Thursday, November 22, 2018

பொய்த்துப் போன மழை




கொட்டி வழங்குமென்று
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….

வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…

வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...

மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…

வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ

மழையே!!!!

லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏட்டிக்குப் போட்டியாக
ஏனிங்கே நீவந்தாய்…

எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?

“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..

அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….

நாங்கள் மட்டும் மாறமாட்டோம்    

Tuesday, November 20, 2018

மரம்


படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?

மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்

மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
 இந்த குணம்...

இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....

மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..

உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..

தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..

மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...

இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து  ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...

உயரம்
மரத்தின்
கம்பீரம்...

மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....

மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....

மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..

மனிதன்
உலகுக்கு
அச்சம்...

மரமோ
உலகின்
ஆச்சரியம்....

படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....