Thursday, April 15, 2010

துவளாது உழைப்பீர்.

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!

Monday, April 12, 2010

கோடைக்காலம்

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.

முயன்றிட வெற்றி உண்டாம்

விளம் மா தேமா
விளம் மா தேமா

அழைத்திட வருமோ வெற்றி
அயர்ந்திடா[து] எரும்பைப் போல
உழைத்திடு உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
முளைதிடுஞ் செடியைப் போல
முயன்றிட வெற்றி உண்டாம்

Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!





என் இனிய மொழியே

என் இதயத்தின் ஒலியே


நீ

நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

உனக்கு

அதிகமான

கவனிப்புத் தேவைபடுகிறது


நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து

சென்றுவிடுகிறார்கள்


உன் சிறந்த சொற்களை

நீ

சுவைப்பதில்லை

வேற்று மொழி

மருந்திலேயே

வீக்கம் கொள்கிறாய்


அசைப் போடுவதே

உன்

அன்றாட வேலையாகிவிட்டது


முன் பிறந்தும்

நீ முடமாகிக் கிடக்கிறாய்

பின்னவள் ஹிந்தியோ

பெரியவளாகிப் போனாள்


நீ முடமாகிக் கிடக்கிறாய்

ஊனமுற்றவர்

ஓட்டப் பந்தயத்தில் மட்டும்

முதல் பரிசு

உனக்கு


ஊனம்

உன்னில் இல்லை

உன்னைச் சுமந்தவர்

நெஞ்சில்


கன்னித் தமிழே

கவிதைச் சோலையில்

கதையில்

காணும் நாடகத்தில்

உன்

புன்னகையே

உன் இதழ்களை

அலங்கரிக்கட்டும்


அந்நிய சாயப் பூச்சு

வேண்டாம்

சொந்தப் பூவையேச்

சூடிக்கொள்


வண்ணங்கள் கலக்கலாம்

எண்ணங்கள் கலக்கலாம்


உன் சுவடுகள்

கலைக்கப்படாமல்

காப்பாற்று...

Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

இறைவழிபாடு 3

கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

இறைவழிபாடு 2

குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்


பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!


நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!

இறைவழிபாடு -1

மா மா காய்
மா மா காய்


கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!


மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

Saturday, April 03, 2010

இயற்கை -2

காற்று

மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!


சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

இயற்கை 1

மா மா மா மா
மா மாங்காய்


மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்...


சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

தமிழர் நிலை - 2

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!

Tuesday, March 30, 2010

தமிழ்

குற்லீற்று மா+ விள+ மா

விள +விள+ மா



பாகு வெல்லமும் தேனும்

பருகிடு கனியதன் சாறும்

போகு மிடமெலாம் வாசம்

புன்னகை வீசிடுந் தென்றல்

ஓடும் ஊரெலாம் ஆறு

ஓங்கிடச் செய்திடு வளனும்

தேடும் இன்பமும் தருமே

தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்



சொல்லச் சுவைத்திடும் நாவும்

சோர்வினை விலக்கிடும் வானின்

வில்லைப் போல்பல வண்ணம்

வியத்தகு தமிழினில் உண்டே

கல்லைச் செதுக்கிய சிலைதான்

கற்றவர் சிந்தையில் தமிழே

இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்

கிருநில மீதினில் ஈடே!

தமிழர் நிலை - 1

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.


பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.

Monday, March 15, 2010

நல்வழி அறிவீர்

குறிலீற்று மா+ விளம்+ மா
விளம்+ விளம்+ மா

காலை எழுந்திட வேண்டும்
கனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்

தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.

சிறுவர் பட்டாளம்

மா மா மா
மா மா மா

சிட்டுக் குருவிக் கூட்டம்
சிரிக்கும் சின்னத் தோட்டம்
பட்டப் பகலில் நிலவு
படிக்க வந்த தோற்றம்
கொட்டி விட்ட மணிபோல்
குலுங்கச் சிரிக்கும் அழகை
எட்டிப் பார்க்கும் இறைவா
எனக்கும் மீட்டுத் தாதா!

குழந்தைகளுக்கு

மா+மா+மா
மா+மா+மா

கண்ணே மணியே வாவா
கனவின் வடிவே வாவா
அன்பே வாழ்வின் வேராம்
அறிவே மூச்சுக் காற்றாம்
பண்பாய் வாழப் பழகு
படித்தே உயர்வது அழகு
உண்மை நேர்மை உழைப்பு
உன்னில் இருந்தால் சிறப்பு.

பண்ணும் இனிமைத் தமிழில்
படிக்க பேச விரும்பு
மண்ணைப் பெண்ணை மாற்றார்
மனத்தை மதிக்கப் பழகு
எண்ணந் தன்னில் ஈரம்
ஈகை பொறுமை இருந்தால்
வண்ணங் கலந்து வாழ்வும்
வளமாய் நிறைவாய் விளங்கும்.

பெண் குழந்தை வாழ்த்து

இயற்சீரால் ஆனது
மா/விளம் +மா/விளம் +மா
மா/விளம் + மா/வ்ளம் +மா
[வெண்தளை ஏற்றது.]


1.தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே
நங்கையர் நாடு நலனே
நயனில் நிலையினர் உள்ளார்
இங்கவர் எண்ணம் இழிய
இடியென் றெழுந்த எழிலே
பொங்கு புகழொடு பெண்மை
பொலிந்திட வந்தனை வாழி

அழகுத் தமிழ் பழகு

குறிலீற்று மா+ விளம்+ மா
.....விளம்+ விளம்+ மா

மழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************

அருளுடை வாழ்வு

குறிலீற்று மா+ விளம்+ மா
விளம்+ விளம்+ மா



1.வண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.

Sunday, March 07, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]


வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!