Friday, July 06, 2007

புதுப்பிறவி

என்னுள் கருவாகி
என்னுயிரில் கலந்து
என்ணுணர்வை தனதாக்கி
என்னை எனக்கே அடையாளம் காட்டி
வெளிவரும்
ஒவ்வொரு கவிதையுமே....

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

சீக்கிரமாய் விட்டுவிட்டதால்
பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு
வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'
சீடையும் முறுக்கும்
'ஸ்பெஷல் பாக்' வாங்கிக் கொண்டு
அரைலிட்டர் பால் பாக்கெட்டோடு
உள்ளே நுழைந்தது
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி...

கண்ணா ஷு வை ஓரமாய் வை..
குளி,யூனிபார்ம் மாற்று என்ற
வழக்கமான அர்ச்சனையோடு
ஆரம்பமானது பண்டிகை...

பிஞ்சு விரல்களால் நெற்றியிலிட்ட விபூதி
கண்ணக்குழிவிலும் மூக்கு நுனியிலும் சிதற
குழந்தைக்கண்ணன் ரெடியாகி விட்டான்...

அவனுக்குத் தெரியும்
இன்று விசேஷமென...

பள்ளியிலிருந்து திரும்பும் சாயங்கால வேளைகளில்
வீட்டில் அம்மாவும் சூடான பாலும் டிபனும்
விசேஷம் அவனுக்கு...

அரைடம்பளர் காபியோடு
அவசரக் கோலமும் குளியலும் முடிந்து
'ஆண்டவா' என நின்றப் போது
கோபந்தான் அவன்மேல் சிறிது

அழித்து விட்ட ஒரு கம்சனைப்போல்
அழிக்காதுவிட்ட ஆயிரம் கம்சன்களுக்காக
எந்த யுகத்தில் தான் நீ சம்பவிக்கப்போகிறாய்
என அரை மனதில் யோசித்தாலுமா

எங்கள் வீடுகளில்
குட்டி குட்டிக் குழந்தைகளாய
என்றும் அவதரித்து
புதிது புதிதாய் குறும்பு செய்யும் அவனை
கோபிக்கவும் முடியாமல்

'நெட்டில்' தேடி பிடித்து
மகாராஜபுரம் சந்தானமும்
உண்ணிக்கிருஷ்ணணும்
உருகி உருகி
'ஆடாது அசங்காது வா...கண்ணா....'
என்றழைக்க

என் மடியில்
எங்கள் வீட்டு குட்டிக்கிருஷ்ணன்
மூடிய கைகளில்
முறுக்கும் சீடையுமாய்..
அம்மா 'ஓவரா சாப்பிடலாமா' என கேட்க
கண்ணனுக்கு நைவேதியமும் ஆனது....




Friday, June 29, 2007

வெயில்

குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்
பெரியவர்களின் பொறாமை
அம்மாக்களின் சுயநலம்
அப்பாக்களின் கஞ்சத்தனம்
சான்றோரின் பொய்
தொழிலாளியின் சோம்பல்
பணக்காரனின் நீச்சத்தனம்
ஏழைகளின் சுயவிரக்கம்
ஆண்களின் அதிகாரம்
பெண்களின் புலம்பல்
பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு
பொதுக்குழாயில் சச்சரவு
இவைப்போன்று எரிச்சலூட்டக்கூடியது
மே மாத கத்தரி வெயில்

கண்ணங்குழிந்த குழந்தை முகம்
பெரியவர்களின் அரவணைப்பு
அம்மாவின் மடி
அப்பாவின் கைப்பிடி
ஆண்களின் நேசம்
பெண்களின் புன்னகை
இப்படி இதம் தரக்கூடியது
தெருவோர ஆலமர நிழல்....

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

அந்தக் காலம்
அங்கலாய்க்கிறாள் பாட்டி
எதிரில் நின்றிருப்போமா
எதிர்த்து பேசியிருப்போமா?
சொன்னதை செய்து
கொடுத்ததை சாப்பிட்டோம்....

ஆம்
அது அந்தக் காலம்
நடுங்கும் விரல்களால்
அழுந்த எண்ணெய்த்தடவி
பின்னிவிடும் வேளையில்
பலப்பல கதைகள் சொல்லி
சுரம் காண்ட நேரத்தில்
மிளகு ரசம் சுட்ட அப்பளம்
பண்டிகை காலத்தில்
சீடை கைமுருக்கு
அதிரசம் போளி
அத்தனையும் செய்து கொடுத்து
சட்டி சோற்றையும்
கட்டித் தயிர்விட்டு பிசைந்து
கைகளில் குழித்து விட்டு
வத்தல் குழம்புபோடு
வகையாய் உண்ணவைத்து
வெண்டைக்காய் கத்தரிக்காய்
பாவக்காய் ஆனாலும்
பக்குவமாய் சமையல் செய்து
பாசமாக பரிமாறி

விளையாட்டாய் வேலைவாங்கி
வேடிக்கையாய் சொல்லிக்கொடுத்தது
எல்லாம் அந்தக்காலம்

'லேஸ்' சிப்ஸ் வாங்கி தந்து
குழந்தைகளின் வாயடைத்து
'பந்தம்' 'பாசம்''நிம்மதி'
பார்க்கும் பாட்டிகள்
சொன்னால்
எந்த வேலையும் செய்வதில்லை
இந்தக்காலக் குழந்தைகள்.....

Monday, March 19, 2007

பெண்கள் கும்மி


கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி
பாரதி கண்ட பெண்ணுலகை நேரில்
பார்த்திட வேணுமென கும்மியடி...

பெண்ணுக்கு பெண்ணே பகை யெனவே
பேசி பேசியே பகை வளர்த்தார்
அத்தனைச் சொல்லையும் தூக்கிலிட்டே நாம்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

கற்பனை காவியம் இலக்கியம் நாடகம்
இக்கால கணிணி என்றெதிலும்
எங்களின் கால்தடம் பதித்துவிட்டோம் தூர
தேசத்திலும் கூட பெயரெடுத்தோம்

குடும்ப நலனிலும் குறையுமில்லை கொண்ட
கணவன் மனமும் கசந்ததில்லை
பிள்ளை படிப்பிலும் தேக்கமில்லை கூட
இருப்பவர் யாரும் பகையுமில்லை

உணவு உடைத் தோற்றம் என்றெதிலும்
மாற்றங்கள் ஆயிரம் கண்டதுண்டு தாய்
உள்ளத்தில் மாற்றங்கள் கண்டதில்லை
தமிழ் பண்பையும் நாங்கள் மறந்ததில்லை

நேர்மையுண்டு நெஞ்சில் ஈரமுண்டு
திறமை யுண்டு திட எண்ணமுண்டு
வாய்மை கொண்டு செய்யும் தொழிலெதிலும்
சக்தி துணையுமுண்டு வெற்றி காண்பதுண்டு

கட்டிய இறக்கைகள் கட்ட விழ்ந்தே
விட்டன வானில் பறந்து விட்டோம்
எட்டிப் பிடிப்பவர் யாருமில்லை எங்கள்
பாதையில் தடைகள் ஏதுமில்லை
...............வேறு...............................................................
எத்தனை நன்மைகள் பெற்றாலும் பெண்கள்
ஒடுக்கப் படுவது இன்று முண்டு
எண்ணெய் அடுப்புகள் எரிவதுண்டு இங்கே
பெண்கரு கருவிலே கலைவ துண்டு

என்றைக்கு இந்நிலை மாறிடுமோ சமுதாய
ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடுமோ
இன்றைக்கே பெண்நிலை உயர்ந்திடவே
ஏற்றுக் கொள்வோம் சபத மொன்று...

பிறந்த நாள் பரிசு.

பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும்
தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர

பச்சை புல்வெளியில்லை
பரந்து நிற்கும் வயலில்லை
சுற்றி தோட்டமிட்டு வற்றாத நதியருகே
எட்டாத உயரத்தில் கட்டாக பரணமைத்து
கட்டாத என் மனக்கோட்டை
காலூன்ற வழியில்லை

பச்சைத் தண்ணீரும்
பகிர்ந்துண்ண வேண்டும் நீ

ஆலும் வேலும் இங்கில்லை
அன்னைப்பாலும் சத்தில்லை

முயன்றே விடவேண்டும் மூச்சிங்கே

நேராக எதுவுமில்லை
தோதாக பரிசுனக்கு
நான் தர பூமியிலே

ஆனாலும் சொல்லிடுவேன் கேளாய் என்மகனே
நீயாக நினைத்தால் மாற்றிடலாம் இஃதையெல்லாம்
கருத்தாக ஓர்மரம் மண்தொட்ட இந்நாளில்
விளையாட்டாய் வைத்திட்டால்
விதையாகும் உன் உழைப்பு
வேங்கையாகும் வெற்றி


சோர்வாக வேண்டாம் சொல்லிடுவேன் மகனே கேள்
ஓசோனின் ஓட்டையையும் ஒட்டிவிடும் அறிவுண்டு
இங்கே
உன்கையில் உலகத்தை கொண்டுவரும் கண்ணி உண்டு
வெண்ணிலாவில் கால்வைத்து
வெட்டவெளி நடை நடந்து
பெண்டீரும் வெல்வதனால்
உண்டாகும் நன்மை பல உன்நாளில்
செவ்வாயில் குடியேறும்
திறம் கொண்டு அந்நாளில்
தேர்ந்ததொரு தொழிற்நுட்ப பயிற்சியாலே
வரலாறு திரும்பிடவே
மும்மாரி பொழிவதனால்
மூன்று போகம் விளைவித்து
முக்கனியின் சாறும் தேனும் பாலும் கற்கண்டும்

கலந்து வரும் காவிரியின்
பொங்கிவரும் புனலருகே
பூத்த ஒருசோலையிலே
அத்தரும் சந்தனமும் ஜவ்வாதும் மணந்திருக்க
ஆங்காங்கே முத்தும் பவளமும் மாணிக்கமும் மலர்ந்திருக்க
அறிவிற் சிறந்த பெண்டீரும்
அவர்க்கேற்ற ஆடவரும்
ஆனந்தமாய் களித்திருக்க
அத்தணையும் டிஜிட்டலில் அழகாக பதிவாக
கம்ப்யூட்டரில் விளையாடி கைக்கடுத்த குழந்தைகள்
காவிரியில் புனலாட கம்ப்யூட்டரில் பதிவாகி
கனடாவில் நண்பர்களும்
கண்டுக்களித்ததனை ஏக்கத்தோடு
'நயாகரா' வும் தோற்றுவிடும்
நலத்தோடு நந்தவனந்தன்னில்
"நடந்தாய் வாழி காவேரி" என
நயமாக மெயில் அனுப்ப

நடக்கும் அத்தனையும் நடந்தே தீரும்
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
இஃதே நானுனக்குத் தரும் பரிசாகும்

வளமான வாழ்வுனக்கு வந்துசேரும் நாள்வரையில்
உரைத்திடுவேன் ஓர் சபதம்
மக்காத பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி
மண்ணில் புதையுறவேமாட்டாதொழிப்பேன்
கண்ட இடத்தில் எச்சிலும் குப்பையும் கொட்டி
காற்றையும் வீணாக்க மாட்டேன் உறுதி

தயங்காது செய்வீர் இதனை
பிள்ளையைப் பெற்றோர்
பொறுப்பு நமக்கதிகம் புரிந்தே கொள்வீர்

நீர் நிலம் தீ நீ...

இல்லாதான் இருப்பவன்
கொடுப்பவன் கெடுப்பவன்
ஞானி மூடன்
அனைவரையும்
ஒன்றாகவே தாங்கும் நிலம்...

பசித்தவனின்
பிச்சை முட்டையையும்
பணக்காரனின்
கோழியையும்
ஒன்றாகவே சமைக்கும் தீ...

பிறந்த சிசுவையும்
பெற்றவன் சவத்தையும்
ஒன்றாகவே கழுவும் நீர்...

பெருந் தவத்தோனாயினும்
கொடுஞ் சினத்தோனாயினும்
குழந்தையாயினும்
கிழவனாயினும்
ஒரே சீராக
உள்சென்று வெளிவந்து
ஓர் நாளில்நின்றுவிடும் மூச்சு...

புல்லாகினும்
புழுவாகினும்
பெரியதொரு விலங்காகினும்
மரமாகினும்
மனிதனாகினும்
அவணியில் ஓர் அணுவாகினும்
அணைத்திலும் அவனையே காண்பது
சார்பகற்றி நேர்நின்ற
சான்றோன் மனது...

Saturday, February 03, 2007

மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொங்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது..
மறுபடி வந்தது
மாலை
நினைவில் வந்தது
கெஞ்சலும் கொஞ்சலும்..
சிரித்தும்
மகிழ்ந்தும்
கடந்த நாட்களில்
ஒரு நாள் மாலை
வந்தது ஊடல்..
மறுநாள் அலுவலில்
கையும் ஓடலை
காலும் ஓடலை..
மாலைவரை
காத்திருக்க
மனமும் விடவில்லை..
தொலைபேசி
சினுங்கியது
கணவன் காலிங்.... ....
மறுமுனை
அழுதது
மனைவி க்ரையிங்.... ....?
மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொஞ்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

கருவாய் உன்னுள்
நான் காலந்தபோது
அந்த
இருட்டுச் சிறையில்
இருந்த சுதந்திரம்

வெளிச்ச வெளியில்
வெட்டப்பட்ட சிறகுகளாய்...

மடிகிடந்து
மார்பணைத்து
கழுத்து வளைவில்
முகம் புதைத்து
கண்ணங்குழிய
கண்ட என் கனவு

பஞ்சு மெத்தை தலையணையில்
எட்டாகனியாய்
வட்ட மாத்திரைக்குள்...

அறியா பருவத்தில்
உணரா இனிமைகள்

காலம் கடந்து
தூங்கா என்
கண்களில்
எழுதா கவிதைகளாய்...

கனவு மெய்ப்பட
வேண்டும்
ஓர் உயிர்ப்பு
உன்னுள் கருவாய்
மறுபடியும்...

Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

கையிருப்பைக்
கரைத்து
என் காலுக்கு
ஓய்வளிக்க
கருப்புக்குதிரையாய்
என் வீட்டில் நீ...

கொஞ்சமாய்க்
கொண்டு
அதிகமாய்
கொடுத்தாய் மைலேஜ்...

'சாம்ப்'
உன் பொதுப்பெயர்...
'TN 22 Z 9326'
உன் சொந்த பெயர்...

ஓய்வு பெரும்
தொழிளாளிக்கு
உண்டாகும்
ஓர் ஈர்ப்பு..
தொழிற்சாலைமேல்...

ஆனால்,
உனக்காக
கலங்குவதோ
உன் அதிகாரி...

நீயோ,
வேண்டுதல் வேண்டாமை
இல்லாதவனாய்
அடுத்த
உன் எஜமானிக்கான
உழைப்போடு....


Monday, January 29, 2007

பாரதம்


இரவில் வாங்கிய
விடியல்
எங்கள் விவேகத்தின்
வெளிச்சம்...

எங்கள் கொடியை
உயர்த்தவே
'குமரன்' கள் நாங்கள்
கொலையுண்டோம்...

மாற்றானுடையதை
மிதிக்க அல்ல
மறுக்கவே
ஆசைப்பட்டோம்...

இறக்கப் படாமல் இறங்கிய
கொடியின்
இடத்தை பற்றியது
ஏற்றாத போதும்
எங்கள் உள்ளத்தின்
உச்சியில் பறந்த
எம் கொடி

இன்னா செய்தார்க்கு
நாண
நன்னயம் செய்யும்
நோக்கு அது...

பெற்ற பிள்ளைக்கு
பால் என்ன
பழஞ்சோறும்
புகட்டாதாள் எம்
பாரதத்தாய்...

என்றாலும்
பிச்சை வாழ்க்கை
அச்ச உணர்வை
ஊடட்வில்லை எங்கள்
உதிரத்தில்...

அத்து விட்டது
விலங்கு - ஆக
பெற்றுவிட்டோம்
புதுவாழ்வு...

கட்டிவிட்டோம்
மனக்கோவில்...

அங்கே....

ஜாதி பேய்களை
கொண்று
மத பேதங்கள்ற்ற
ஓர்வாயில்...

காமங்கள் குரோதங்கள்
விட்டு
கடன் தொல்லை
அழித்ததோர் வாயில்...

பட்டப் பகலில்
கொள்ளை மற்றும்
பட்டினிச் சாவுமிங்கில்லை
என
பறைச்சாற்றி
நிக்குதோர் வாயில்...

திறந்து கிடக்குதோர்
வாயிலாங்கே
திறமையுள்ளோர்
எல்லோர்க்கும்
வேலை...

நட்ட நடுவினில்
எம் நாடு
பச்சை பசுமை
போர்த்த பூங்காடு...

பூக்களின் நடுவினில்
புதுநங்கை நல்லாள்
பட்டத்துன்பங்கள்
மறந்துவிட்டாள்
பந்தைபிடித்தே
ஆடுகின்றாள்
பாடுகின்றாள் எங்கள்
பாரதத்தாய்...






Saturday, January 27, 2007

சின்ன சின்னக் கவிதைகள்


.............பிளாட்

மரங்களின் வேர்ப்பிடுங்கி
கட்டப்பட்ட
கூண்டிற்க்குள்
அடைப்பட்ட மனிதன்
புலம்புகிறான்
"காற்றே இல்லை" என

சிறைப்பட்ட காற்றோ
நகரவும் முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது
'நண்பணின்' கல்லறையில்...

............மரக்கதவு

ஒளி பெற்ற
கண்களை
காணத்துடிக்கும்
இறந்தவனின்
தாய்ப் போல
தென்றல் தவழ்கிறது
மரக்கதவுகளில்....


.............மழை

மேகம் பார்த்த வண்ணமயில்
தோகை விரித்து சிரித்தாட
வானம் பார்த்த விவசாயி
வாடிய நெஞ்சம் மகிழ்ந்தாட
ஊர்தி பார்த்து காத்திருந்த
ஊர்மக்கள் பட்டணத்தில்
ஒரு தொல்லை ஒழிந்ததென
ஒவ்வொரு குடமாய் ஒளித்துவைக்க
வெடித்த நிலமும் வளமைபெற
கருத்த மேகம் தந்ததம்மா
தரணியில் எங்கும் மழை மழை...


Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

.................ஐயோ பாரதீ.......
நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய்
நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய்
........ ..... .... .............
...ஈர மணலிடை நின் முகம் கண்டேன்
...உயிரைப் பறித்த கடலிடை
...நின் முகம் கண்டேன்
ஐயோ பாரதீ......
...எங்கும் காணவில்லையே உன்னை
...நீயாக நினைத்து
...ஆயிரம் பேருக்கு காரியம் செய்யும்
...உன் அன்புக்காதலன்....

தலைப் பொங்கல்




மஞ்சள் பூசி நீராடி
...மனதை தூய்மையாக்கி
புத்தாடை உடுத்தி
...புதுமஞ்சள் கட்டிவைத்து
பூவைத்து பூஜித்து
...புதுமனையாள் பொங்கலிட
பூத்துவரும் நன்னாளில்
...தலைப்பொங்கல் திருநாளில்
வாழ்த்திவிட எண்ணுகின்றோம்
..."வாழ்க நீ, பகலவன் போல்
....பார்புகழ பலகாலம்"

பொங்கல் திருநாள்

வாசல் தெளித்து
வண்ணக் கோலமிட்டு
நீராடி, நெஞ்சை
நேராக்கி, நித்தம்
போராடும் உழவர்
பெருவாழ்வு பெற்றிடவே
புத்தாடை உடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
போற்றிடுவோம் ஞாயிற்றை
புவனம் காத்திடவே...

சரஸ்வதி துதி

சிரித்த முகமும் செவ்வரி கண்களும்
செந்தேன் இதழும் வெண்தா மரையும்
வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும்
சூடிடும் தேவியை நாடிடு மனமே...
------------
காரிருள் கூந்தல் அலையென ஆகும்
இருவிண் மீன்கள் கண்ணென ஆகும்
கோவைச் செவ்விதழ் தேனென இனிக்கும்
தேவியின் தேகம் தண்ணொளி நிலவு...
...............
நெஞ்சம் தாமரை நினைவுகள் பூமழைத்
தூவிடும் நேரம் பாயிரம் ஆகும்
வேணியை துதித்திட வேண்டும்வரம் கிடைக்கும்
ஆனந்தம் தருமே அவள்திரு நாமம்...
...............
செந்தமிழ் வளர்க்கும் இயலிசை அறியும்
அன்னையின் அருளே அறிவினை அளிக்கும்
தேவரும் போற்றும் அவள் திருப் பாதம்
துதித்துநீ மனமே துயர்களை வாயே...
...............