Sunday, May 09, 2010

கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்

இத் தலைப்பில் திரு கபீரன்பன் அற்புதமான கட்டுரை எழுதியுள்ளார். அதன் கருத்தை சற்றே மரபு பாவில் அமைக்க நினைத்தேன். [கபீரின் கனிமொழிகள் என்ற கபீரன்பனின் பக்கத்தை அறிமுகப்படுத்திய திரு.அவனடிமையாருக்கு என் நன்றிகள்]
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா

சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!

Saturday, May 08, 2010

புத்தகம்

குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா

நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.

வாழ்த்து

திரு.வசந்த் அவர்களின் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா

வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.

Wednesday, May 05, 2010

கந்தா கடைந்தேற வழிகாட்டு

[குறிலீற்று மா கூவிளம் விளம் மா
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]

காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!

Tuesday, May 04, 2010

இயற்கை வளங்களைக் காப்போம்.

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா

கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.

Thursday, April 22, 2010

சென்னை மாம்பல மகிமை

வீதியில் ஓடும் வாகனம் தீய
விடமெனக் கக்கிடும் புகையை
ஆதியும் இன்றி அந்தமும் இல்லா
ஆண்டவன் போல்பெருங் கூட்டம்
காதினை அடைக்கும் கத்திடும் ஓசை
கரைந்திடும் கையிரு காசும்
ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில்
இருப்பினும் போய்வரல் இனிதே!

துயராய் போனத் தொலைக்காட்சி

தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொடர்பற்றுப் போச்சு
தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை
வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க
வஞ்சகமும் வசைச்சொல்லும் வேதனையும் மிஞ்சும்
விழியெல்லாம் பூத்திடவே விடியும்வரைப் பார்த்து
விடிந்தவுடன் தூங்கிவிழ வேலையெலாங் கெட்டு
அழித்திடுமே அன்றாடம் அழுதிடுமோர் பேச்சு
அருந்தமிழின் அழகெல்லாம் அமைதியோடு போச்சு.

Tuesday, April 20, 2010

பிளாஸ்டிக்

காய் காய் காய் மா
காய் காய் காய் மா


தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!

சேமிப்பு

காய் காய் காய் மா
காய் காய் காய் மா

சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.

Saturday, April 17, 2010

காப்பு உந்தன் கழலே

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா

கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
உடனாடும் வடிவேலும் மயிலும் காண
ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!

Thursday, April 15, 2010

இயற்கை வளங்களைக் காப்போம் 1

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
நாமதை நன்குணர்ந் திங்கே
காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
காற்றினை மாசற காத்தே
வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
விளக்கினில் சூரிய ஆற்றல்
கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.

துவளாது உழைப்பீர்.

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!

Monday, April 12, 2010

கோடைக்காலம்

விளம் மா விளம் மா
விளம் விளம் மா

வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.

முயன்றிட வெற்றி உண்டாம்

விளம் மா தேமா
விளம் மா தேமா

அழைத்திட வருமோ வெற்றி
அயர்ந்திடா[து] எரும்பைப் போல
உழைத்திடு உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
முளைதிடுஞ் செடியைப் போல
முயன்றிட வெற்றி உண்டாம்

Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!





என் இனிய மொழியே

என் இதயத்தின் ஒலியே


நீ

நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

உனக்கு

அதிகமான

கவனிப்புத் தேவைபடுகிறது


நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து

சென்றுவிடுகிறார்கள்


உன் சிறந்த சொற்களை

நீ

சுவைப்பதில்லை

வேற்று மொழி

மருந்திலேயே

வீக்கம் கொள்கிறாய்


அசைப் போடுவதே

உன்

அன்றாட வேலையாகிவிட்டது


முன் பிறந்தும்

நீ முடமாகிக் கிடக்கிறாய்

பின்னவள் ஹிந்தியோ

பெரியவளாகிப் போனாள்


நீ முடமாகிக் கிடக்கிறாய்

ஊனமுற்றவர்

ஓட்டப் பந்தயத்தில் மட்டும்

முதல் பரிசு

உனக்கு


ஊனம்

உன்னில் இல்லை

உன்னைச் சுமந்தவர்

நெஞ்சில்


கன்னித் தமிழே

கவிதைச் சோலையில்

கதையில்

காணும் நாடகத்தில்

உன்

புன்னகையே

உன் இதழ்களை

அலங்கரிக்கட்டும்


அந்நிய சாயப் பூச்சு

வேண்டாம்

சொந்தப் பூவையேச்

சூடிக்கொள்


வண்ணங்கள் கலக்கலாம்

எண்ணங்கள் கலக்கலாம்


உன் சுவடுகள்

கலைக்கப்படாமல்

காப்பாற்று...

Sunday, April 04, 2010

இறைவழிபாடு 4

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

இறைவழிபாடு 3

கண்ணா அருள்வாயா?
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?

இறைவழிபாடு 2

குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்


பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!


நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!

இறைவழிபாடு -1

மா மா காய்
மா மா காய்


கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!


மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

Saturday, April 03, 2010

இயற்கை -2

காற்று

மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!


சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!