Showing posts with label ஆசிரிய விருத்தம். Show all posts
Showing posts with label ஆசிரிய விருத்தம். Show all posts

Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

சீராய் கல்வி தந்திடனும்
   சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
   சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
  குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
  படியும் நெஞ்சில் நிலையாக...

விளையாட் டோடு விஞ்ஞானம்
  விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
  கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
   ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
  விளையும் நாளை வல்லரசு.

மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

இறைவழிபாடு 3

கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

இறைவழிபாடு 2

குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்


பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!


நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!

இறைவழிபாடு -1

மா மா காய்
மா மா காய்


கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!


மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

Saturday, April 03, 2010

இயற்கை -2

காற்று

மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!


சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

இயற்கை 1

மா மா மா மா
மா மாங்காய்


மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்...


சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

தமிழர் நிலை - 2

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!

Tuesday, March 30, 2010

தமிழ்

குற்லீற்று மா+ விள+ மா

விள +விள+ மா



பாகு வெல்லமும் தேனும்

பருகிடு கனியதன் சாறும்

போகு மிடமெலாம் வாசம்

புன்னகை வீசிடுந் தென்றல்

ஓடும் ஊரெலாம் ஆறு

ஓங்கிடச் செய்திடு வளனும்

தேடும் இன்பமும் தருமே

தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்



சொல்லச் சுவைத்திடும் நாவும்

சோர்வினை விலக்கிடும் வானின்

வில்லைப் போல்பல வண்ணம்

வியத்தகு தமிழினில் உண்டே

கல்லைச் செதுக்கிய சிலைதான்

கற்றவர் சிந்தையில் தமிழே

இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்

கிருநில மீதினில் ஈடே!

தமிழர் நிலை - 1

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.


பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.

Monday, March 15, 2010

பெண் குழந்தை வாழ்த்து

இயற்சீரால் ஆனது
மா/விளம் +மா/விளம் +மா
மா/விளம் + மா/வ்ளம் +மா
[வெண்தளை ஏற்றது.]


1.தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே
நங்கையர் நாடு நலனே
நயனில் நிலையினர் உள்ளார்
இங்கவர் எண்ணம் இழிய
இடியென் றெழுந்த எழிலே
பொங்கு புகழொடு பெண்மை
பொலிந்திட வந்தனை வாழி

அழகுத் தமிழ் பழகு

குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா

மழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************

அருளுடை வாழ்வு

குறிலீற்று மா+ விளம்+ மா
விளம்+ விளம்+ மா



1.வண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.

Sunday, March 07, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]


வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!

Friday, March 05, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

[விளம்+மா+மா]

கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.

[என் ஆசானாகிய திரு தமிழநம்பியின் கருத்தை பணிவோடும்,பெருமகிழ்ச்சியோடும் இங்கே அளிக்கிறேன்.
"பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.பாராட்டு. நன்றி".]

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட
எழுதிடச் செய்வோமோ
என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
செந்தமிழ் கேட்போமோ
என்று எம்மவர் தமிழினில் படித்திட
எண்ணமேக் கொள்வாரோ
நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
நயத்தொடு கற்போமே!

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்

['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

வீட்டு வேலைகள் திறம்பட செய்திட

வேண்டுமாம் பெண்னென்றும்

பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட

பழகிடு நீயென்று

பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்

புயலென திறந்தன்னை

காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை

கவிழ்ந்திட நின்றாரே!

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
காட்டிடும் வகையன்ன
மாலைப் போதினில் வெண்மதி வானிலே
மயக்கிடு மேயென்னை
சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
சூடிய உன்மீது
காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
காரிகை தன்னோடு.

Thursday, March 04, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
[திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சியே என் பாடல்கள்
பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்...........
பாரினர் பாராட்டைப்
பார மேயெனக் கண்டவன் தமிழினில்...........
பண்ணினி தென்றாலும்
பார தம்தரும் பழந்திரு மறைசில...........
பன்மொழிப் பெயர்ப்பாளன்
பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்...........
பாடெனப் புகழ்ந்தானே.]
பாடி பாரதி பாவினில் சொன்னதைப்

பழகிடல் தவறில்லை
கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
குறையவன் வாழ்நாளில்
ஏடி பாரடி இன்றைய நாளினில்
இந்தமிழ் இயலாதோ?
கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
கூடுமே எந்நாளும்...

நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
நாவினுக் கெளிதாமோ
பாடி பாரதி பாவினைத் தந்தது
பழகிடும் தமிழ்தானே
தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
தீதென ஆகாதே
வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
வதைத்தலும் கூடாதே...

கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
குறையுடைச் செயலன்றோ
வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
வேர்ச்சொலும் பலவாகும்
தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
தேறிடுந் தமிழுந்தான்
வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
வகையினை அறிவோமே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]

கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே
கண்ணிலும் காதாலும்
விண்டு நீயுமே உணவினை சுவைத்திட
வேண்டுமுன் வாயாலே
மூன்றும் முக்கியம் நம்முடை சுவாசமோ
மூக்கினால் தானன்றோ
நன்று நம்முயிர் வாழுமிவ் உடலினை
நாமுணர் மெய்யென்போம்.