Thursday, March 16, 2017

உலக மகளிர் தினம்

இன்றையப் பெண்களின்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...

பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....

அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....

வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...

உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...

பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...

உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...

மார்ச் எட்டு
மகளிர் தினமானது....

சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்

மகளிர் தினம்...

இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...

இன்றோ..

ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....

வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...

ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...

பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...

இதுவா இலக்கு...

பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...

நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....

வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...

வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...

சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...

பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....

ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..

ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..

போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...

ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....