Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

எப்பொழுதெல்லாம் 
தர்மம் அழிந்து அதர்மம் 
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம் 
'நான் 'அவதரிப்பேன்...

ஏற்றுக் கொண்டோம் 
இறைவா... நீ
கண்ணனாக வா 
'கொரோனா' வாக வேண்டாம்...

அழிக்கப்படுவது 
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...

காக்கப்படுவது 
கருணையாக ,
காதலாக 
இருக்கட்டும்...

மயக்கத்தைப் போக்கி 
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...

மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...

இறைவா 
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...

கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!

Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

மனிதனின் 
சிந்தனை தோட்டத்தில் 
மலர்வது
யோசனை பூக்கள்...

வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள் 
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள் 
மயக்கும்... 

எண்ணங்கள் 
விதையாக 
எழுத்துக்கள் 
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள் 
பூத்துக் குலுங்கும்...

சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...

சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும்  பொதுவாக...