Tuesday, March 10, 2009

வாக்களிப்போம் வாரீர்

மக்களை மக்களால் மக்களுக்காக
நல்லாட்சி நாடகங்கள்
நிறைவேறும் காலமிது...

உழுது பயிராக்கி
உலையிட்டு சோறாக்கி

ஆலையிட்டு நூலாக்கி
ஆடைதன்னை வெளுப்பாக்கி

கல்சுமந்து வீடாக்கி
காலமெல்லாம்
மண்தரையில் படுத்திருப்போர்...

மேடு பள்ளம் சீராக்கி
பாதை வகுத்தே
பயணம் செய்யாதிருப்போர்...

படித்து பட்டம் பெற்று
வேலையின்றி விழித்திருப்போர்...

வேலைக்கிடைத்தாலும்
காலைச்சுற்றுமே
கடன் தொல்லை
விலைவாசி ஏற்றத்தால்
உண்டானதோர் சுமையை
தோளில் சுமந்தே
சுற்றித் திரிந்திருப்போர்...

அனைவரும் வாரீர்!ஆதரவு தாரீர்!

என்றே
உங்களுக்காக ஓர் விழா!...
ஐந்தாண்டுக்கொருமுறை
அஞ்சாமல்
பிச்சை கேட்கும் பெருவிழா...


'பட்டை'காசுக்காக
காத்திருப்போர்க்கு
கட்டுக் கட்டாய்க் கிடைத்திடும் காசு

எட்டி உதைக்கப்பட்ட
ஏழை சனங்களுக்கெல்லாம்
'கட்டி' பிடித்தே
'துட்டு' கொடுகும் தெருவிழா...
எட்டி இருப்போருக்கு
பெட்டி' கொடுக்கும் பெருவிழா...


போனால் வாராது
பொழுது போனால் கிடைக்காது..
திரும்பி வரமாட்டாரிவர்...

தெருவில் குப்பை என்றாலோ
'பஸ்' இல்லை,பாதையில்லை
பள்ளிக்கு போக ஒரு வழியில்லை
மின்சாரமில்லை
அவசரத்திற்கோர் அஸுபத்திரியில்லை
தண்ணியில்லை எண்ணெயில்லை என்றாலோ...

இலவசமாய் தந்திடுவார்
ஓர் வண்ணத் தொலைக்காட்சி
வக்கணையாய் ஓரடுப்பு...

"சமையலோ சமையல்,
ருசியோ ருசி"

எத்தனையோ சொல்லித்தருவார்

போட்டு சமைக்க பொருளில்லை என்றால்
போய்விடுவார் தள்ளி...

எண்ணிப் பார்த்திடுவீர் இதை
எனதன்பு பெரியோரே...

உமது ஒரு ஓட்டுக்கு
ஊர் விதியை மாற்றும்
வலிமையுண்டு....

படித்து உழைத்து பிழைக்க
வழி செய்தாரா?

உண்டு உடுத்தி வாழ
வழி செய்தாரா?

இதை
எண்ணிப் பார்த்து
அளித்திடுவாய் ஓட்டு...
காசை
எண்ணிப் பார்த்து
கலங்காதே மனசு...

எரிகிற கொள்ளியில் எக்கொள்ளி நல்லது
என்பவரா நீர்?

ஓட்டளிக்கவேண்டாம்
மறுத்தளிக்க வாய்ப்புண்டு
மறக்காமல் இதை செய்வீர்...

போடாத ஓட்டெல்லாம்
போடப்படும் கள்ளஓட்டாய்...
போகாதீர் ஓர்நாளும்
தீமைக்குத்தான் துணையாய்...

வாக்களிப்பீர்
அல்லது
மறுத்தளிப்பீர்
ஓர் மடல்...

கண்ணுற்றே நன்நெறியைக் காண்

தழலின்றி இல்லைப் புகையே வெறுப்பின்
விழலின்றி இல்லைப் பகையே-சுழல்கின்ற
மண்ணுலகில் அன்பின்றி விண்ணுலகம் தோன்றாதே
கண்ணுற்றே நன்நெறியைக் காண்.