பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!
உன்
பார்வையின் பொறியில்
இன்றும்
பற்றிக்கொள்ளும்
எங்கள் இதயங்கள்
உன்
சொற்களின் சூட்டில்
என்றும்
அடைகாக்கப்படும்
எங்கள் தன்மானம்
உன்
வார்த்தை வாளால்
இன்னும்
வெட்டப்பட வேண்டிய
விலங்குகள் ஏராளம்
என்றாலும்
உன்
கவிதையின் கனலை
கருத்தில் இருத்திய
அக்னி குஞ்சுகளும்
அதிகம் தான்
பாரதி
உன் கவிதைகளுக்கு
எங்கள் நன்றி
உன்
காதல் கவிதைக்கு
எங்கள்
கண்ணம்மாக்களும்
குளிர்ந்துதான் போகிறார்கள்
உன்
சுவாசக் காற்றின்
எச்சம் கொண்டு
சுதந்திரம் சுவாசித்த
எங்கள் இளைஞர்கள்
அந்நிய சந்தையில்
அழிந்திடாதிருக்கவும்
அச்சம் தவிர்த்து
ஆண்மைக் கொள்ளவும்
அவர் நெஞ்சில்
மீண்டும் மீண்டும்
உன்
வார்த்தைகளே
விதையாக்கப்படும்
விழுந்தும் முளைக்கும்
வீரம் கொள்ள
உன்
பாட்டின் வரிகள்
பாதைக்காட்டும்
உன்
பாட்டுக்கு
எங்கள் நன்றி
செத்துக் கிடந்த
எங்கள் செல்களில்
உயிரோட்டம் ஊட்டிய
உன்
சிந்தனைக்கு
எங்கள் நன்றி
பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!