Saturday, April 03, 2010

இயற்கை -2

காற்று

மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!


சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

இயற்கை 1

மா மா மா மா
மா மாங்காய்


மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்...


சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

தமிழர் நிலை - 2

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!

Tuesday, March 30, 2010

தமிழ்

குற்லீற்று மா+ விள+ மா

விள +விள+ மா



பாகு வெல்லமும் தேனும்

பருகிடு கனியதன் சாறும்

போகு மிடமெலாம் வாசம்

புன்னகை வீசிடுந் தென்றல்

ஓடும் ஊரெலாம் ஆறு

ஓங்கிடச் செய்திடு வளனும்

தேடும் இன்பமும் தருமே

தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்



சொல்லச் சுவைத்திடும் நாவும்

சோர்வினை விலக்கிடும் வானின்

வில்லைப் போல்பல வண்ணம்

வியத்தகு தமிழினில் உண்டே

கல்லைச் செதுக்கிய சிலைதான்

கற்றவர் சிந்தையில் தமிழே

இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்

கிருநில மீதினில் ஈடே!

தமிழர் நிலை - 1

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.


பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.