Friday, August 23, 2019
கண்ணனைக் கொண்டாடுவோம்
Wednesday, August 21, 2019
சென்னை தினம்
சென்னை எங்கள் மாநகரம்
சிறப்பாய் வங்கக் கடலோரம்
கண்ணைக் கவரும் கடற்கரையும்
கப்பல் வணிகத் துறைமுகமும்
எண்ணம் சிறக்க நூலகமும்
இனிய பாடச் சாலைகளும்
விண்ணை முட்டும் மேம்பாலம்
விரைந்துச் செல்லும் வாகனமும்
கலைகள் நிறைந்த கூடங்களும்
காலம் கடந்த கோவில்களும்
இலையில் சோறும், தனித்தமிழும்
எங்கள் பெருமை எடுத்துரைக்க
தலையில் மகுடம் அமைவதுப்போல்
தமிழர் நாட்டின் தலைநகராய்
நிலையாய் தமிழ்போல் பல்லாண்டு
நிலைத்தே இருக்கும் வாழ்த்திடுவோம்....
Sunday, August 04, 2019
Thursday, June 27, 2019
Wednesday, May 08, 2019
வாழும் வரைக் காதலிப்போம்
காதலில் கலந்திருக்கும்
அந்தக் காலம்
கனவுகள் சிறகடிக்கும் காலம்..
Tuesday, April 09, 2019
திருவல்லிக்கேணி
பள்ளி கொண்ட பெருமானாய்
பார்த்தன் தனக்கே சாரதியாய்
உள்நின் றொளிரும் ஓர்சுடராய்
உரைத்த உரையில் உட்பொருளாய்
வல்லித் தாயார் அருள்செய்யும்
மங்கை ஆழ்வார் தொழுதேத்தும்
அல்லிக் கேணி நின்றானை
அருளை வேண்டி பணிந்தேனே!
Monday, January 21, 2019
காதலித்துப் பார்
பின்னனி இசையாய்
எப்பொழுதும் உன் நினைவுகள்...
வார்த்தைகள் அற்று
மௌனம் பூசி நிற்கும்
உதடுகள்...
கண்களோ!
கதை பேச
காதல் சொல்லக் காத்திருக்கும்...
அவசரமாய் துடிக்கும் என் இதயத்தோடு
போட்டிப் போட்டு
தோற்றுப் போகும் அறிவு...
நடக்காமல்
மிதக்கும்
கால்கள்...
உனக்கான என் கவிதையை மட்டும்
எழுதிக் காட்டும்
கைகள்...
உன் பார்வைத் தூண்டிலில்
சிக்கிக் கொள்ள தவம் கிடக்கும்
என் விழி மீன்கள்...
நீயும் என்னைக்
கொஞ்சம்
காதலித்துப் பார்...
என் சின்ன அசைவுகளுக்கும்
சரியான அர்த்தம்
உனக்குப் புரியும்..
கொஞ்சம்
காதலித்துப்
பார்......
Saturday, December 22, 2018
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..
பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.
Thursday, November 22, 2018
பொய்த்துப் போன மழை
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….
வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…
வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...
மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…
வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ
மழையே!!!!
லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏனிங்கே நீவந்தாய்…
எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?
“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..
அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….
நாங்கள் மட்டும் மாறமாட்டோம்
Tuesday, November 20, 2018
மரம்
படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?
மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்
மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
இந்த குணம்...
இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....
மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..
உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..
தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..
மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...
இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...
உயரம்
மரத்தின்
கம்பீரம்...
மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....
மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....
மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..
மனிதன்
உலகுக்கு
அச்சம்...
மரமோ
உலகின்
ஆச்சரியம்....
படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....
Sunday, November 11, 2018
Saturday, October 27, 2018
Sunday, August 19, 2018
Saturday, August 18, 2018
Sunday, August 12, 2018
வாழ்த்து
புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் பூத்த பூக்களைப்போல்
மலரும் நாட்கள் மகிழ்வோடு
வாசம் பரப்பும் மனத்தோடு..
அலையும் கடலின் ஆழத்தில்
அமைதி தங்கி இருப்பதுபோல்
நிலையாய் தமிழும் இனிமைகளும்
நெஞ்சில் நிறைந்து நலம்வாழ்க!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
உமா...
அன்பு மகனுக்கு..
சிட்டுக் குருவியுன்
பட்டுச் சிறகை
விரித்தே பறக்க
வானம் நாங்கள்…
புத்தம் புதிய
பூவாய் நீ
வாசம் பரப்பும்
காற்றாய் நாங்கள்…
வண்ணக் கலவை
ஓவியம் நீ
வரைந்து மகிழ்ந்த
ஓவியன் நாங்கள்…
சிதறும் கல்லில்
சிற்பம் நீ
செதுக்கித் தந்த
சிற்றுளி நாங்கள்…
வண்ணத் தமிழின்
விளக்கம் நீ
விரித்தே எழுத
வார்த்தை நாங்கள்…
எந்தன் கவிதைப்
பொருளும் நீ
எழுத தோன்றும்
இன்பம் நீ…
எங்கள் வாழ்வின்
இயக்கம் நீ
எம்மைப் படைத்த
இறைவன் நீ…
என்றும் வாழ்வில்
தமிழ் போலே
உயர்வே உயர்வே
உயர்வே காண்….
இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மா, அப்பா...
Sunday, July 15, 2018
சங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து
post.htmlhttps://sangailakkiyamsuvaippom.blogspot.com/2018/07/blog-post.html
Monday, June 18, 2018
Monday, May 07, 2018
சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்
சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.... எனது இன்னொரு தளத்தில்..
Saturday, December 30, 2017
புத்தாண்டே வருக...
வாடையில் போர்வையும
வேருக்கு நீரையும்- மக்கள்
வியர்வைக்கு பலனையும்
இன்பத்தில் நிறைவையும்- வாட்டும்
துன்பத்தில் துணிவையும்
இளமைக்கு அறிவையும்- துவண்ட
முதுமைக்கு துணையையும்
உண்மைக்கு வழியையும்- கெட்ட
பொய்மைக்கு இருளையும்
ஆணுக்கு பெருமையும்- நிகர்
பெண்ணுக்கு உயர்வையும்
தோளுக்கு வலிமையும்- நேர்மை
வாளுக்கு வெற்றியும்
அன்பையும் வழங்க வா புத்தாண்டே
அமைதியை நிரைத்து வா...
மலர்க புத்தாண்டே...
நெஞ்சுரம் கூட்டி
அல்லவை எதிர்க்கும்
ஆற்றலும் தந்து
நானிலம் வாழ
இல்லார், கல்லார்
இல்லா ராக
எதிலும் இல்லா
மாற்றமும் தந்தே
மலர்க புத்தாண்டே...
Wednesday, October 18, 2017
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இன்றைக்கும் என்றைக்கும்
இல்லத்திலும் உள்ளத்திலும்
உற்சாகம் கரைபுரள
இன்பங்கள் நிறைந்திருக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உமா
Monday, August 14, 2017
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...
Wednesday, July 26, 2017
நதி பின்னால் திரும்பாது
'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...
கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...
சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...
விழுந்தது
முளைக்கும்
விதையானால்....
வெடித்தது
மலரும்
அரும்பானால்...
அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....
அறிவாய்....
கடந்தது
காலம்
என்றானால்.....
வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......
Thursday, March 16, 2017
உலக மகளிர் தினம்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...
பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....
அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....
வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...
உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...
பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...
உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...
மார்ச் எட்டு
மகளிர் தினமானது....
சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்
மகளிர் தினம்...
இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...
இன்றோ..
ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....
வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...
ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...
பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...
இதுவா இலக்கு...
பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...
நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....
வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...
வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...
சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...
பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....
ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..
ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..
போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...
ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....
Monday, February 27, 2017
அருட்சோதி வள்ளலார்
உணர்ந்தவர்
அடிகள் அவர்கள்
ஆற்றிய தொண்டுக்கள்
அளப்பரியவை..
நானிலம் அறிய
அறமென உணர்ந்ததை
ஆறாயிரம்
தீந்தமிழ் பாக்களில்
தெவிட்டா தேனாம்
‘திருவருட்பா’ தந்தவர்
பைந்தமிழ் பிள்ளைகள்
என்றறிவித்த
மொழியியலாளர்...
விளங்கும் உண்மைப் பொருளை
உலகத்தோர் உணர்ந்துய்ய
ஞான வழி காட்டிய
ஞானாசிரியர்.....
பதிப்பாசிரியர்...
சித்த மருத்துவர்...
வாழ்ந்து காட்டிய
வடலூர் வள்ளலார்
வழங்கிய நன்னெறி
'ஜீவ காரூண்ய ஒழுக்கம்'
உயிர்களெல்லாம் உறவெனக் கண்ட
உத்தமர் வழியை
உள்ளத்திலிருத்துவோம்
அன்பை விதைத்து
அறம் வளர்ப்போம்
வளர்க அன்பு நெறி...
Friday, December 16, 2016
சென்னையில் மார்கழி
காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றையப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!
சென்னையில் இன்று
கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்
தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்
பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்
காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றயச் சென்னை..
மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..
பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'
இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்
விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..
இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..
இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.
Tuesday, November 15, 2016
வாழ்த்து
Sunday, July 31, 2016
உழைப்பு
என்றே கூவி
பழைய பேப்பர் வாங்கிடுவார் - மறு
சுழற்சிக் காக
கொடுத்தே இந்த
பூமி காக்க உதவிடுவார் - நாம்
செய்யும் தொழிலில்
சிறுமை இல்லை
நன்மை பெரிதாய் இருக்கையிலே-சிறு
குடிசைத் தொழிலும்
உயர்த்தும் உன்னை
உழைக்கும எண்ணம் வலுக்கையிலே...
Thursday, July 21, 2016
நண்பனென வந்தவனால் தாக்கப் பட்டாள்
பல்லுதிர பலரெதிரே வெட்டிக் கொல்ல
பயந்ததனால் எவரெதையும் செய்யா நின்றார்
சில்லிட்டு, நெஞ்சடைத்து, சின்னப் பெண்ணின்
சாவதனைக் கண்டொருவர் மாய்ந்தே போனார்
பல்வேறு காரணங்கள் புனைந்துக் கூறி
பத்திரிக்கை பிரபலங்கள் பாய்ந்தே வந்தார்
புரியாத புதிராகும் நடந்த உண்மை
பொல்லாத காலமதை புறத்தே தள்ளும்
அறியாத பருவத்தில் வலையில் சிக்கி
அறிவற்ற செய்வோரை அதிகம் கண்டோம்
சரியென்றும் தவறென்றும் தெளிய நல்லத்
தருணமிது தவறான பாதைத் தள்ளி
அறிவாலே ஆய்ந்தறிந்து கொள்வோம் உண்மை
அன்பினையும் நட்பினையும் காப்போம் போற்றி
முகநூலின் முழுவிவரம் உண்மை இல்லை
உணராமல் உறவாட வருமே தொல்லை
நகரத்து வாழ்வினிலே நட்பு ணர்வு
நாடகமாய் ஆனதிலே அழிவே எல்லை
முகங்காட்டும் கண்ணாடி உளமா காட்டும்
உண்மையதை ஊடகமா எடுத்து ரைக்கும்
பகலவனால் இருள்மறையும் காட்சித் தோன்றும்
பகுத்தறிவே சரியானப் பாதைக் காட்டும்...
Friday, April 29, 2016
வாழ்த்து
இனிய சொல்லால்,செயற்திறத்தால்
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்டீர்
எளிதில் அனுகும் இயல்பால் நீர்
ஏற்றம் கொண்டீர், நன்மனத்தால்
பணியில் பெற்ற நல்லறிவை
பகிர்ந்தீர் நாங்கள் பயனுறவே...
அணியால் சிறப்பு செய்யுளுக்கே...
அதுபோல் நீவீர் இப்பணிக்கே...
பணியும் பெருமை என்றாற்போல்
பண்பால் உயர்ந்தீர் உம்வாழ்வில்
கனியில் சுவைப்போல், செந்தமிழில்
குறளின் நலன்போல் என்றென்றும்
குறையா செல்வம்,அன்போடு
கூடும் சுற்றம், மனநிறைவு
நிலையாய் பெற்று நலம்வாழ
நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்....
Tuesday, December 29, 2015
Saturday, November 21, 2015
மாமழைப் போற்றுதும்
என்று
தாகத்தால் தவித்த
தமிழகத்தில்
இன்று
தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்...
மீண்டும் தவிக்கும்
மக்கள், மாக்கள்
மரங்களை வெட்டி
மாரியின்
கதவடைத்தப்பின்
கழுதைக்குக்
கல்யாணம் செய்கின்றார்
மழை வர...
வெட்கம்....
முகவரி தொலைத்து
திரிந்திருந்த
மாமழை
முகம் காட்டியப் போது
தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்....
ஏரி குளமெல்லாம்
எட்டடுக்கு
கட்டிடமானதால்
விருந்தாக வந்த
மழைதானே...
வீட்டுக்குள்
வந்துவிட்டது...
.....
2.
வீட்டுக்குள் வந்த மழை
விக்கித்து நின்றதங்கே...
என்வீடு என்றிருந்தேன்
ஏனிவர்கள் தடுக்கின்றார்....
ஆறு குளந்தானிருக்கும்
ஆடிப்பாடி ஓடிடலாம்...
கரையோரங் கையாட்டும்
கிளையோடு பேசிடலாம்.....
கழனியெல்லம் நிறைத்து
மக்கள்
கவலையெல்லாங் கரைத்து
நானும்
கடலோடு கலந்திடலாம்...
கருத்தாக வந்துநின்றேன்...
காட்டாறு ஓடும் வழி
காரோட்டி சென்றதென்ன...
கட்டிடக் காடாக
கண்டபடிக் கட்டிவிட்டு
குட்டிக்கடலென்று
குறையென்னைச் சொல்வதென்ன...
என்பாதை எதுவென்று
நான் மறந்தேன்....
கூறிடுவீர்....
சற்று
நேர்ப் பாதை நீர் நடந்தால்
நீராகி நிறைவளிப்பேன்......
யார் பாதை எதுவென்று
இன்றேனும் சிந்திப்பீர்....
Tuesday, September 29, 2015
இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்
கண்ணில் தூக்கம் இழந்தீரே...
பேசும் பழக்கம் குறைந்தே'கை'
பேசி தன்னில் குறுஞ்செய்தி
பாசம் சொல்லப் பகிர்ந்தீரே
பெற்றோர் மனத்தை மறந்தீரே
வாசப் பூவின் நுகர்வின்றி
வண்ணப் படத்தில் மகிழ்ந்திடவோ...
உண்ணும் உணவில் முறைத்தவறி
உறக்கம் கெட்டு உழைக்கின்றீர்
எண்ணிப் பார்ப்பீர் எதிர்காலம்
இருண்டே இருக்குத் தெளிவில்லை
கொண்டக் கொள்கை உயர்ந்திடுதல்
குற்றம் இல்லை உம்மனத்தில்
அன்னி யமோகம் அகன்றிட்டால்
அடையும் இன்பம் அழகாகும்
மண்ணை முட்டி வெளிவந்தே
விண்ணைத் தொட்டே வளர்ந்திடுமே
சின்ன விதையின் சிறப்பதனைச்
சிந்தை தன்னில் கொண்டீரே
தன்ன லமின்றி அத்திறத்தால்
தாய்நா டுயர முயன்றிட்டால்
திண்ணம் அறிவீர் அந்நாளில்
மா மா காய்
மா மா காய்
என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
Monday, September 28, 2015
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா
மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Friday, September 25, 2015
நாற்பத்தாறு வயதினிலே
வளர்ச்சியின் உச்சம்
வீழ்ச்சியின் ஆரம்பம்
விதைத்தவை எவையோ
முளைத்திடும் அவையே
Tuesday, May 12, 2015
அம்மா
நினைவுக் கரங்களால் மட்டுமே
நேற்றையப் பொழுதுகளின்
நிஜங்களிலும்...
மூடிய கண்களால் மட்டுமே
காண முடிந்த
கனவுத் திரைகளின்
நிழல்களிலும்...
உப்பின் சுவையிலும்
உணர்வின்
நீர்த் துளியிலும்...
வலியிலும்
வலி மறந்த
இதங்களிலும்...
ஆரவாரங்களினூடேயான
என் ஆத்ம
எப்போதும்
உயிர்த்திருக்கிறாள்
என்
அம்மா...
Friday, February 20, 2015
என்னருங் காதலே - தமிழே
மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே
குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்
கூட்டாகி வருமிசைப்போல் எந்தன் நெஞ்சில்
அழகான தமிழேயுன் சொல்லைக் கொண்டேன்
அழைக்கின்றேன் கலந்திடவே வருவாய் நன்றாம்
கவிதையென துள்ளத்துள் உயிர்த்தே நல்ல
கூட்டமுதம் செந்தமிழே தருவாய் நித்தம்
பண்ணோடு நானெழுதும் பாட்டில் மேவி
பைந்தமிழே பேரின்பம் தந்தாய் நாளும்
என்னோடு நீசேர்ந்து எழிலாய் நற்பா
என்னுள்ளே உதித்திடவே செய்தாய் என்றும்
விண்மேவும் மேகங்கள் மழையைத் தூவ
மண்மீது உயிர்ப்பூக்கள் மலரும் மாப்போல்
பண்பட்ட கருத்துக்கள் உன்னுள் கொண்டே
பாட்டினிலே உயிர்சக்தி தந்தாய் வாழி!
காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலம்
Monday, February 09, 2015
வாழ்த்துக்கள்
சகோதரி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்
அன்றுனது
கரம்பிடித்து
அலைந்திருந்த நாட்கள்
என்றும் பசுமையாய்
என் கண்ணுக்குள்...
உனக்கு
வயிற்று வலி
என்றால்
எனக்கும்
பள்ளிக்கூட
வழி மறந்துப் போகுமே
அந்த இளமைக்கால
நினைவுகளின்
இன்றும் நான்
இனிமையாய்
மூழ்கிப் போகிறேன்...
சின்னச் சின்னக்
குட்டு வைத்து
பள்ளிக் கணக்கோடு
வாழ்க்கை கணக்கையும்
வகுத்துக் கொடுத்தாயே
அந்த அன்பில்
ஆழ்ந்துப் போகிறேன்...
நான்
மலர்ந்த நாளும்
நீ
பிறந்த நாளும்
ஒன்றாய்
காரணம்
என் இனிமைகளெல்லாம்
உன்னோடு
தொடர்புடையவைதானே?
என் வாழ்க்கைப் பாதையில்
அன்று முதல்
இன்றும்
என்றும்
உன் காலடி சுவடுகளே
என்
கலங்கரை விளக்கங்களாய்...
உடன் பிறந்த எங்களின்
முன்னேற்றத்தில்
உன் வெற்றி
முற்றானதாய்
மகிழ்ந்த
உன் அன்பை
உணர்ந்தபடி
என்றும்
உழைத்தபடி
நாங்கள்..
நாட்கள்
நகரலாம்
நரைக்கூடி
நெகிழலாம்..
என்றும்
உன்
நட்பில்
நனைந்தபடி
நாங்கள்...
வாழ்த்துக்கள்
இனியத் தோழி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்....
அன்புடன்
உமா
Friday, January 30, 2015
பொங்கலோ பொங்கல்
கிளாஸ் ஸ்டாப்
அடுப்பு துடைத்து
கிரானைட்டில்
கோலமிட்டு
குக்கரில்
பொங்க வைத்து
டிவிட்டரில்
வாழ்த்துச் சொல்லி
பேஸ் புக்கில்
ஷேர் செய்து
பெர்முடாஸ்
டீஷர்ட் டோடு
பைக்கெடுத்து
ஊர் சுற்ற
பொங்கலோ பொங்கல்
ஆயிற்று பொங்கல்
அத்தனைக்கும்
மாற்றுண்டு
ஆனால்
அம்மா உன்
அன்புக்கு
மாற்றேது???
நீயில்லாமல்
வெறுமையாய்!!!!
பொங்கல்...
எப்படி போனாலென்ன!
Tuesday, January 13, 2015
புத்தகச் சந்தைக்குப் போ
எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில்
தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,
புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே
புத்தகச் சந்தைக்குப் போ
---------------------------------------------------------------------------------------
சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே
முத்தான தாக முயன்று படித்தறிந்து
மொத்தமாக வாங்கிடலாம், சொத்தாகும் சிந்தனைக்கு
புத்தகச் சந்தைக்குப் போ
Wednesday, December 31, 2014
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உழைப்பை விதையாக்கி
உண்மை உரமாக
நல்லெண்ண நீரூற்றி
காத்திருந்தால்
கனிந்துவரும்
பூ மணக்கும்
புத்தாண்டு
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வணக்கங்கள்
2015
நட்புடன்
உமா
Sunday, December 21, 2014
வாழ்த்து
இணைந்தார் நிஷாவும் ஸ்ரீகாந்தும்
நல்லதோர் வீணையும் விரல்போலும்
நற்றமிழ் சொல்லின் சுவைப்போலும்
மல்லிகை மலரின் மணம்போலும்
மனதும் மனதும் இணைந்தென்றும்
நல்லறங் காப்பீர்! நலம்பெறுவீர்!
நட்புடன் என்றும் வாழ்வீரே!
Saturday, December 13, 2014
மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வு
மகாகவி பாரதியின் பிறந்த நாளில் திருவல்லிக்கேணி இல்லத்தில் துறைமுக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது திரு சிவகுமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது
அழகான அனுபவம், நல்ல மனிதர்.
மகா பாரதம் எழுதி கொண்டிருப்பதாய் சொன்னார்
http://epaper.dinamani.com/394451/Dinamani-Chennai/13122014#page/4/2
Thursday, September 11, 2014
பார தீ
பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!
உன்
பார்வையின் பொறியில்
இன்றும்
பற்றிக்கொள்ளும்
எங்கள் இதயங்கள்
உன்
சொற்களின் சூட்டில்
என்றும்
அடைகாக்கப்படும்
எங்கள் தன்மானம்
உன்
வார்த்தை வாளால்
இன்னும்
வெட்டப்பட வேண்டிய
விலங்குகள் ஏராளம்
என்றாலும்
உன்
கவிதையின் கனலை
கருத்தில் இருத்திய
அக்னி குஞ்சுகளும்
அதிகம் தான்
பாரதி
உன் கவிதைகளுக்கு
எங்கள் நன்றி
உன்
காதல் கவிதைக்கு
எங்கள்
கண்ணம்மாக்களும்
குளிர்ந்துதான் போகிறார்கள்
உன்
சுவாசக் காற்றின்
எச்சம் கொண்டு
சுதந்திரம் சுவாசித்த
எங்கள் இளைஞர்கள்
அந்நிய சந்தையில்
அழிந்திடாதிருக்கவும்
அச்சம் தவிர்த்து
ஆண்மைக் கொள்ளவும்
அவர் நெஞ்சில்
மீண்டும் மீண்டும்
உன்
வார்த்தைகளே
விதையாக்கப்படும்
விழுந்தும் முளைக்கும்
வீரம் கொள்ள
உன்
பாட்டின் வரிகள்
பாதைக்காட்டும்
உன்
பாட்டுக்கு
எங்கள் நன்றி
செத்துக் கிடந்த
எங்கள் செல்களில்
உயிரோட்டம் ஊட்டிய
உன்
சிந்தனைக்கு
எங்கள் நன்றி
பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!
Saturday, June 28, 2014
கலி மண்டிலம்
திரிவே ணியிலே திகழ்கா விரியே
வருமே யகண்டே தமிழ்நா டதிலே
பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!
2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா
4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.
5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது குறிலொற்றெடுத்தும் வரலாம்.
கலிமண்டிலம்
அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள்
இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த
கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே!
[toy story மாதிரி நாமில்லா நேரம் நம் வீட்டிலுள்ள பொருட்கள் உணர்வுற்றால்? முகுந்த் நாகராஜன் புதுக்கவிதையில் இது போல் எழுதியிருப்பார். நானும் இப்படி சிந்தித்ததுண்டு என்பதால் மரபுப் பாவில்.]
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.
கலிமண்டிலம்
உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
நலம்பல பெறவே நடந்திடு நாளும்
உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.
மொழியியல் முன்னோடி - கால்டுவெல்
பரப்ப வந்து
தமிழ் மணம்
பரப்பி நின்றவன்
மொழியியல் ஆய்ந்து
முதன்மை யானது
முத்தமிழ் என்றே
முடிவாய்ச் சொன்னவன்
தனித்தியங்க இயலும்
தமிழால் என்று
தரணிக்குக்
காட்டியவன்
திருநெல்வேலியின்
சரித்திரம் படைத்தவன்
செந்தமிழ் தன்னிலோ
சரித்திரம் ஆனவன்
செம்மொழி தமிழின்
சிறப்பை உணர்ந்தவர்
சிந்தையில்
செதுக்குவர்
நம்தமிழ் நலனை
நாட்டுக் குரைத்த
நல்லவன்
பெயரை
தமிழ்
உள்ளவரை
தமிழர்
உள்ளவரை
செந்தமிழ்ச் சொல்லின்
சுவைப்போல்
அவன்புகழ்
வாழ்க! வளர்கவே!!!
சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200 ம் பிறந்த தின நிகழ்வில் முதன் முதலாய் வாசித்தது.
இசைப் பா
நிறையப் புகழ்வார்
நல்லுளம் கொண்ட அவனடியார் அவர்
கொஞ்சும் தமிழில்
குறைதவிர்த் தெழுத
கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால்
சிதறியப் பூவை
சேர்த்துக் கட்டும்
செயலாம் சொல்லும் அறிவுரைகள் நம்
சிந்தைத் தெளிய
சிறப்பாய் அமைய
செய்யும் உதவி சிறியவையோ
பண்ணில் அழகை
பார்வையில் தெளிவை
பழகச் செய்யும் நெறியினையே அவர்
பரிவாய் உரைப்பார்
புரியும் படியாய்
படைப்போம் சிறந்த பாக்களையே
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு.
வஞ்சி மண்டிலம்
சின்னப் பிள்ளை தூங்கிட
அன்னை நெஞ்சம் தானுறும்
இன்பம் கோடி யாகுமே!
அள்ளி வைத்த பிள்ளையும்
துள்ளி ஓடி மானென
பள்ளிச் சொல்லும் போதிலே
உள்ளம் கொள்ளைப் போகுமே!
வாழ்வில் வெற்றி வந்துறும்
போழ்தில் தாயின் பேரிடர்
சூழ்ந்த காலம் தேய்வுற
ஆழ்ந்த இன்பம் தோன்றுமே!
தன்னை ஈந்து அன்புடன்
அன்னைத் தந்த வாழ்விலே
பின்னை பிள்ளைத் தானுமே
அன்பு காட்டல் வேண்டுமே!
Monday, June 16, 2014
Tuesday, June 10, 2014
சுனாமி - கரையை கடந்த கண்ணீர்
கூறுவது கேட்பீர் யானோ
அலையாக கைகள் நீட்டி
அன்போடு காத்தேன் மண்ணில்
மழையாகத் தந்தேன் என்னை
மறந்தாரே மாந்தர் தம்மின்
பிழையான வினையால் அன்றோ
பெருந்துயரம் விளைந்த தன்று...
பொங்காமல் பொறுமைக் கொண்டேன்
புரியாமல் தவறி ழைத்தீர்
மங்காத புகழு டையீர்
மாக்கடலின் நன்மை எல்லாம்
தங்காதே கழிவை கூட்டி
தண்ணீரில் மண்மீ தென்றே
எங்கனமும் எறிந்தீர் மெல்ல
இயற்கையினை இழியச் செய்தீர்
மண்ணெல்லாம் குடைந்தீர் நாளும்
மரமெல்லாம் வெட்டி மாசு
விண்ணெல்லாம் நிறைய வெப்பம்
விரைந்திங்கு உயரச் செய்தீர்
உண்மையைனீர் உணரச் சொல்வேன்
உலகன்னை நெஞ்சம் நோக
கண்ணெண்ணும் கரையைத் தாண்டி
கசிந்ததன்றோ கடலின் நீரும்....
Monday, June 02, 2014
மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது
என்றும் நிலையாய் நிறைந்திட்டீர்
பணியில் ஓய்வு பெற்றாலும்
பாசம் மிக்க எம்தோழி
குறையா செல்வம், அன்போடு
கூடும் சுற்றம், மனநிறைவு
நிறைவாய் வாழ்வில் நீர்பெறவே
நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்.
Monday, March 03, 2014
Wednesday, February 19, 2014
அச்சம் தவிர்
சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர்
துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில்
அச்சம் தவிர்ப்பாய் அறிந்து.
ஆறுவது சினம்
Friday, March 29, 2013
அறம் செய விரும்பு
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.
Saturday, February 16, 2013
தமிழ்க் கனவு
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!
Friday, February 01, 2013
என் இரண்டாம் பக்கம்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...
திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...
"நான்'
அறிமுகமானேன்..
நான்
விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.
நான்
சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின
நான்
அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின
நான்
உருவாக்கினேன்
என் சிறிய உலகை
நான்
அழித்தேன்
என் அறியாமையை
நான்
வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்
நான்
பெற்றேன்
அதனால்
இழந்தேன்
இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்
நான்
திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.
இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது
மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!
முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?
முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க
மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்
நான்
என் இரண்டாம் பக்கத்தில்...
Sunday, October 21, 2012
மின்னல், இடி, மழை
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...
நாள்
ஒற்றை வெண்தோணியில்
மேக வலைவிரித்து
பிடித்த
நட்சத்திர மீன்களை
பகற் கைகள்
பறித்துக் கொண்டன...
நட்சத்திரங்கள்
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...
*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...
Tuesday, October 09, 2012
வெற்றி நிச்சயம்
வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!
மன நிறைவே
வெற்றி...
ஆசை
தோல்வியின் முதற்படி
சிலரது வாழ்க்கை
100மீ பந்தயம்
துரிதமாய் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்
சிலருக்கு
தொடர் ஓட்டம்
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்
தலைமுறைத் தாண்டி
அனுபவம் சுமந்து
அடுத்தவர் ஓடும்
அயராத ஓட்டம்..
இலக்கடைவது
நிச்சயம்...
வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....
தடைகள் இடற
தள்ளாடும் ஓட்டம்..
வெற்றி வேண்டுமா?
மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!
இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...






