Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் பாடலுக்கு பின்னூட்டமாக எழுதியது. [முதலில் அப்பாடலைப் படிக்கவும்]

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லா கலையும் எளிதாய்க் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!

4 comments:

தமிழ் said...

தங்களின் பாக்கள் ஒவ்வொன்றும் அருமை

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

தமிழ் said...

இதை வெண்பா எழுதலாம் வாங்க என்னும் பதிவில் என்னுடைய கருத்துரை இட்டு இருந்தேன். இது ஏனோ அங்கே இடம் பெற வில்லை.தங்களின் கேள்வியை இருவேறு பதிவுகளில் காண்டேன்.அறிந்தவற்றை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.கட்டாயம் இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

// உமா கூறியது...

மற்றும் ஒன்று. நீங்கள் பல இடங்களில் கரணியம் என்று எழுதுகிறீர்கள். காரணம் என்பது தவறா?
வேண்டா - வேண்டாம் என்பது போல் இது தவறோ என்றே கேட்கிறேன்./

/ஐயா இன்னுமொரு விடயம் திரு.அகரம் அமுதா அவர்கள் காரணியம் என்பதே தமிழ் வடிவம், காரணம் என்பது தமிழ் வடிவமல்ல எனக்கூறினார். அதன்காரணியத்தைச் சற்றே விளக்கவும்.
மிக்க நன்றி./

/ அகரம் அமுதா கூறியது...

தமிழறிஞர்கள் காரணம் தமிழ்வடிவமில்லை என்றும், கரணியமே தமிழென்றும் கூறுகின்றனர். பயன்படுத்தியும் வருகின்றனர். அதையே நானும் பின்பற்றுகின்றேன்.//




கரணம் -‍ காரணம். கரு + அணம் = கரணம்
கருத்தல் மேகம் கருத்தலைக் குறிக்கும்

கரு - கார் மேகம் சூல் கொள்ளும் போது கருத்திருத்தலின் மக்களின் சூலும் கரு கருப்பம் எனப்பட்டது.

மேகம் கருத்து மழை பொழிவது உலக வினைகட்கெல்லாம் காரணமா யிருத்தலின் கரு என்பது காரணத்தைக் குறிக்கும்.

வானின் றுலகம் வழங்கி வருதலான்.
என்றார் திருவள்ளுவரும்

கரணம்,கருவி என்பன கரு என்னும் ஒரு வினைத் தொழிற் பெயர்கள். திரிகரணம் = முக்கருவி அந்தக்கரணம் = உட்கருவி

கரணம் = அணம் விகுதி
கருவி = வி விகுதி

கரணத்தின் நீட்டம் காரணம்
கருவி மேகத்தின் தொகுதியை உணர்த்தும்
எ‍டுத்துக்காட்டு :
" கருவி மாமழை "
" கருவி தொகுதி " -‍ தொல்காப்பியம்

கார் + அணம் = காரணம்
கார் + இயம் = காரியம்
இயம் = தொழிற்பெயர் விகுதி

என்றும் சொல்வதுண்டு.

இன்னும் இராம்.கி அவர்கள் அற்புதமாக கூறிப்பிடுவார்.

/வான்நிமித்திகத்தின் படி, நாம் பிறந்த போது கோள்கள் இருந்த நிலையை வான நூலின் படி ஒரு படமாகப் பிடித்து, ஒரேவிதமான படப்பிடிப்புகளை எல்லாம் ஒரு தனி வகையாகப் பார்த்து, அந்த வகையில் இருப்பவருக்கு இன்னவிதமான வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவது வான்நிமித்திகம். [அந்தப் படப்பிடிப்பைத் தான் சூல்தகம்>*சொல்தகம்>சாதகம் என்று சொல்லுவார்கள். சூல்தல் = கருவுறுதல். சூல்த்தல் = கருவாக்குதல் (பிறவினை); சூலி, சூற்பெண்டு = கருவுற்ற பெண். கரு வளர்ச்சியுற்றுப் பிறக்கும் செயலை சூனித்தல்>சினைத்தல் என்று சொல்லுவார்கள். இதே போல கனித்தல் என்ற சொல்லும் பருவநிலை எய்தி உருவாதலைக் குறிக்கும். கனித்தல் / ஈனித்தல் / சினைத்தல் என மூன்று வினைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சினை என்ற சொல் பொதுவாக அஃறிணையில் கன்று, மகவு என்பதைக் குறிக்க, சூனு என்ற சொல் வடமொழியிலும், sun/sonne என்ற சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளிலும் மகனைக் குறிக்கப் பயன்படும். இதே போல, சூல்த்தம்>சூத்தம்>சூத்ரம் = சொல்ல வருவதை சுருக்கமாய், எல்லாம் அடங்கிய கருப் போலச் சொல்லுதல்.]/

/காரணம் என்ற சொல் கரு என்னும் சொல்லடியின் நின்று பிறந்தது என்ற சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்று ஆகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம். கருத்தல் என்பது தோன்றுதல் பொருளைக் குறிக்கும். காரணம் தமிழாக இருக்கும் போது, கருவில் இருந்து ஏற்பட்ட காரியம் என்னும் சொல்லோ ஓர் இருபிறப்பிச் சொல். கருமம் என்பது அதற்கு இணையான தமிழ்ச்சொல்./

/முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்!
* இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar
* காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
* ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
* நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!/

இன்னும் ஒரு இடுகை இதையும் படிக்க வேண்டுகின்றேன்.
இது சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை



அன்புடன்
திகழ்

தமிழ் said...

இதையும் படித்துப் பாருங்கள்

காரணம் - காரியம்

அன்புடன்
திகழ்

உமா said...

திகழ், 'என்னடா சரியான காரணம் புரியவில்லையே' என்று நினைக்கையில் அழகாக விளக்கியுள்ளீர். மிக்க நன்றி. பல்வேறு பணிகளுக்கிடையில் எனக்கு விளக்கமளித்தமை மகிழ்சியளிக்கிறது. நன்றி.