ்தும் சிறிதே ஈடாம்
தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.

Tuesday, September 01, 2009

ஆசிரியப்பா

நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.

[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]