Thursday, September 14, 2023

நிலவே!!!

நிலவே!

உன்னை நாங்கள்

அடைந்து விட்டோம்!

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

இந்திய மக்களின்

இதயத் துடிப்பல்லவா நீ!

 

ங்கள் பாட்டிமார்கள்

உன்னைக் காட்டித்தான்

தம் பிள்ளைகளுக்கு

உணவளித்தார்கள்

 

எங்கள் தாய்மார்களோ!

நிலா நிலா ஓடிவா!

என்று உன்னைத்

துணைக்கழைத்தார்கள்...

 

நாங்களோ !

உன்னை அடைந்தே விட்டோம்..

 

எவ்வளவு ஆனந்தம்

எங்களுக்கு!!

 

ஒருவேளை

நாளை எம் பிள்ளைகள்

உன்னை

சொந்தம் கொண்டாடுவார்களோ!

 

நிலவே

உனக்கும்

எங்களுக்குமான

இந்த இடைவெளியை

 

அன்று

கற்பனையால் கடந்தோம்..

 

இன்று

அறிவியலால் அளந்தோம்..

 

நிலவே

உன் அழகு

இன்றும் எங்களை

வசப்படுத்துகிறது..

 

எங்கள் குழந்தைகளுக்கு

கற்பனையை

கலையை

உன்மூலமாகத்தான்

சொல்லித்தருகிறோம்…

 

எங்கள் காதலுக்கும்

கவிதைக்கும்

நீயே அடிப்படை…

 

ஆனாலும்

 

நிலவே!

சற்று தள்ளி நில்

மனிதனை

அருகில் வரவிடாதே!

 

உன் அழகு

கனிமங்களை

அவன்

அள்ளிக் கொள்ளலாம்…

 

அழகிய பூமியில்

ஆயிரம்

கோடுகள்

கிழித்தவர்கள் நாங்கள்..

 

இன்றும்

நடந்துக் கொண்டே

இருக்கிறது

கோடுகளுக்கான

சண்டை …

 

உன்னையும்

துண்டாடவிடாதே!

 

வடதுருவம்

தென் துருவம்

என்று

இப்பொழுதே

துண்டாடுகிறார்கள்..

 

மனிதனை

அண்டவிடாதே!

 

எங்கள் சந்திராயனைத்

தூங்கவிட்டுவிடு

சந்திரனே!

 

உன் அழகை

கனிமங்களை

மனித இச்சைக்கு

அளித்துவிடாதே!

ஆசைக்கு

அளவில்லாதவர்கள் நாங்கள்

 

நிலவே!

அழகே!

உன்னைத் தொட்ட

எங்கள்

இதயத்தில்

உன் காதல்

என்றும் நிலைத்திருக்கும்…

 

எங்கள்

ஓவியத்திற்கு

வடிவமாய்

 

கவிதைக்குப்

பொருளாய்..

 

காதலுக்கு

துணையாய்

 

மட்டுமல்ல

 

எங்கள்

அறிவியல் அறிவிற்கும்

சாட்சியாய்..

 

என்றும், என்றும்

நீயே…

நிலவே !!!

Sunday, August 13, 2023

அலுவலகம்


இது ஒரு நீண்ட
இரயில் பயணம்…

25 முதல் 60 வயது வரைத்
தொடரும் நெடிய பயணம்

அறியாத வயதில்
ஆசையாய் ஏறிக்கொள்வோம்

அங்கும் இங்கும் தேடி
நமது இடத்தை கண்டிபிடிப்போம்

நமது இடம்
நமக்குப் பிடித்தது தானா?

இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்…

நமது உடன் பயணம் செய்பவர்கள்
நமக்கு பிடித்தவர்களா?

இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்…

உடன் வருபவர்கள்
ஜாதி, இனம், மொழி என
எப்படி பட்டவரானாலும்
பயணம் ஒன்றுதான்

சிலருக்கு
ஜன்னல் அருகில் இடம்
கிடைக்கும்…

சிலருக்கு
மத்தியில் …

சிலருக்கோ
பர்த் கிடைக்கும்

ஜன்னல் அருகில்
இடம் கிடைத்தாலும்
முனகிக் கொண்டே சிலர்.

சிலர் ஆடிப்பாடி
கொண்டாட்டமாய்…

ஆர்வமாய் சிலர்
இங்கும் அங்குமாய்
திரிந்தபடி...
  
சிறிது தூரம் சென்றதும்
ஆட்டம் பாட்டம் குறைந்து
தனக்கான உணவை
வைத்துக் கொண்டு
பயணம் தொடரும்..

என் இடம், உன் இடம்
என்ற பாகு பாடு மறைந்து
உணர்வுகள் பரிமாறப்பட்டு
அமைதியாய் சில நேரம்…

சிலருக்கு
வாழ்க்கைத் துணையை
கூட பயணம் கொடுக்கும்

ஒரு சிலருக்கு
ஏசி அறை
கிடைக்கும்…

அனால் அங்கு
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதே
இல்லை….

சிலர் பேச வந்தாலும்
சிறிது நேரத்தில்
அமைதியாய் விடுவார்கள்

சிலரோ
முதல் வகுப்பில்
பயணிப்பார்கள்..

இவர்கள்
தனிமையைத்
தானாகத் தேடிக் கொண்டவர்கள்
யாரோடும் பேசமாட்டார்கள்.

தனக்கு வேண்டியதை
உதவியாளரிடம்
கேட்டுப் பெறுவார்கள்.

அவர்கள் அறை என்னவோ
பெரியதுதான்
அனால் உதவிக்குக் கூட
உள்ளே செல்ல முடியாது

60 வயதில்
ஒவ்வொருவராக
இறங்கி கொள்வார்கள்…

பயணிகள்
பிரியாவிடை கொடுப்பார்கள்
தொலைபேசி எண் கூட
பகிர்ந்து கொள்வார்கள்

அனால் பிரிந்ததும்
மிகச்சிலரே தொடர்வார்கள்

இரயில் விட்டு
இறங்கியப் பிறகு
வாழ்க்கை பொதுவானது

முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
என்பதெல்லம்
மறைந்துப் போகும்..

வாழ்க்கை பயணத்தில்
ஜாதி இனம் மொழி
என்று எல்லா
வித்தியாசங்களும் இருக்கும்
ஆனால்
இவற்றைத் தாண்டி
நாம் வளர்ந்து விடுவோம்…

சிலர் அந்த எண்ணத்துடன்
சிறிது தூரம் செல்வார்கள்
அனால் வாழ்க்கை
கற்றுக் கொடுக்கும்

சில சமையம்
மீண்டும் வருவோம்
சிலரை ஏற்றவோ
அல்லது இறங்குபவர்களை
வாழ்த்தவோ

அப்போது
நமது இடம்
யாரோ ஒருவருடையது…
அது நமது சொந்தமில்லை…

நாமோ அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை….

வாழ்க்கை பயணத்தை
அறிந்தவர்களாகிறோம்...

Saturday, August 12, 2023

இரகசியம் அழகானது

பூவின் இரகசியம்

தேன்...

மெதுவாக

வண்டை அழைக்கும்….

 

புல்லின் இரகசியம்

பனித்துளி...

சூரியனோடு

சொந்தம் கொண்டாடும்…

 

மேகத்தின் இரகசியம்

மின்னலாய்

வெளிப்படும்

 

நீள் நதியின்

இரகசியம்

வயல்களில்

விளைச்சலாய்…

 

காற்றின்

இரகசியம்

தென்றல்...

 

கடற்கரையின்

இரகசியம்

கிளிஞ்சல்கள்…

 

மண்ணின்

இரகசியம்

மரங்களாய்…

 

வானோ

வெள்ளி நீர்த் தூறலாய்…

 

ஒளி இருளோடு

பேசும் இரகசியம்

நட்சத்திரங்கள்…


இருள் ஒளியோடு

பேசும் இரகசியம்

நிழல்களாய்...

 

குழந்தையின்

இரகசியம்

சிரிப்பு…

 

பெண்ணின்

இரகசியம்

பார்வை…

 

ஆணின்

இரகசியம்

அவன் அணைப்பில்….

 

எழுத்தின்

இரகசியம்

இனிய

கவிதையாய்….

 

இரகசியம் அழகானது…

Monday, July 24, 2023

நட்பு

எனது
தொலைபேசியிலிருந்து
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்

நட்பு என்ன
பணமா?
பதவியா?
இல்லை
வலைத்தளங்களில் விழும்
“லைக்’ குகளா?

அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்.

அடடா!
என் கவிதைகளைப்
பகிர
நண்பர்களில்லையே!!!

தனிமையில்
நான் எழுதிய
கவிதைகளைப்
பகிர்ந்துக் கொள்ள
நல்ல
நட்பிற்காக
காத்திருக்கிறேன்…

கிழிசல்

என்
கவிதை புத்தகத்தை
நீ
திருடிக் கொண்டுவிட்டாய்…
இல்லை என்று
சத்தியம் செய்தாய் நீ..
என்னிடம் கேட்டால்
நானே கொடுத்திருப்பேனே!

என் இதயத்தின்
கிழிசலில்
நட்பு
மாட்டிக் கொண்டு
உடைந்து போனது….

கவலை மற

மூளையில்
இரத்தக் கசிவு
எனக்குத் தான்…

சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்

'நடப்பது நடக்கும்
கவலை மற'…

ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?

'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…

என் துக்கங்களை
எங்கே
எறிவது….

நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…

ஆஹா
இது என்ன!

என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!

என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!

கலையே!
கற்பனையே!!
நான் உன்னை
காதலிக்கின்றேன்..

இந்த
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?

------

Sunday, April 17, 2022

புனித வெள்ளி

ஆணியில் அறைந்தது
ஆணவம் செய்தது… 

அளவிலா கருணையோடு
அன்றுயிர்த் தெழுந்த
ஆண்டவன் செய்கையோ
அன்பின் எல்லையது...

மாயையால் மனிதர்
மாண்பினை இழந்தனர்
மாசிலா தேவனோ
மன்னித்து அருளினார்...


இன்றிந்த நாளிலே
இறைவன் அருளினை
இதயத்தில் ஏற்றுவோம்...
என்றும் போற்றுவோம்....

புனித வெள்ளி
நம் மனத்தை  புனிதமாக்கட்டும்!!!

உமா

Thursday, March 31, 2022

இனியவைகூறல்



வேலினை ஒத்த கண்கள்

வில்லினை ஒத்த நெற்றி

தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்

தாமரை நிறத்தால் ஒக்கும்

தோளிரண்டு மூங்கில் என்றும்

துடியிடை மின்னல் போலும்

ஆயிழை தன்னைக் கண்டார்

யாரவள் மனத்தைக் கண்டார்???

Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

அன்று!

அவள் கண்களில்

ஒளி இருந்தது

அவளோ!

இருட்டு அறையில்

சிறைப்பட்டிருந்தாள்…

 

சுதந்திர வெளிச்சம்

சூழ்ந்த போது

அவள் பார்வையோ

பறிக்கப்பட்டது…

 

பறந்த வெளியில்

பாதை தெரியவில்லை…

 

அடிமைச் சிறைவிட்டு

அடியெடுத்து வைத்தாலும்

ஆண்களின்  பார்வை

அச்சமூட்டியது…

 

அடிமைக் கூடு

அழிக்கப்பட்டப் போது

அவளது

அழகிய சிறகுகள்

சிதைந்தே இருந்தன…

 

எதிர்பார்ப்புகளால்

அவள்

இயக்கம்

தடுக்கப்பட்டது…

 

உலகம்

பட்டுப்பூச்சியை

பருந்தாய்

பறக்கச் சொன்னது…

 

பறந்தால் மட்டுமே

பெண் எனச் சொன்னது…

 

இருட்டு அறையிலும்

இயங்கிய கண்கள்

வெளிச்சம் கண்டு

விலகிச் செல்லுமா?

 

சின்னச் சிறகை

மெல்ல விரித்தே

வானம் அளந்தது.

வண்ணத்துப் பூச்சி..

 

பறந்த வெளிதான்

பாதை வகுத்து

பயணம் தொடர்ந்தாள்

பெண்

 

கிழட்டுப்

பார்வைகளை

கிழித்து எறிந்தாள்

 

புதிய உலகம்

புதிய பார்வை

புதிய பாதை

புதிய பயணம்

 

புதிதாய் என்றும்

பொலிவாள் பெண்…

 

பூவும் அல்ல

புயலும் அல்ல

 

அவள் பெண்…


(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது) 

Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

முடியாது என்பது
ஒரு கெட்ட வார்த்தை...
 
பொய்யை, 
பழிச்சொல்லைக் காட்டிலும்
பெரும் கேடு 
விளைவிக்கக்கூடியது...
 
உறுதியை 
உற்சாகத்தை
உடைக்கக்கூடியது...
 
முடியாது 
உறுதியற்ற மனத்தின் வெளிப்பாடு...
 
முடியாது என்பது 
முயற்சியின்மையின் மகன்
செயலின்மையின் சகோதரன்
சோம்பேறித் தனத்தின் தலைவன்
 
முடியாது
நம்பிக்கையை
கனவுகளை 
கலைக்கக்கூடியது
குறிக்கோளை 
குலைக்கக்கூடியது
 
முடியாது என்ற வார்த்தை
வெட்கக் கேடு,
சொல்லவும் நா கூச வேண்டியது

முடியாது 
உன்னில் புகுந்தால்
உன்னை உடைக்கும்
 
முடியாது என்பதை
முழுமனத்துடன்
வெறுத்துத் தள்ளிவிடு
விலக்கி எழு.
 
முடியாது
தைரியத்தின்
தன்னம்பிக்கையின்
உழைப்பின் எதிரி
 
உனது 
தைரியத்தின் கூரிய வாளால்
உழைப்பின் உறுதியால்
தன்னம்பிக்கைத் தனலால்
உடைத்து எரி
 
நம்பு!!
 
முடியாததை
முடித்து வைப்பது 
முடியும் என்ற முடிவு மட்டுமே!!

உன்னால் முடியும் நம்பு!!!

Edgar Albert Guest ன் Can't என்ற கவிதையின் தழுவல். எனது முயற்சி..

Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

படிப்போர்க் கின்பம் பாரதியின்
பாட்டில் உண்டு பாரதிலே
படைப்போர்க் குண்டு பாடங்கள்
பக்தி, வீரம், காதலையே
சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது
சொல்லில் ஆழ்ந்த கருத்ததிலே 
விழைவோர்க் குண்டு விண்ணளவு 
விரிந்த பார்வை, மெய்யறிவு...

 

Wednesday, June 09, 2021

நலம் தா ஞாயிறே !!!

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

ஏழை இவளின் 
இதயம் தைக்க
ஏன்நீ விழைந்தாய் இன்னுயிரே! என்
எண்ணம் மனத்தில் 
இனியும் வேண்டாம் 
எனறே மறைந்து நின்றனையோ!

கண்ணில் மறைந்தால்
கதியென் னாகும்
கருணைக் காட்டு கதிரவனே! உன்
காலச் சுழற்சியில் 
காண்பவர் ஆயிரம் 
கடுப்போ என்தன் எதிர்வரவே! 

விருப்பு வெறுப்பு
எதுவும் இன்றி
ஒன்றாய் காண்பது உன்னியல்பு! இன்று 
நெருப்பாய் என்தன் 
நினைவைத் தள்ளி 
வதைப்பது சரியோ!  நீயியம்பு...

எனது வானில் 
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும்  சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!

Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று நடக்குது...
சத்தி யத்தின்  நித்தி யத்தை
சற்ற சைத்துப் பார்க்குது...

குதிரை யில்லை யானை யில்லை 
கொல்வ திங்கோர் கிருமியே... 
எதிரில் நிற்கும் எவரென் றாலும் 
எடுத்துக் கொள்ளு மாவியை...

ஒண்டி யண்டி குண்டு விட்டிங் 
குயிர்ப றித்த லின்றியே 
மண்ணில் வந்து மூச்ச டைத்து 
மாந்தர் தம்மை மாய்க்குதே...  

கண்ட துண்டு கேட்ட துண்டு 
காய்ச்சல் கொல்லு மென்பதை
எண்ணி றந்த உயிர்கள் சாவ
தென்ப திங்கே கொடுமையே...

முகத்தை மூடி கையைக் கழுவி
முயன்று தடுக்க வேண்டுமே!
முடிவில் லாமல் தாக்கு மிந்த
முகமில் லாத பகைவனை...

தள்ளி நின்று தனித்தி ருந்து 
கூட்டங் கும்பல் தவிர்க்கவே! 
மெல்ல மெல்ல மறையு மிந்த 
மனித குலத்தி னெதிரியே!!!  

Friday, April 02, 2021

காத்திருப்பு

தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பமாக ஆண்டாள் திருப்பாவையில் பாடவில்லையா! அது போலவே இறைவனை அடையும் நாளுக்காக காத்திருப்பதையே இப்பாடலில் காட்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் பற்ற முடியும் என்பதைத்தானே ஆழ்வார்களும்/ நாயன்மார்களும்  காட்டினார்கள். அவன் அருளுக்காகத் தான் காத்திருக்கிறார்.

தாகூரின் இப்பாடலைத் தழுவி ஆசை மட்டுமே காரணமாய் முயன்று எனது கவிதையை ஆக்கியிருக்கிறேன். 

Waiting

The song I came to sing
remains unsung to this day.
I have spent my days in stringing
and in unstringing my instrument.

The time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart…..

I have not seen his face,
nor have I listened to his voice;
only I have heard his gentle footsteps
from the road before my house…..

But the lamp has not been lit
and I cannot ask him into my house;
I live in the hope of meeting with him;
but this meeting is not yet.

காத்திருப்பு

எனது வாழ்வின் பாடல்
இன்னும்
இசைக்கப் படாமலே
இருக்கிறது

எனது
வீணையின் நரம்புகளை
நான் சரிசெய்து கொண்டே
இருக்கிறேன்

எழுகின்ற ஆசையால்
எரிகின்ற நெஞ்சத்தில்
எழுதாத என்கவிக்கு
இசையமைத்துப் பார்க்கின்றேன்…

தேடலின்
சுமைமட்டுமே
துணையாகக்
காத்திருக்கின்றேன்…

நான் அவன்
முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
என்றாலும்

என்னருகில் அவன்
காலடி ஓசையைக்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்…

அழைத்தால்
வருவானோ!!
அகம் நெகிழ
நினைத்தால் வருவான்…

இதய வாசல் திறந்தால்
இருள் விலகினால்
வெளிச்சமாய்
அவன் வருவான்…

அவன் வரும் நாளில்
எனது வாழ்வின் பாடல்
இனிமையாய்
இசைக்கப்படும்…

Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்


நாணலே மெத்தையாய்

நாணமே போர்வையாய்

நல்லதொரு தூக்கம்

விடியலை வரவேற்கும்  விழிப்பு

உள்ளத்தில் அமைதி

உண்மையால் உறுதி

ஆற்றை குடித்து

காற்றில் மிதந்து

காய் கனி

கடித்து உண்டு

வேட்டை யாடியும்

விளை யாடியும்

சில மணிகள்

இயற்கையைப் படித்து

இதயத்தால் வாழ்க்கை

கள்ளமில்லா காதல்

கடுப்பில்லா மனம்

களைப்பில்லா குணம்

காட்டாற்று வெள்ளம்

கரைப்புரள

காலம் கரைக்கட்டியது

ஏட்டைக் கிழித்தது

எழுத்தாணி

இன்றைய நாகரீகம்

எழுந்தது…

Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது.
தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம்

Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

கொல்லும் கொடிய வைரஸாம்,
கொரோனா' என்றே பெயரதற்காம்...
வீட்டில் இருக்கச் சொன்னாங்க, 
விரட்டி அடிப்போம் என்றாங்க...

அதனால்...

பள்ளிக் கூடம் போகல,
பாடத் திட்டம் எதுவுமில்லை...
வீட்டுப் பாடம் கொடுக்கல,
விடிய விடிய படிக்கல...

ஆனால் 

வேடிக்கை யாக தினந்தினமும்
வாழ்க்கைப் பாடம் கற்றோமே!!
ஒழுக்கம் உயர்வு என்பதனை
உணர்ந்தோம் பழகி பார்த்ததனால்...

அடிக்கடி கையை கழுவிக்கொள்!
ஆசாரக் கோவை மனதிற்கொள்!
அடுப்படி உணவே மருந்தென்றே
ஆச்சி சொன்ன பாடந்தான்...

அழகாய் நாங்கள் கற்றோமே!
ஆனால் சிறிய சந்தேகம்...
பள்ளிக் கூடம் திறந்ததுமே
பாழாய் போகும் இப்பாடம்...

மீண்டும் பழைய திட்டம்தான் 
மதிப்பெண் ஒன்றே குறிக்கோளாய்
மனனம் செய்யும் வழிமுறைதான்...
மாற்றம் உணடோ சொல்வீரே!!!

அதனால் 

ஐயா! எங்கள் பெரியோரே!!!
அருமை யான தருணமிது!!!
அறிந்தே கல்வி கொள்கையினை
மாற்றி அமைக்க முயல்வீரே!!!

Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

Sunday, May 10, 2020

குறள் தாழிசை

உடலோடு உள்ளம் உறுதிப் பட்டால்
அடைந்திடும் நன்மை பல...

சொல்லும் செயலும் இணைந்தே  இருந்தால் 
இல்லை உனக்கே இழிவு...

உள்ளத்தால் ஒன்றி உழைப்பவர்கே அன்றி
உலகத்தில் இல்லை உயர்வு...

மனத்திற்கு நல்ல மருந்தாம் சிரிப்பு
உடலுக்கும் அஃதே உரம்...

உள்ளத்தால் உண்மை உரைப்பார்தம் உள்ளத்திற்கு
உண்டோ உடைக்கும் உளி... 

Saturday, May 09, 2020

குறும் பா

எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது 
மழை...

வெளிச்ச உண்டியல் 
உடைந்து 
இருட்டு தரையில் 
சிதறிய
சில்லரை காசுகள் 
நட்சத்திரங்கள்...

சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள் 
நட்சத்திரங்கள்...

சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது 
அலை பேசி...

திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது 
புத்தகம்...

குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது 
தட்டில் உணவு...

வானத் தரையில் 
கொட்டிவிட்ட 
கறுப்புச் சாயம்
இருள்...

அழுகை 

கண்ணம் துடைத்து 
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி 
பளிச்சென்றிருந்தது 
மனம்...

எப்பொழுதும் 
தலைகுனிய 
வேண்டியிருக்கிறது 
இவரிடம்
சவரத்தொழிலாளி

மழையைத் தடுக்கும் 
குட்டி வானம்
குடை...