Sunday, August 12, 2018

வாழ்த்து

புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் பூத்த பூக்களைப்போல்
மலரும் நாட்கள் மகிழ்வோடு
வாசம் பரப்பும் மனத்தோடு..
அலையும் கடலின் ஆழத்தில்
அமைதி தங்கி இருப்பதுபோல்
நிலையாய் தமிழும் இனிமைகளும்
நெஞ்சில் நிறைந்து நலம்வாழ்க!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
உமா...

அன்பு மகனுக்கு..

சிட்டுக் குருவியுன்
பட்டுச் சிறகை
விரித்தே பறக்க
வானம் நாங்கள்…

புத்தம் புதிய
பூவாய் நீ
வாசம் பரப்பும்
காற்றாய் நாங்கள்…

வண்ணக் கலவை
ஓவியம் நீ
வரைந்து மகிழ்ந்த
ஓவியன் நாங்கள்…

சிதறும் கல்லில்
சிற்பம் நீ
செதுக்கித் தந்த
சிற்றுளி நாங்கள்…

வண்ணத் தமிழின்
விளக்கம் நீ
விரித்தே எழுத
வார்த்தை நாங்கள்…

எந்தன் கவிதைப்
பொருளும் நீ
எழுத தோன்றும்
இன்பம் நீ…

எங்கள் வாழ்வின்
இயக்கம் நீ
எம்மைப் படைத்த
இறைவன் நீ…

என்றும் வாழ்வில்
தமிழ் போலே
உயர்வே உயர்வே
உயர்வே காண்….

இனிய
   பிறந்த நாள்
       நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மா, அப்பா...