Friday, February 20, 2015

என்னருங் காதலே - தமிழே

மழலைச்சொல் சென்றேகி சற்றே நானும்
   மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே
குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்
   கூட்டாகி வருமிசைப்போல் எந்தன் நெஞ்சில்
அழகான தமிழேயுன் சொல்லைக் கொண்டேன்
   அழைக்கின்றேன் கலந்திடவே வருவாய் நன்றாம்
கவிதையென துள்ளத்துள் உயிர்த்தே நல்ல
   கூட்டமுதம் செந்தமிழே தருவாய் நித்தம்

பண்ணோடு நானெழுதும் பாட்டில் மேவி
   பைந்தமிழே பேரின்பம் தந்தாய் நாளும்
என்னோடு நீசேர்ந்து எழிலாய் நற்பா
   என்னுள்ளே உதித்திடவே செய்தாய் என்றும்
விண்மேவும் மேகங்கள் மழையைத் தூவ
   மண்மீது உயிர்ப்பூக்கள் மலரும் மாப்போல்
பண்பட்ட கருத்துக்கள் உன்னுள் கொண்டே
   பாட்டினிலே உயிர்சக்தி தந்தாய் வாழி!



காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலம்