Thursday, March 04, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

மா+மா+மா+மா+மா+மாங்காய்

பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
பாரீர் கடலாகும்
கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
குடிக்கத் தோதாகும்
முட்டி மோதி ஓடும் ஆறும்
மொழியும் ஒருபாடம்
கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல்
காத்தல் நலனாகும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

காய்+காய்+காய்+காய்+மா+தேமா

சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப்
பொன்னாய் மின்னும்!
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
கனியும் காலம்

Tuesday, February 23, 2010

ஈகை

மாங்காய் + மா +தேமா

உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!

முதுமை


விளம்/மாங்காய் + மா + தேமா

களைப்புற்ற காலம் என்றே

கருதிட வேண்டா நாளும்

அலைந்திங்கே பெற்ற பாடம்

அனுபவம் தன்னில் உண்டாம்

இளையவர்க் குதவும் வண்ணம்

இயம்பிட வேண்டும் மண்ணை

முளைத்திட்டச் செடியோ அன்றி

முற்றிய மரமே காக்கும்.

குழந்தைத் தொழிலாளி

விளம்/மாங்காய் மா தேமா

விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா காட்டும்
கூலிக்கு வேலை செல்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
அன்றாடம் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!

கூடி வாழ்வோம்

மா மா காய்

கன்னங் கரிய காக்கையினம்
கூடி வாழும் தன்மையிலே
எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
கண்ணில் வீழும் மண்துகளை
கைகள் சென்று துடைப்பதுபோல்
மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
மாற்றும் மனதைக் கொள்வோமே.

பெற்றவர் உவகை

விளம்- மா- தேமா

பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!

உழைப்பே உயர்வாம்

விளச்சீர்+மா+தேமா

உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.

உடல் நலம் பேணிட...

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

உண்மை அழகு

[மா+மா+காய்]
பாடும் குயிலின் அழகெல்லாம்
பாரீர் அதனின் குரலினிலே
வாடும் மலரும் ஓர்நாளில்
வாசம் அதனை மாற்றிடுமோ?
ஏடும் அழகாம் வெண்தாளில்
எழுதி கருத்தை விளக்கிடவே
நாடும் மனத்தில் அழகெல்லாம்
நன்மை தன்னில் காண்பீரே!

சேவற் கொடியோன் சிறப்பு.

காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு
பாவக் கரையழித்து காக்கும் கருணையே
சேவற் கொடியோன் சிறப்பு.

தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
அல்லல் அகலும் விரைந்து.

எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
தித்திக்கும் தேனாய் இனித்து.

வேலும் மயிலும் துணையென நம்பியே
நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.

Thursday, February 04, 2010

நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில்
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.

Saturday, January 23, 2010

'காணும்' பொங்கல்

இன்று காணும் பொங்கல் திருநாள்
நன்றாய் காண' வேண்டும்
'காந்தி' சிலைமுதல்
'கண்ணகி' சிலைவழி
'மெரினா' கடற்கரை வரையிலும்
மெதுவாய் நடந்தால்
பெரிதாய் காணலாம்...
தீவுத் திடலில்
திரளும் கூட்டம்
பொருட்காட்சி காண
பெருகும் மக்களின்
பொருட்களில் நன்றாய்
பொங்கக் காணலாம்...
காக்கிச் சட்டையின்
கண்களில் கொஞ்சம்
கடுமைக் காணலாம்
கொடுத்தே விட்டால்
'மாமூலாய்' மகிழ்ச்சிக் காணலாம்...
மாநகரப் பேரூந்தில்
மக்கள் நெரிசல்
கூட்டமாய் இருக்கும் கொஞ்சம்
கூடவே காணலாம்...
காணும் பொங்கலில்
காணாது விட்டால்
பிரியாணி, பாக்கெட்,
பீடியு மில்லை, மீதியு மில்லை
ஓடியே சென்றுடை யணிந்து
வாடி! செல்வோம் வகையாய்
காணும் பொங்கல் நாமும் காணவே!

[அட இது நம்ம பிளேடு பக்கிரியும் அவங்க சம்சாரமும் கொண்டாடின காணும் பொங்கலுங்க.]

Wednesday, January 06, 2010

நன்றியுடன்


நற்றமிழ் தன்னை நானறிந் துய்யவே

கற்றிடச் செய்தவள்
ஈறாறு வயதில்
தேனாம் தமிழை
நாடி நான்படிக்க
பாட புத்தகத் துடனே
'பொன்னியின் செல்வனை'
என்னிடம் தந்தவள்
அன்புடை எந்தாய்....
என்றும் நன்றியோ(டு) என்மனம் நினைப்பது
அன்றென் வகுப்பில்
அருந்தமிழ் அளித்தென் ஆசைத் தீக்கு
நறுநெய் யிட்டநல்லா சிரியர் சிலர்
இல்லாயின் எந்தீ
சொல்லாம் எப்படி?...

வாழ்க்கைத் துணையாய் வந்தவன் தானுமென்
வாசிப்புத் துணையாய் நின்றான்.
நேசிக்கும் தமிழை
நேராய் நானுனர மேற்படிப்பு
படித்திடச் செய்தான்
படிப்படியாய் உயர்ந்திட எனக்கே
பக்கபல மாயிருந் தவர்பலர்
சக்கரையாய் இனிக்கும் அவர்நினைவு...

இங்கணம் இந்தமிழை
இயன்றவரைப் படித்திருக்க, தமிழ்பற்றால்
தாமறித் தமிழைநாம றியவலை தன்னில்
யாப்பிலக் கணங்கற் பித்தார் நன்றாய்
பாப்புனைய வல்லார்..
பொய்யிலாப் புகழுடை
அய்யன் வள்ளுவன்தன்
சொல்லாம் குறளினைக்
கல்லில் எழுத்தாய்
கருத்தில் இருத்தியோன்..
காலம் அழிக்கா கவிபுனைத் திறனை
அருந்தமிழ் தன்னில் எனக்களித் திட்ட
திரு.அகரம் அமுதா என்மனதில்
சிகரமென உயர்ந்தே நின்றார்..

சிறப்பாய் தனித்தமிழ்
பிறக்கும் இவரிடம், இன்தமிழில்
அறத்தோடு அழகாய் கருத்தைச் சொல்லும்
திறத்தான் திரு.தமிழ நம்பிநல்
மனத்தால் நற்றமிழை
எனக்களித்தார் நன்றியோடு
அவரைப் போற்றிப் பணிவேன்..
இவர்களின் துணையெனக் கிங்கே
அவரைக் கொடிக்கோர் கொம்பினைப் போன்றதே!...

Friday, January 01, 2010

சென்னையில் மார்கழி

காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றயப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!

சென்னையில் இன்று

கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்

தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்

பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்

காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றாயச் சென்னை..

மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..

பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'

இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்

விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..

இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..

இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்

அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.

Wednesday, December 16, 2009

கசப்பு மருந்து.

சின்னதாய்
காயம்
வலி
துன்பம்
துயரம்
பிரிவு
இழப்பு
தடை
தயக்கம்
இவை தன்
இருப்பை மறந்து
இயந்திரமாய்
மாறாதிருக்க
மனிதக் குழந்தைக்கு
இறைவன் ஊட்டிய
கசப்பு மருந்து.

கயமை
கர்வம்
கோபம்
பொறாமை
பேராசை
ஆணவப்
பிணிக்கு
ஆண்டவன் அளிக்கும்
அருமருந்து

அன்பு
தூய்மை
நேர்மை
விடாமுயற்சி
தன்னம்பிக்கை
தனைவளர்க்க
தெய்வம்
தரும் மருந்து.
மண்ணில்
மனிதம் காக்கும்
மா மருந்து..

[திருநெல்வேலிக்கே அல்வா! மாதிரி டாக்டர் தேவன் மாயம் அவர்களுக்கு சுரம் கண்டப் போது [சுரவேகத்தில் ?] அழகான காய்ச்சல் கவிதை எழுதியிருந்தார். அதை படித்ததும் எழுதியதுதான் இது.]

Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

என்றும் திருநாள் எனக்கு.


ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]

Tuesday, October 13, 2009

நல்லதே நாடுக

இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
நல்லதோர் விதையே மரமா கிடுமே!
நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!

அன்புடை வாழ்க்கை

பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே!
துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே!
அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே!
கருத்துடன் கருமம் சிறக்கும் என்றுமே!
கரும்புடன் இனிப்பு கலந்தே இருக்குமே!
விரும்பியே வினைச்செய விளையும் நன்மையே!
நன்மையேச் செய்திட நானிலம் வாழுமே!
அன்பினைக் காட்டியே ஆளுவோம் மனதையே!