Monday, April 27, 2020

தடம்

புல்மேல் பனியின் தடங்கள் பதிவதில்லை
கல்லோ எதையும் பதிப்பதில்லை- காண்பீரோ
சில்லென்ற காற்றில் மணத்தின், செந்தமிழ்ச் 
சொல்லில் சுவையின் தடம்...

Thursday, April 09, 2020

கண்ணனாக வா!!

எப்பொழுதெல்லாம் 
தர்மம் அழிந்து அதர்மம் 
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம் 
'நான் 'அவதரிப்பேன்...

ஏற்றுக் கொண்டோம் 
இறைவா... நீ
கண்ணனாக வா 
'கொரோனா' வாக வேண்டாம்...

அழிக்கப்படுவது 
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...

காக்கப்படுவது 
கருணையாக ,
காதலாக 
இருக்கட்டும்...

மயக்கத்தைப் போக்கி 
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...

மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...

இறைவா 
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...

கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!

Tuesday, April 07, 2020

யோசனை பூக்கள்

மனிதனின் 
சிந்தனை தோட்டத்தில் 
மலர்வது
யோசனை பூக்கள்...

வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள் 
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள் 
மயக்கும்... 

எண்ணங்கள் 
விதையாக 
எழுத்துக்கள் 
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள் 
பூத்துக் குலுங்கும்...

சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...

சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும்  பொதுவாக...


 

Saturday, April 04, 2020

மின்னற் பொழுதுகள்

வாழ்க்கை பயணத்தில் சில
மின்னற் பொழுதுகள்...

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...

அவனுக்கு!

அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய் 
தன்னை உணர்ந்த 
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னற் பொழுது!!

அவளுக்கு

தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம் 
அழகிய மின்னற் பொழுது!!

வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை 
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...

யாருக்கில்லை அந்த 
அற்புத மின்னற் பொழுது!!

முதல் வெற்றி
வாசல் தட்டிய 
வசந்த நிமிடம்...

காதல் சொன்ன
கணப் பொழுது...

வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது

கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...

தாயின் சிதையில் 
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும் 
நிமிடங்கள்...

யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னற் பொழுதுகள்...

Friday, April 03, 2020

ஒற்றை எதிரி

தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே 
சண்டை இல்லை ...

சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...

வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...

வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...

அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி 
செயல்கள் நடந்தது...

சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது

நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ

உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...

சற்றே

திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...

ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...

எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...

இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை 
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!





Tuesday, March 31, 2020

கடல்

அலை கடலின் ஓசை
ஆழ் கடலில் இல்லை...

ஆழ் கடலின் அமைதி
அலை கடலில் இல்லை...

அலைகடல் ஓயாது
ஆழ்கடல் பேசாது...

சிந்தனையில் 
ஆழ்கடல் அமைதி 
அறிவின் துவக்கம்... 

செயலில்
அலைகடல் ஆரவாரம்
இயக்கத்தின் அடையாளம்... 

கடலின் ஆழம் 
அலையில் தெரியாது...
அலைகள் இன்றி
ஆழ்கடல் கிடையாது....

சிந்தனை 
செயலுக்கு அடிப்படை
செயல்கள் இன்றி
சிந்தனை சிறக்காது.... 

நிழல்கள் நகர்ந்த பொழுது...

நிழல்கள் 
நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...

தாயின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
தானாக எழுந்து 
நடக்கலானேன்...

தந்தையின் நிழல் 
நகர்ந்த பொழுது, 
எனக்கென
தடம் ஒன்று 
இருக்கக் கண்டேன்...

நல்லாசிரியர் நிழல் 
எனைவிட்டு 
நகர்ந்த பொழுது, 
என் அறிவின் ஒளியில் 
இயக்கம் கொண்டேன்...

இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில் 
வாழ்வில் 
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!. 

Sunday, March 29, 2020

சிந்தனைகள் சந்தித்தால்

சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு 
'சிந்தனை' உரமாகிறது...

நல்லவர்கள் சிந்தித்தால் 
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள் 
நமக்கெல்லாம் விளைகிறது...

மாறாக சிந்திப்போர் 
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள் 
தீயாக சுடுகிறது....

சொல்லோடு சிந்தனை 
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது 
நற்கவிதை ஆகிறது...

சிறப்பான சிந்தனை 
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...

மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில் 
சிந்தனையைச் தெளிவாக்கு....

கொரானா

எண்ணங்கள் ஒன்றானால்
எளிதாகும் நம்முயற்சி
கொன்றழிக்கும் கொரானாவை
கெடுத்தழிப்போம், நம்மிடையே
இன்றைக்குத் தேவையெல்லாம்
இடைவெளிதான், சிந்திப்பீர்!
நன்றாகக் 'கை'கழுவி 
நலம்காப்பீர் நல்லோரே!!



Sunday, December 29, 2019

2019 --》2020

2019
இலவு காத்த  கிளியாக 
ஏமாற்றப்பட்ட சில எதிர்பார்ப்புகள்....
இழந்த சில நட்புகள்...
என்று
எப்போதும் போல் 
சில தருணங்கள்... 2019 ல்
என்றாலும்

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே

என்பது போல் 
நான் கேட்டது எனக்கு கிடைக்கவில்லை என்றாலும்,
இறைவன் கொடுத்தது மிகச் சிறப்பானதாகவே அமைந்தது...
23 வருடங்களுக்குப் பிறகு என் தந்தையை சந்தித்த அந்த நொடி 
இதயம் நின்று மீண்டும் துடித்தது...
அவருக்கான எனது கடமையைச் செய்ய இறைவன் அருளிய வாய்ப்பு...
இன்னும் சற்றும் எதிர்பார்க்காத நேரம், சாகித்ய அகாதமியில் பேசும் வாய்ப்பு...
மனதிற்கு பிடித்ததாக சில படைப்புகள் எழுதிய தருணங்கள்...
நிறைய பயணம், கோவில், இறைவன் தரிசனம்,
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு பகிர்ந்த சில இனிமைகள்...
என்றும் மறக்க இயலாத நல்லவர் நட்பு...
இது போதும்  எனக்கு இது போதுமே...

2020

இன்னும் இழந்த 
23 வருடங்களையும்
எண்ணத்தில் வாழ்ந்து பார்க்கும்
ஆவலோடு 2020 ஐ எதிர்பார்த்து...
எனது பயணம் தொடர்கிறது...

இறைவனுக்கு நன்றியோடு...

Saturday, December 14, 2019

நானும் நீயும்

நான் மழை,
நீ மேகம்!
என்னைத் தந்தவன் நீ... 

நான் நிலம், 
நீ மண்!   
என்னுள் நிறைந்தவன் நீ...

நான் சுடர்
நீ திரி!
என் ஆதாரம் நீ...

நான் நட்சத்திரம், 
நீ இருள்!
என்னை அடையாளம் காட்டுபவன் நீ...

நான் சுவாசம், 
நீ காற்று!
உன்னால் தான் என் உயிர்ப்பு...

நான் தமிழ், 
நீ இனிமை!
என் இயல்பான இணை நீ...

Sunday, November 24, 2019

குறிஞ்சிப் பாட்டு

தமிழரின் பண்பாட்டை எடுத்துச் சொல்ல 'கபிலர்' எழுதிய குறிஞ்சிப் பாட்டு பற்றிய எனது கட்டுரை இங்கு... https://sangailakkiyamsuvaippom.blogspot.com/2019/11/blog-post.html

Tuesday, November 12, 2019

எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

Rabindranath Tagore's Poem 
'Where The Mind is Without Fear'
in Tamil
எங்கே
மனம்
பயமின்றி இருக்கிறதோ!!!

எங்கே
பெருமிதத்துடனும்
தைரியத்துடனும்
தலை 
நிமிர்ந்து நிற்கிறதோ!!!

எங்கே
அறிவு
சுதந்திரமாக
செயல்படுகிறதோ!!!

எங்கே
பூமி
குறுகிய கோடுகளால்
துண்டாடப்படாமல்  இருக்கிறதோ!!!

எங்கே
உண்மையின் ஆழத்திலிருந்து
வார்த்தைகள் வெளிவருகின்றதோ!!!

எங்கே
அயர்வில்லாத
விடாமுயற்சி
முழுமையான வெற்றியை
அடையமுடிகிறதோ!!!


எங்கே
பகுத்தறிவுச் சிந்தனை
மூடப்பழக்கத்தின் முன்
மண்டியிடாமல்
தன் பாதையில்
பயணிக்கிறதோ!!!

எங்கே
புதிய சிந்தனை
புதிய செயல்கள்
என்னும்
விசாலப் பார்வைக்குள்
மனம் உன்னால்
செலுத்தப்படுகிறதோ!!!

இறைவா!!!
அங்கே
அந்த சுதந்திர உலகில்
என் நாடு
விழிக்கட்டும்...

Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

இந்தக்  காகிதம் 
என்னில் 
எழுது எழுது
என்று என்னை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது....

இப்படித்தான் 
வாழ்வின் இனிமைகள் 
எல்லாம் நம்மை
வாழ்ந்துப் பார்,
அன்பை உணர்ந்துப் பார்
என்று வரவேற்றவாறே
இருக்கின்றன...

பிறகு ஏன் இன்னும் 
பொறாமை, வெறுப்பு, கோபம்
எனும் நெருப்பால்
நம்மை நாமே
அழித்துக் கொண்டே
இருக்கிறோம்...

அறியாமையே அறிவு...

I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward.

Khalil Gibran

நான் 
'முழுமையான உண்மை '
என்பதை
அறியாமலிருக்கிறேன்...
ஆனால் என்
அறியாமையை உணர்ந்து 
அடக்கத்தோடு இருக்கிறேன்...
அதனாலேயே 
மதிக்கப்படுகிறேன்...

தமிழில் எனது கவிதையாக்கம்...

மண்ணின் கவிதைகள்

'Trees are poems the earth writes 
upon the sky, We fell them down and 
turn them into paper,
That we may record our emptiness.'

Kahlil Gibran

மண்
வான் மீது எழுதும் 
கவிதை 
மரங்கள்...
நாம்
மரங்களை அழித்து 
காகிதமாக்கி
நமது
வெறுமைகளை
பதிவு செய்து கொண்டிருக்கிறோம்...

எனது கவிதையாக்கம் தமிழில் ...

Saturday, November 09, 2019

நட்பு

In the sweetness of friendship let there be laughter, and sharing of pleasures. For in the dew of little things the heart finds its morning and is refreshed.
Khalil Gibran


நமது இனிமையான 
நட்பில்...
மகிழ்ச்சியும் 
பகிர்தலும்
நிறைந்து இருக்கட்டும்...
ஏனெனில் 
நம் இதயத்தாமரை
இந்த 
சின்ன சின்ன விஷயங்களில் 
தனக்கான 
உதயத்தைக் கண்டு
மலர்கிறது...

தமிழில்...
எனது முயற்சி...

Saturday, November 02, 2019

மழையின் பாடல்

Khalil Gibran's poem
'The Song of the Rain'
In Tamil...
எனது இன்னொரு முயற்சி...

மழையின் பாடல்

நான்

வானிலிருந்து வீழும்

வெள்ளி இழை…

 

இயற்கை தன்

வயல்களையும்,

பள்ளத்தாக்குகளையும்

பொலிவாக்க

என்னை

அழைத்துக் கொள்கிறாள்…

 

நான்

விடியலின்

தோட்டத்தை அலங்கரிக்க

இறைவனின்

மகுடத்திலிருந்து

உதிர்க்கப்பட்ட

முத்து...

 

நான் 

மேகத்தின் கண்ணீராய்

கொட்டும் போது

மலைகள் சிரிக்கின்றன…

 

நான்

'தாழ்ந்து' 

தொடும் போது

மலர்கள்

'மலர்ச்சி' கொள்கின்றன…

 

நான் 

வீழும் போது

உலகம் மகிழ்ந்து

எழுகிறது….

 

பூமியும் மேகமும்

காதலர்கள்..

நான்

அவர்கள் அன்பின்

தூதுவன்…

 

நான்

பலர் தாகத்தைத்

தீர்க்கிறேன்..

 

பலர் காயங்களை

ஆற்றுகிறேன்…

 

இடி எனது

வருகையை

உலகுக்குக் கூறும்

 

வானவில்

எனது

நிறைவைச்

சொல்லும்...


அகிலத்தில் 

ஐம்பூதங்களின்

சேர்கையாய்

பிறந்த உயிர்கள் எல்லாம் 

மரணத்தின்

விரிந்த சிறகுகள் கொண்டு 

மேலெழும்பி

பேரான்மாவை அடைவது போல்...

நானும்

கடற்பரப்பில் இருந்து 

தோன்றி

காற்றோடு

மேலெழும்புகிறேன்…


நீரின்றி வறண்டு

எனக்காகக் காத்திருக்கும்

வெளியைக் கண்டால்

காதலோடு கீழிறங்கி

மலர்களையும்

மரங்களையும்

அணைத்துக் கொள்கிறேன்…

 

நான்

தூறலாய் உங்கள்

ஜன்னல் தொடும் போது

எனது மெல்லிசையை

எல்லோரும் கேட்கிறார்கள்

மென்மையான சிலரே

மனத்தில் கொள்கிறார்கள்…

 

காற்றின் சூடு

என்னைப் பிரசவித்தது…

நானோ அதை

தணித்து விட்டேன்…

 

பெண் ஆணிடமிருந்து

பெற்ற பலத்தால்

அவனையே வெல்வது போல்…

 

நான்

கடலின் பெருமூச்சு

சமவெளியின் சிரிப்பு

வானத்தின் கண்ணீர்…

எனவே

 

பாசத்தின்

பெருமூச்சோடு,

ஆன்மவின்

மகிழ்ச்சியோடு

எண்ணற்ற 

நினைவுகளின்

கண்ணீரோடு

 

எனது அன்பைப்

பொழிகிறேன்…

--
S.UMA
9003014271

Friday, November 01, 2019

கண்ணீரும் புன்னகையும்...

My attempt to write Khalil Gibran's poem ' A Tear and a Smile' in Tamil...

கண்ணீரும் புன்னகையும்
______________________________
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது
துயரங்களை எல்லாம் 
சந்தோஷங்களாக
மாற்றிக் கொள்ள
விழையமாட்டேன்...

எனது  கண்ணீர் 
துக்கத்தால் தோன்றி 
சோகத்தின் வெளிப்பாடாக
நகைப்புக்குள்ளாவதை 
நான் நாட மாட்டேன்...

ஆனால் 
எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
ஆனதாக இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

எனது கண்ணீர் 
என்னைத் தூய்மையாக்கும்...
வாழ்வின் இரகசியங்களையும்
அதன் மர்மங்களையும்
எனக்கு அடையாளம் காட்டும்...

எனது புன்னகை 
என் மக்களின் 
மிக அருகில் 
என்னை அழைத்துச் செல்லும்...

படைப்பின் மகத்துவத்தை
எனக்கு உணர்த்தும்...

எனது கண்ணீர் 

துவண்ட நெஞ்சங்களின்
துணையாக 
என்னைச் சேர்க்கும்....

எனது புன்னகை 

வாழ்வின் 
அர்த்தத்தை 
நான் அறியச் செய்யும்...

நான் 
மனக்கசப்போடு
நம்பிக்கையின்றி
வாழ்வதைவிட

ஆசையோடும்
ஏக்கத்தோடும்
இறப்பதையே 
விரும்புகிறேன்...

அன்பிற்கும்
ஆராதனைக்குரிய அழகிற்குமான
எனது தேடல்..
எப்போதும் என் நெஞ்சில்
நிலைத்திருக்க வேண்டும்...

தேடல் இல்லாத போது
வாழ்க்கை 
இழிவானதாகிறது....

அன்பிற்காக ஏங்கும் 
ஆன்மாவின் ஒலி
மெல்லிசையை விட
இனிமையானது....

மலர்கள் 
மாலையில் 
ஏக்கத்தோடு தன்
இதழ்களை மூடிக்கொள்கின்றன...

காலையில் 
கதிரவனின் காதல்
முத்தத்தால் தங்கள் 
இதழ் விரிகின்றன....

பூக்களின் வாழ்க்கை 
ஏங்கியும், நிறைவேறியும்
நகர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

மேகம்
கடலிலிருந்து
எழுந்து
நிலம் கடந்து
மலை அடைந்து
சில்லென்று தென்றல் தீண்ட
மழையாய் பொழிகிறது...

மழைநீர் 
மலையில் விழுந்து.,
வயலில் விளைத்து 
ஓடையாய் ஓடி மீண்டும் 
கடலிலே கலக்கின்றது....

மேகங்களின் பயணம் 
பிரிந்தும் சேர்ந்தும் 
தொடர்கிறது...

கண்ணீரும் புன்னகையுமாய்...

ஆன்மாவின் பயணமும்
அப்படியே...

பேரான்மாவிலிருந்து
பிறந்து
துயரத்தின் மலைக்கடந்து,
சந்தோஷ சமவெளி தாண்டி,
மரணத்தின் 
மென் தீண்டலால்
மீண்டும் 
தனது இருப்பிடமான
பேரான்மாவையே அடைகிறது...

இறைவனை நோக்கிய
ஆன்மாவின் பயணம்...

கண்ணீரும் புன்னகையுமாய்

எனவே

எனது வாழ்க்கை 
கண்ணீராலும்
புன்னகையாலும்
நிறைந்து இருப்பதையே 
நான் விரும்புகிறேன்...

Tuesday, October 29, 2019

விடுதலை

Rabindranath Tagore's poem
'FREEDOM' in Tamil. 

விடுதலை 
_____________

என் தாய்த்திரு நாடே!!!

உனக்கு 
உன் பயங்களில் இருந்து
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
பழமையின் சுமையால் 
தலைக்கவிழ்ந்து
முதுகு வளைந்து 
கிடக்கிறாய்...
வருங்காலத்தின் சைகைகளை
அறிய முடியாமல்....
குருடாகி நிற்கும் உனது
இந்நிலையிலிருந்து...
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....

உன் 
சோம்பலில் இருந்து
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன் 

நீ
இரவின் நிசப்தத்தில் 
உண்மையின் 
பாதைக் காட்டும் 
நட்சத்திர வெளிச்சத்தில் 
நம்பிக்கை கொள்ளாமல் 
ஒளிந்துக் கொள்கிறாய்....

என் தாய்த்திரு நாடே!!!
விதியின் பிடியில் இருந்தும்
உனக்கு
விடுதலை வேண்டுகிறேன்....

நீ
கடலில் மிதக்கும் 
கட்டுமரமாய் இருக்கிறாய்...
உனது பாய்மரம்
காற்றின் வீச்சால்
திக்குத் தெரியாமல் 
அலைகழிக்கப்படுகிறது...
உன் துடுப்புகளோ
மரணத்தின் 
கொடிய  பிடியில்
அழுத்தப்படுகிறது...

நீ
கயிற்றால் ஆடும்
பொம்மலாட்டப் பதுமையாய் 
இருக்கிறாய்...

குறிக்கோளற்று 
பழக்கத்தால் ஆட்டுவிக்கும் 
உன் எஐமானனுக்காக
பயத்தோடு காத்திருக்கிறாய்....
என்ற  பழியிலிருந்தும்
உனக்கு 
விடுதலை வேண்டுகிறேன்....