Monday, September 14, 2009

தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]


தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,
எங்கும் வளமுற இருகரை தன்னில்
பாயும் ஆறோ பருகத் தருமே
ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திட
பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
தேராய் என்றும் தருவதே மேலாம்!
ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
பேயாய் மனதில் பயமும் வளரும்
தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!


கண்ணோரம் கண்ணீர்க் கடல்

மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனைப்
படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே
கண்வைத்துக் காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் பாடலுக்கு பின்னூட்டமாக எழுதியது. [முதலில் அப்பாடலைப் படிக்கவும்]

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லா கலையும் எளிதாய்க் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

திரு. தமிழநம்பி அவர்களின் [http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதியது.[முதலில் அப்பாடலைப் படிக்கவும்.]


அருந்தமிழ் உணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்,
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்.
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளாவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்போம் களைதனை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்தியச் செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

எடுமின் வாளை இடுமின் முழக்கம்
கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக்
கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்.
கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

நிலவும் வானில் தேயும் மற்றந்த
மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
அமிழ்தும் சிறிதே ஈடாம்
தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.

Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]

[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.

ஆசிரியப்பா

நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.

[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]

Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும்
கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும்
கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும்
கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து.

விரைவாகவும் அதிகமாகவும் பாயும் வெள்ளம் கரையைக்கடந்து அழிவை ஏற்படுத்தும், அதுபோல் அதிகமான தீயும் அழிவை ஏற்படுத்தும். அதுபோல் மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வமும் அழிவை ஏற்படுத்தும்.மேலும் அப்பொருளை பாதுகாக்கும் அச்சமும் அது தரும் துன்பமும் விரைந்து நம்மைச் சேரும். பிறர்க்கு அச் செல்வத்தை கொடுத்து உதவுவதால் நம் அச்சம் தீர்ந்து மகிழலாம்.
கடி என்னும் சொல் விரைவு,மிகுதி,அச்சம்,நீக்கல் என பல பொருள் தரும்.
கடிந்தேகு வெள்ளம்- விரைந்து பாயும் அதிகமான வெள்ளம்
கடிந்துறு செல்வம் - மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வம்.
கடிதரு துன்பம் - அச்சம் தரும் துன்பம்
கடிந்தே மகிழ்வாய் - நீக்கியே மகிழ்வாய்.

Wednesday, August 26, 2009

படத்திற்கான பாடல்.வெக்கம் இது வெக்கம்

வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்;
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.

[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]

Tuesday, August 25, 2009

படத்திற்கான பாட்டு


சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட
அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ?
நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல்
பலருயிர் போக்கினையே ஏன்?

மதமா மயக்கிய துன்னை? களிறே
மதமா பிடித்த துனை;நல் இளந்தளிருன்
பிஞ்சு மனதைக் கெடுத்து உனையேக்கொல்
நஞ்சாய் நசுக்கிய தார்?

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாயே! வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
இக்கண மேவரட்டும் சா.

சற்றே மாற்றியப் பின்.

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாய் வெறிச்செயலால் வீழ்ந்தோரின்
வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
தாழ்ந்தாய் தகாதனச் செய்து.



Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன்.

பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் கனன்று.

[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.]

இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை.

பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும்.

காதல்:
//காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..//
எவ்வளவு அழகான வரிகள்.
உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது.
காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும்.
காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும்.
காதல்
அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சிப்
பறக்கச் செய்யும்..
தாழ்ந்த விழி
தரைநோக்க
தனித்தியங்க்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்..

பூவிதழ்
புன்னகை வீச
புகம்பம் வெடிக்கும்
இதயத்தில்

இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்

மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்
கட்டில் தாண்டியும்
கரம் சேரும்..

காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்.

கடவுள்:
கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..

ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள்.
நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே.

அழகு:
இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு.

தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே.

அடுத்ததாக திரு. திகழ்மிளிர்.
இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.

அன்புடன் உமா


கடவுள்

காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில்
காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில்
வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப்
பற்றியே பாடுமென் நெஞ்சு.

[ என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது ஒர் உணர்வு. அன்பு, நேர்மை,காதல் போல் கடவுளும் ஒர் உணர்வு.அதை காட்ட இயலாது. தனித்தனியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்பவைக்கவே. மனம் விசித்திரமானது. அறிவியல் உண்மைகளை சுலபமாக நம்பாதமனம் சில விடயங்களை சிறிதும் அடிப்படையில்லாமல் நம்பும். மனதின் போக்கிலேயேச்சென்று மனதை கட்டுபடுத்தும் செயலுக்கு உருவவழிபாடு அவசியமாகிறது. மனதில் அன்பையூட்டும் கண்ணணும், கந்தனும், கடிகணபதியும் அனைவரும் ஒருவரே.கண்ணனாய் நினைக்கும் போது அன்பு மேலோங்குகிறது. கந்தனாய் வணங்கையில் நேர்மை நெஞ்சில் நிலைக்கிறது, கணபதியைத் தொழுதால் எண்ணியக் காரியம் முடிக்கும் திரன்வளர்கிறது.]

Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

சினம்

விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.

[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]

Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

மருத்துவரைப் பார்த்திடவே
.........மனைவியோடு சென்றிருந்தேன்..
அருந்தவமே நான்புரிந்து
.........அங்குள்ளே சென்றேனே..
ஏறிட்டு முகம்பார்த்து
..........எழுதியதை கொடுத்துவிட்டார்..
ஏதென்று பார்க்குமுன்னே
..........இருநூறு என்றிட்டார்...
எடுத்ததையும் தந்துவிட்டு
...........எழுந்துவந்து விட்டேனே..
மருந்துசீட்டு தன்னோடு
...........மருந்தகந்தான் சென்றேனே...

சீட்டு'பார்த்து சிரித்துவிட்டு
..........எட்டுநூறு ஆகுமென்றான்..
கட்டுபடி ஆகாதே
.........கண்டபடி செலவுசெய்ய!
சின்னதொரு ஜலதோசம்
..........சீக்கிரமாய் மருந்துகொடு..
பட்டென்று என்மனைவி
...........பாய்ந்தங்கே கேட்டிடவே..
சட்டென்று சிலமருந்து
..........எடுத்தவனும் நீட்டிவிட்டான்..
சில்லறையாய் மூனுரூபாய்
............தந்தவளும் வந்துவிட்டாள்...

சோறுதண்ணி இல்லாம
.........சோர்ந்திருப்பாள் என்றெண்ணி
மாலைவந்து பார்க்கையிலே
..........மலைத்துநின்றேன் நானங்கே..
சோர்ந்தமுகம் ஏதுமில்லை
..........சோதிமுகம் காட்டிநின்றாள்..
முல்லைதனைச் சூடியவள்
...........மல்லிகையாய் சிரித்திருந்தாள்
எப்படியோ போகட்டும்
...........இருநூறு வீணாச்சே
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா
...........அய்யய்யோ வீணாச்சே!!!

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.

படத்திற்கான வெண்பா.


மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு
வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
மரமும் நிழலை மறந்து.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]