Friday, January 30, 2009

"மெனோபாஸ்"

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"

பாரதியார்.

உள்ளம் சோர்து போகும் நெஞ்சில்
உற்சாக மின்றி ஆகும்
கோபம் வரக் கூடும் கடுஞ்
சொல்லும் வீச லாகும்..

உடலின் உறுதி போகும் நாளும்
தேயும் எலும்பும் வாட்டும்
கூடும் எண்ணம் ஓடும் எதிலும்
நாட்ட மின்றி வாடும்..

குற்ற மவள்மேல் இல்லை இயற்கை
மாற்ற மிந்த தொல்லை
நாற்ப தொத்த வயதில் பெண்மை
நலன் கெடுவ துண்டு..

உண்மை நிலை புரிந்து நீயும்
ஒத்து ழைத்து வந்தால்
நீரில் பட்ட நெருப்பாய் இன்னல்
தானும் பட்டுப் போகும்..

கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்
பெற்றப் பிள்ளைக் கூட கொஞ்சம்
பொறுமைக் காட்ட வேண்டும்..

காதல் சொன்ன கண்கள்
கவலை காட்டும் போது
கரும்புக் கதைகள் பேசி அவள்
கருத்தை நீயும் மாற்று..

ஓய்ந்து போன நெஞ்சில்
உற்சாகம் கொஞ்சம் ஊற்று
தாரம் அவள் துயரில்
தாயாக நீயும் மாறு..

தேனான சொல் ஊற்று
தீர்க்கும் அவள் தாகம்
பாடான இப் பாடு
பார்த்தால் சிறிது காலம்...

சத்தான பழமும் பாலும்
காயும் உணவில் கூட்டு
சீரகும் வாழ்வு அதனை
சிந்தை யில்நீ ஏற்று...

நேராக அவளும் நெஞ்சம்
தெளிவு பெறும் போது
தாயாக மாறி அவளே
தாங்கி டுவாள் உன்னை...

வயதான காலம் வாழ்வில்
வந்து விட்டப் போதும்
தோழி யாக நின்று
தோள் கொடுப்பாள் என்றும்...

5 comments:

ராம்.CM said...

நேராக அவளும் நெஞ்சம்
தெளிவு பெறும் போது
தாயாக மாறி அவளே
தாங்கி டுவாள் உன்னை...
அருமை!...




தோழியே!நன்றி!.

அகரம் அமுதா said...

கருத்துகள் செரிவாக இருக்கின்றன. இதைக்கவிதை என்பதை விட பாடல் எனச்சொன்னால் பொருந்தும் எனக்கருதுகிறேன். மெட்டுக்காக எழுதியது போல் இருக்கிறதே! தாங்கள் முயன்றால் சந்தக்கவிதைகளைப் பெருமளவில் வெற்றிகரமாக எழுதமுடியும். முயன்றுபாருங்கள்.

உமா said...

மிக்க நன்றி.

தமிழ். சரவணன் said...

//கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்//

ஓ இதுபோலூம் உண்டா சகோதரியே...

உமா said...

//கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்//

ஓ இதுபோலூம் உண்டா சகோதரியே..//

ஹி ஹி.....
முதல் வருகைக்கு நன்றி தமிழ் சரவணன்.