Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.


நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?

மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை


வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
அழுமோசை காதில் விழவில்லை செத்து
விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.

இன்னல் அகன்று இனிதாய் இவர்வாழ
மின்மினிகள் கைக்கோர்த்து கண்ணோ[டு] விளையாட
கற்று உயர்ந்திவர் காதலித்த றம்நாட
கற்பனைச் செய்திடுதே நெஞ்சு
.

வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
இல்லை உமக்கே யிடர்.

அமுதாவின் தமிழ் பற்றும், அவரது பணியையும் வாழ்த்தி எழுதியது.


நாணுகின்றேன் நற்றமிழில் நீரெனையே ஓர்கவி
என்றதனால், நாடுகின்றேன் உந்தனையே நற்கவியை
நான்புனைய நல்லிலக்க ணங்கற்பிக் கும்நீர்
எனக்கே இராச குரு.

Add Video
யாப்பிலக்கணத்தோடு சொல்லிலக்கணமும் கற்பிக்கும் திரு.இராச குரு அவர்களுக்கு வணக்கத்துடன்.


எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
பயின்றிட காத்திருக்கி றோமிங்கு நன்றாம்
பிரவா கமென்னு மிலக்கண நண்பர்
குழுப்பக்கம் சற்றே திரும்பு.

[பிரவாகம் குழு பக்கம் அமுதா வராது போனதால்]

Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

தீயின் வெம்மை -கடவுள்;
நீரின் நீர்மை -கடவுள்;
பெண்ணில் தாய்மை -கடவுள்;
கண்ணில் பார்வை -கடவுள்;
மண்ணின் உயிர்ப்பே -கடவுள்;
விண்ணின் விரிப்பே -கடவுள்;
நெஞ்சில் நேர்மை -கடவுள்;
நினைவில் கருணை -கடவுள்;
எண்ணம் கடவுள்;
எழுத்தும் கடவுள்;
எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்;
ஆதலால் உலகத்தோரே!
தீயில் நன்மைக் காண்பீர்
நீரின் தன்மைக் கொள்வீர்
நெஞ்சில் தாய்மைக் கொண்டே
மண்ணில் உயிர்கள் காப்பீர்
தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.

Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழுத்துப் பிழைநீக் கியன்று!

திரு அகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவில் எழுதியது. திரு. அமுதாவின் சில திருத்தங்களுடன் இங்கே.

Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும்
இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும்
நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம்
மனம்மயக்கும் மாயத் தமிழ்.

திரு.அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எழுதியது.

Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில் எழுதியிருக்கிறார். அவரது நூல் மிகச்சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துகளுடன்.....

சீறாய் சிறுவர்தம் சிந்தை சிறந்திட
நேராய் சிலசொல்லை சேர்த்திங்கு என்றுமே
மாறாத பண்பை மனதில் பதித்திட
தாராய் 'மழலை மருந்து'.

தண்ணெண மாறும் தழல்

அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும்
தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல்
கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே
தண்ணெண மாறும் தழல்.

Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை
கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே
வீழ பயந்தது போதும் வெறியொடு
ஈழத் தமிழா எழு

மெய்யடா மெய்யடா மெய்

இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை.

போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின்
கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும்
நயவஞ் சகமெண்ணி நெஞ்சம் கொதிப்பது
மெய்யடா மெய்யடா மெய்.

[திரு.அமுதா திருத்திய சில மாற்றங்களுடன்]

கூட்டனி யாருடனோ கூறு

அரசியல் இல்லா கூட்டனியிது.

சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது
கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை
தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிகற்றோர்
கூட்டனி யாருடனோ கூறு.

உழவின்றி உய்யா[து] உலகு

அமுதா அவர்கள் கொடுத்திருந்த ஈற்றடி கொண்டு சில வெண்பாக்கள்

கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்
உழவின்றி உய்யா துலகு

ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்
உழவின்றி உய்யா துலகு.

Tuesday, April 28, 2009

பட்டாம்பூச்சிக்கு bye bye

வண்ண சிறகசைத்து
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே, என்
எண்ண இதழ் விரித்து
மலர்ந்திருந்த
கவிதை பூக்களில் நீ
தேனை மட்டுமா அருந்திச்சென்றாய்
சில மகரந்தங்களையுமல்லவா
தூவிச்சென்றிருக்கிறாய்.

எத்தனை பூக்களை
அறிமுகம் செய்துவைத்திருக்கிறாய்.

என் கவிதைகளில்
வாசம் விட்டுச்செல்லும்

வண்ணப்பூச்சியே
உன்னை வழியனுப்ப
மனதில்லைதான்..
என்றாலும் சென்று வா...
ஆனால்
மறுபடியும் வா
உன் அரும்பசி தீர
சில அரிய மலர்களில்
தேன் நிரப்பி
தருகிறேன்.

இப்போது
அன்புடன் போய்வா...

இந்த பட்டாம் பூச்சியை நான் அனுப்புவது


பூக்களையும், பட்டாம் பூச்சிகளையும், கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் மறந்து பதுங்கு குழியில் பயந்திருக்கும் பிள்ளைகளின் அவலத்தை தன் கவிதைகளில் கண்முன்னே காட்டும் திரு. தீபச்செல்வன் [
http://deebam.blogspot.com/] அவர்களின் தோட்டத்திற்கு. கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். இவரது 'பதுங்குக்குழியில் பிறந்த குழந்தை 'புத்தகத்தை கண்காட்சியில் வாங்கியதன் பின்பே இவரது வலைப்பதிவைப்பார்த்தேன். நெஞ்சை உலுக்கும் இலங்கை தமிழர் படும் அவதிகள் புகைப்படங்களாகவும் கவிதைகளாகவும் இவரது பதிவில். இவருக்கு இவ் விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். அவர் இதை ஏற்றுக்கொண்டால் பட்டாம்பூச்சி விருது பெருமை பெரும்.

அடுத்ததாக அகரம் அமுதா [http://agaramamutha.blogspot.com/] அவர்களுக்கு
வார்ப்பு இதழில் வெளியான இவரது கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர். சிறந்த மரபு கவிதைகள் எழுதக்கூடியவர். இவரது 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எளிமையாக வெண்பா இலக்கணம் கற்றுக்கொடுத்திருப்பார்.மிக அற்புதமான ஆசிரியர். இவரது தமிங்கிலிஷ்.காம்,இலக்கிய இன்பம், அகரம் அமுதா ஆகிய வலைத்தளங்கள் இவரது மற்ற முகங்களை அடையாளம்காட்டும். இவரது ஊதுபத்தி கவிதை மிக இனிமையானது. இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறார். அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம். இவருக்கு இந்த விருதை குரு தட்சினையாக வழங்குகிறேன். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.

அடுத்ததாக தோழி ஹேமா [
http://kuzhanthainila.blogspot.com/] பின்னூட்டங்கள் வழியாக இவரை அறிந்தேன். யாழ்பாணத்துக்காரர். தன் தேசத்து துயரைத் தன் கவிதைகளில் வழியவிட்டிருப்பார்.ஊடகங்க்கள் மூலம் நாம் காணும் இலங்கை வேறு. தோழி ஹேமா மற்றும் திரு.தீபச்செல்வன் காட்டும் இலங்கை வேறு.இவருக்கு இவ் விருதைத்தருவது இவர் தேசத்து மக்கள் வாழ்வில் மலர்கள் மலரவும், மலர்தோறும் பட்டாம்பூச்சிகள் வட்டமிடவும்,பதுங்க்கு குழிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவும் இறைவனை பிரார்த்தித்த படி.
அதுமட்டுமல்ல இவரடு இன்னொறு வலையான உப்பு மடச்சந்தியில் தோஸ்து சென்னைத்தமிழை ஆராய்ந்து தூள் கிளப்பியிருப்பார். அதற்காக டாக்டர் ? பட்டமெல்லாம் பெற்றிருப்பார். நாமும் இந்த விருதை கொடுத்து வைப்போமே.
எனக்கு பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்திய திரு.சொல்லரசனின் [
http://sollarasan.blogspot.com/] வலைமூலமாகத்தான் பல வலைப்பக்கங்களை புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. என் பதிவுகளில் பின்னூட்டமிட்டு எனக்கு உற்சாகமூட்டினார். அவருக்கு நன்றியுடன் பட்டாம்பூச்சிக்கு bye,bye.

















Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்டுமே எழுதி படித்து வந்தேன். சமீபகாலமாக பல நண்பர்கள் வருகைத்தருவதும் பின்னூட்டமிடுவதும் எனக்கு ஆச்சரியமானதே. மகிழ்ச்சியும் கூட. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது. ஆனாலும் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம் தான். பல அரிய [வலைப்] பூக்களைஎல்லாம் பார்த்த பின் என் சின்னச் செடிகளில் சற்றே ஏமாறலாம். இருந்தாலும் சிறிதேனும் என் கருத்துத்தேனை பருகுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...

Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது.

*மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே

ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு

கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க

அணுவாற்றல் வேண்டும் அறி.


*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை

கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்

வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்

அணுவாற்றல் வேண்டும் அறி


*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி

Sunday, March 22, 2009

கண்ணாடி என்செய்யும் காலணிதான் என் செய்யும்....

கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...


கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்

Friday, March 20, 2009

காதல்

அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்


தாழ்ந்த விழி
தரை நோக்க
தனித்தியங்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்


பூ விதழ்
புன்னகை வீச
பூகம்பம் வெடிக்கும்
இதயத்தில்


இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்


மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்


கட்டில் தாண்டியும்
கரம் சேரும்


காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்

Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

அக்கரைப் பச்சை

கூலித் தொழில் செய்யக்
கூப்பிட்டார் அதை
நாடி நம்சனங்கள் சென்றனரே!

ஏர் ஓட்டிச்செல்லும்
தொழில் மறந்து
கார் ஓட்டிச் செல்ல
மனம் விழைந்து
காலநேரம் தனை இழந்து
கணிணி முன்னே
கண் இழந்தனரே...

வீட்டை விற்றே
படித்த பிள்ளைகள்
நாட்டை விட்டே
பறந்தனரே...
சோற்றை உண்ட
கையாலே விஷக்
'கோக்'கை குடித்து
களித்தனரே...

கதை கவிதை
கற்பனை களிப்பினை
காசு பணத்தில்
மறந்தனரே...
குடும்பம் கோயில்
கலாச்சாரம்
குதூகலத்தை
இழந்தனரே...

கண்டோம் அவர்நிலை
பரிதாபம் அவர்க்கு
காதல் கூட கட்டாயம்
கண்ணித்திரையில்
'சாட்' செய்தே
காதல் கூட
கைக்கூடலாம்
குடும்பம் நடத்தல்
கூடுமோ?...

பாவம் அவர்தொழில்
படுத்தாச்சு
பாதிபேர் வேலை
போயாச்சு..
ஏறும் ஏற்றம்
பெரிதானால்
வீழும் வீழ்ச்சியும்
பெரிதாமே....

உழைப்பை மறந்து
போனதனால்
உடல் நலங்குன்றிப்
போயினரே...
உணர்வோம் இதனை
இப்போதே
உழைப்பை எள்ளி
நகையாதே

படித்த படிப்பை
நாட்டிற்கே
பயன்படச் செய்வோம்
இந்நாளே..
திறமையுடன் நற்
தொழில் செய்தே
உற்பத்தி திறனைப்
பெருக்கிடுவோம்...

உலகில் தொழில்கள்
எல்லாமே
உழவை நம்பி
உள்ளதனால்
உடலின் உழைப்பை
தள்ளாமல்
ஊக்கம் கொள்வோம்
உறுதியுடன்...

நாட்டின் நிலமை
சீராக
நாடி தொழில் பல
செய்திடுவோம்.
வரப்புயர
நீர் உயரும்
நீ உயர
நாடுயரும்
நாடுயர
நாம் உயர்வோம்...
நன்றாய் இதை
நாம் உணர்வோமே....


தீயிற் கொடியதோ தீ

நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர்
அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின்
வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந்
தீயிற் கொடியதோ தீ

Tuesday, March 10, 2009

வாக்களிப்போம் வாரீர்

மக்களை மக்களால் மக்களுக்காக
நல்லாட்சி நாடகங்கள்
நிறைவேறும் காலமிது...

உழுது பயிராக்கி
உலையிட்டு சோறாக்கி

ஆலையிட்டு நூலாக்கி
ஆடைதன்னை வெளுப்பாக்கி

கல்சுமந்து வீடாக்கி
காலமெல்லாம்
மண்தரையில் படுத்திருப்போர்...

மேடு பள்ளம் சீராக்கி
பாதை வகுத்தே
பயணம் செய்யாதிருப்போர்...

படித்து பட்டம் பெற்று
வேலையின்றி விழித்திருப்போர்...

வேலைக்கிடைத்தாலும்
காலைச்சுற்றுமே
கடன் தொல்லை
விலைவாசி ஏற்றத்தால்
உண்டானதோர் சுமையை
தோளில் சுமந்தே
சுற்றித் திரிந்திருப்போர்...

அனைவரும் வாரீர்!ஆதரவு தாரீர்!

என்றே
உங்களுக்காக ஓர் விழா!...
ஐந்தாண்டுக்கொருமுறை
அஞ்சாமல்
பிச்சை கேட்கும் பெருவிழா...


'பட்டை'காசுக்காக
காத்திருப்போர்க்கு
கட்டுக் கட்டாய்க் கிடைத்திடும் காசு

எட்டி உதைக்கப்பட்ட
ஏழை சனங்களுக்கெல்லாம்
'கட்டி' பிடித்தே
'துட்டு' கொடுகும் தெருவிழா...
எட்டி இருப்போருக்கு
பெட்டி' கொடுக்கும் பெருவிழா...


போனால் வாராது
பொழுது போனால் கிடைக்காது..
திரும்பி வரமாட்டாரிவர்...

தெருவில் குப்பை என்றாலோ
'பஸ்' இல்லை,பாதையில்லை
பள்ளிக்கு போக ஒரு வழியில்லை
மின்சாரமில்லை
அவசரத்திற்கோர் அஸுபத்திரியில்லை
தண்ணியில்லை எண்ணெயில்லை என்றாலோ...

இலவசமாய் தந்திடுவார்
ஓர் வண்ணத் தொலைக்காட்சி
வக்கணையாய் ஓரடுப்பு...

"சமையலோ சமையல்,
ருசியோ ருசி"

எத்தனையோ சொல்லித்தருவார்

போட்டு சமைக்க பொருளில்லை என்றால்
போய்விடுவார் தள்ளி...

எண்ணிப் பார்த்திடுவீர் இதை
எனதன்பு பெரியோரே...

உமது ஒரு ஓட்டுக்கு
ஊர் விதியை மாற்றும்
வலிமையுண்டு....

படித்து உழைத்து பிழைக்க
வழி செய்தாரா?

உண்டு உடுத்தி வாழ
வழி செய்தாரா?

இதை
எண்ணிப் பார்த்து
அளித்திடுவாய் ஓட்டு...
காசை
எண்ணிப் பார்த்து
கலங்காதே மனசு...

எரிகிற கொள்ளியில் எக்கொள்ளி நல்லது
என்பவரா நீர்?

ஓட்டளிக்கவேண்டாம்
மறுத்தளிக்க வாய்ப்புண்டு
மறக்காமல் இதை செய்வீர்...

போடாத ஓட்டெல்லாம்
போடப்படும் கள்ளஓட்டாய்...
போகாதீர் ஓர்நாளும்
தீமைக்குத்தான் துணையாய்...

வாக்களிப்பீர்
அல்லது
மறுத்தளிப்பீர்
ஓர் மடல்...

கண்ணுற்றே நன்நெறியைக் காண்

தழலின்றி இல்லைப் புகையே வெறுப்பின்
விழலின்றி இல்லைப் பகையே-சுழல்கின்ற
மண்ணுலகில் அன்பின்றி விண்ணுலகம் தோன்றாதே
கண்ணுற்றே நன்நெறியைக் காண்.

Thursday, February 26, 2009

2. ஈழத் தமிழர் இடர்

பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்
காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்
காவிரி தன்னொடு என்றுமே தீராதோ
ஈழத் தமிழர் இடர்.

வெண்பா வரைந்தேன் விரைந்து

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.

Friday, February 20, 2009

நேர்மையாய் வாழ்வதே....

நூறு கோடி மக்கள் வாழும்
அகில இந்திய அளவில்
தலைப்புச் செய்திகளாய்.....
ஆறாயிரம் கோடிக்கு ஊழல்..
அறுநூறு கோடியில் ஒப்பந்தம் அதில்
அறுபது கோடி கமிஷன்..
ஆறு கோடி பொதுப்பணம்
ஐந்து வருடத்தில் வீண் செலவு..
அறுபது லட்சம் வரி ஏய்ப்பு
ஆறு லட்சம் லஞ்சம்
அறுபதாயிரம் கொள்ளை
ஆறாயிரம் திருட்டு
அறுநூறு ரூபாய் பொருளில் போலிகள்
அறுபது ரூபாய் பொருளிலும் எடை ஏய்ப்பு
ஆறு ரூபாய் கடுகிலும் கலப்படம்
ஐம்பது பைசா பிச்சையும்
செல்லா காசு.......

யார் சொன்னது?

'நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' என்று

நேர்மை......
மரபுக் கவிதை
ஆஹா! ஓஹோ! போடலாம்

வெற்றி....
தன் இலக்கணத்தை இழந்து
பல நாட்களாயிற்று....

பார்த்து எழுதுங்கள் உங்கள்
புதுக்கவிதைகளை........

Friday, January 30, 2009

"மெனோபாஸ்"

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா"

பாரதியார்.

உள்ளம் சோர்து போகும் நெஞ்சில்
உற்சாக மின்றி ஆகும்
கோபம் வரக் கூடும் கடுஞ்
சொல்லும் வீச லாகும்..

உடலின் உறுதி போகும் நாளும்
தேயும் எலும்பும் வாட்டும்
கூடும் எண்ணம் ஓடும் எதிலும்
நாட்ட மின்றி வாடும்..

குற்ற மவள்மேல் இல்லை இயற்கை
மாற்ற மிந்த தொல்லை
நாற்ப தொத்த வயதில் பெண்மை
நலன் கெடுவ துண்டு..

உண்மை நிலை புரிந்து நீயும்
ஒத்து ழைத்து வந்தால்
நீரில் பட்ட நெருப்பாய் இன்னல்
தானும் பட்டுப் போகும்..

கைப் பிடித்த கணவன் சற்றே
கால் பிடிக்க வேண்டும்
பெற்றப் பிள்ளைக் கூட கொஞ்சம்
பொறுமைக் காட்ட வேண்டும்..

காதல் சொன்ன கண்கள்
கவலை காட்டும் போது
கரும்புக் கதைகள் பேசி அவள்
கருத்தை நீயும் மாற்று..

ஓய்ந்து போன நெஞ்சில்
உற்சாகம் கொஞ்சம் ஊற்று
தாரம் அவள் துயரில்
தாயாக நீயும் மாறு..

தேனான சொல் ஊற்று
தீர்க்கும் அவள் தாகம்
பாடான இப் பாடு
பார்த்தால் சிறிது காலம்...

சத்தான பழமும் பாலும்
காயும் உணவில் கூட்டு
சீரகும் வாழ்வு அதனை
சிந்தை யில்நீ ஏற்று...

நேராக அவளும் நெஞ்சம்
தெளிவு பெறும் போது
தாயாக மாறி அவளே
தாங்கி டுவாள் உன்னை...

வயதான காலம் வாழ்வில்
வந்து விட்டப் போதும்
தோழி யாக நின்று
தோள் கொடுப்பாள் என்றும்...

கலக்காதே அம்மா!

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

வயிறு சுமக்காத
பாரத்தை
நெஞ்சு சுமக்க
'தாயாக' தவித்திருப்போர்
தவமிருக்க
தானாக வந்ததனால்
எனதருமை
தெரியாது போய்விட்டதோ
என் தாயே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை..

ஆணாகப் பிறந்திருந்தால்
அழித்திருக்க மாட்டாய் தான்
என்றாலும்
சேயாக எனையிங்கீன்ற நீ
பெண்தானே? ஆணல்லவே?

நாளை உன் மகனுக்கோர் இணை
பெண்தானே? ஆணல்லவே?

கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

தினம்
குடித்து குடித்து
உனை
அடித்து அடித்து
எனைத் தந்த
என் தந்தை
ஆணல்ல அம்மா
அறிந்து கொள்...

உனை பொருளாக்கி
உதைத்து
உணர்வழித்து
என் உயிரழிக்க முற்பட்ட
வஞ்சகன்
ஆணல்ல
அவனுக்கு மகளாக
எனக்கும் ஆசையில்லை

ஆனாலும்
கலக்காதே அம்மா
கள்ளிப்பாலை

எனையோர்
அரசு தொட்டிலில்
விட்டு விடு...
எனைபோல்
அக்னி குஞ்சுகள்
ஓர் நாள் நெருப்பாகும்
வெந்து வீழுமம்மா
வீணர் ஆணாதிக்கம்..
வீட்டில் பெண்ணை
அடிமைப் படுத்தும்
மூடர் பரம்பரை
மண்ணில் சாய
வேர் பொசுக்கி
வெற்றிக் கொள்வோமம்மா...

அதுவரை
கலக்காதே அம்மா
கள்ளிப்பலை

எனையோர்
குப்பைத்தொட்டியிலாவது
எறிந்து விடு

கலக்காதே
அம்
ஆ.........

Sunday, December 28, 2008

விலைமகள் வேதனை

[இப் பாடல் வெண்பா கற்பதற்கு முன் எழுதியது. இது வெண்பா இல்லை . நாலடிகளாய் வந்தாலும் தளைகள் சரியாக இருக்காது.]
இருவர் செய்யும் தவறில் ஆணுக்கு அறிவுரையும் பெண்ணுக்கு பழியையும் மேலும் தண்டணையையும் தருவது இவ்வாணாதிக்க உலகு.பெண்ணொருத்தி தவற ஆண்கள் பலபேர் காரணம்மென்பதை வசதியாக மறந்துவிடும் உலகம்.ஒருபுறம் விண்ணையும் சாடும் பெண்கள் மறுபுறம் விலையாகும் பெண்கள்.இன்னும் பலத்தடைகளைத் தாண்ட வேண்டும் இவர்கள்.

பெண்ணை பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப்பழித் துரைத்து பொல்லாத
கொலைமகள் விலைமகள் வேசியென் றுபேசி
கொல்லும் நெஞ்சையிவ் வாணுலகு.

கட்டிய கணவன் கள்ளைக் குடித்து
எட்டி உதைத்தால் ஏழைப்பெண் ணொருத்தி
இடறி விழுமிடம் வெறிநாய்க் கூட்டம்
கடித்துதறும் கட்டில் காண்.

தவறி பிறந்தாலும் தன்பிள்ளை என்பதனால்
தன்னை விருந்தாக்கி பசியாற்றும் பெண்மைக்காண்
கட்டில்சுக மல்லஅவள் காண்பதுவே பிள்ளை
தட்டில் ஒருபிடிச் சோறு.

படிப்பில்லை பொருளில்லை பசியாற வழியில்லை
வீதியிலுறங் கிடும்வேதனை தாங்காத போது
வெறிநாய்க் கூட்டம் விருந்துக் கழைக்க
வேசி ஆனாள் இவள்.

பிள்ளை பாசியாற பெற்றவர் தனைக்காக்க
கணவன் நோய்தீர கடமை தனதாக்கி
விலையாகும் பெண்ணை விலைபேசும் கயவன்
காண்பது காமம் மட்டுமே...


இப் பாடல்களை வெண்பாவின் இலக்கணத்துள் அடைக்கும் முயற்சி.
பெண்ணைப் பொருளாக்கி போதைக் கடிமையாகி
பின்னை அவளைப் பழித்துரைத்தே அன்னவள்
பொல்லா கொலைமகள் வேசியென்று பேசியேக்
கொல்லுந்நெஞ் சையிவ் உலகு.

கள்ளைக் குடித்து கணவன் தினமுமே
தொல்லைக் கொடுக்க ,படித்திடும் பிள்ளையும்
கல்லை உடைக்க, சில்லாய் சிதறியே
எல்லைக் கடந்தாள் இடிந்து.

படிப்பும் பொருளும் பசிதீர் வழியுமில்லை
வீதியிலு றங்கிடும் வேதனைத் தாங்காத
வேளை வெறிநாய்க் கூட்டம் விருந்தாக்க
வேசியென ஆனாள் இவள்.

தவறிப் பிறந்தாலும் தன்பிள்ளை என்றே
அவன்பசி போக்கும் அல்லல் அவளேற்க
கட்டில் சுகமல்ல காண்பதவள் பிள்ளையின்
தட்டில் ஒருபிடி சோறு.

Wednesday, December 24, 2008

தொட்டில் குழந்தைகள்

சின்ன சின்ன மத்தாப்பூக்கள்
சிரிக்கத்தெரிந்த ரோஜாக்கள்
தத்தி நடக்கும் மான் குட்டிகள்
கத்தி பேசும் கருங்குயில்கள்
கண்கள் இரண்டும் வண்டினங்கள்
காலைநேர பனித் துளிகள்
ஒலிஎழுப்பும் ஓவியங்கள்
ஒவ்வொன்றும் இரத்தினங்கள்
சக்கரக்கட்டி மனசுக்குள்
வெல்லக்கட்டி பேச்சுகள்
அத்தனையும் புறந்தள்ளி
அடிமனசை கல்லாக்கி
எங்கே சென்றனர் இவர் தாய்மார்கள்
குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
தொட்டில் குழந்தையாக்கிவிட்டு
எட்டிநின்று பார்ப்பாரோ
ஏக்கம் கொண்டு துடிப்பாரோ
தொல்லை ஒன்று விட்டதென்று
தன்சுகமே காண்பாரோ...
பிள்ளை ஒன்று பெறாததனால்
தள்ளி வைத்த என்கணவன்
தான் அறிவானோ...
எத்தனை சூரியன்கள் எனைச்சுற்றி
எத்தனை மின்மினிகள் அவர்கண்ணில்
முள்குத்தும் ஓர் நினைவை தள்ளிவைப்போம்
நாளை நமதென்று
நமதடியை எடுத்துவைப்போம்

Saturday, December 13, 2008

புத்தண்டே வருக

அன்றொருநாள்
வெள்ளைப்பரங்கியர்
வந்திறங்கிய
வெற்றுவாயில்
வழியாக
இன்றிறங்கிய - வீணர்தம்
வெடிச்சத்தம் விண்ணைப்பிளக்க
கதறியழும் குழந்தை சத்தம்
பெற்றவர் கல்லறையில் புதைந்துவிட
பெட்டி பெட்டியாய்
வெடிமருந்து
பரிசாகக் கொண்டு
புறப்படவேண்டாம்

புத்தாண்டே...........

பூக் கொண்டு வா
மணம் வீசி
பிணவாசம் போக்கு...
நீர்க் கொண்டு வா
வறண்ட இதயத்தில்
ஈரம் கசிய...
தேன் கொண்டு வா
கசந்த உறவுகள்
இனிமை காண...
அமைதி அள்ளி வா
எம்மிதயத்தில் அது
நிலவியிருக்க.....
காதல் கொண்டு வா
கவலை மறக்க....
கண்ணியம் கொண்டு வா
திறமை வளர்க்க....
நேர்மை கொண்டு வா
நெஞ்சில் நிலைக்க...
உண்மை கொண்டு வா
ஊழல் மறைய....
தீரம் கொண்டு வா
தீவிரவாத தலையறுக்க....

அன்பை கொண்டு வா
புத்தாண்டே...
அனைவரும்
மகிழ்ந்திருக்க....
புன்னகை கொண்டுவா
புத்தாண்டே.....
பூக்கள் கொண்டு வா..........


Friday, November 21, 2008

கண்ணாடி



கண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி...

சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.....


Wednesday, October 15, 2008

அம்மா

10.10.2008

எனது பிறந்த நாள் உனக்கானது..

வலி பொறுத்து

எனைமடி தாங்கி

மாதங்கள் வருடங்கள் ஓடிவிட்டன....

எத்தனையோ தூரங்கள்

நாங்கள் கடந்தலும்

எங்களின் முதலடியை

எடுத்து வைத்தவள் நீ

எங்களுக்கு முகவரி தந்தவளும் நீ...

உன் உயிர்குடித்தே

எங்களின்

வாழ்நாள் கணக்குத் துவங்கியது..

உன்ஆசைகளை

கனவுகளை

கொண்டே

எங்கள் பயணத்திற்கு

பாதை வகுத்தாய்...

முட்களையும்

மலராக்கும்

வித்தை தெரிந்திருந்தாய்...

உன் காயங்களை

எங்களின் பாதையில்

எச்சரிக்கை பலகையாக்கினாய்...

உன்

உழைப்பை

விடா முயற்சியை

தன்னம்பிக்கையை

எங்கள் பாதையில்

வெளிச்சம் தரும் 

விளக்குகளாக்கினாய்...

எங்கள் சிறகுகள் விரிய

நீ வானம் ஆனாய்...

ஒருபுறம் வெப்பம் தாங்கி

மறுபுறம் நிழல் தந்து

நிற்கும் விரூட்சம்...

ஏற்றிவிட்டு அமைதியாய்

நின்றிருக்கும் ஏணி...

வாசம் தந்து

வாடும் மலர்...

சுவாசம் தந்து

வீசும் காற்று....

இப்படி

எத்தனையோ

விஷயங்கள்

நினைவூட்டும்

உனக்கான என்கடமையை....

இனி

மாற வேண்டும் அம்மா..

நீ என் மகளாக...

என் மடித்தூங்கி

உன்கவலை மற..

என் கைப்பிடித்து

உன் காலடி

எடுத்துவை..

நீ கொடுத்த அமுதம்

என் கண்ணில் நீராய்...

நீ கற்றுத் தந்த தமிழ் கொண்டு

ஒரு கவிதை மலர்

உன் காலடியில்...

ஆசிர்வதி அம்மா..

இன்றெனது

பிறந்தநாள்

இனிமை கொள் அம்மா

என் பிறந்த நாள்

உனக்கானது

வலி பொறுத்து

எனை மடிதாங்கி

மாதங்கள் வருடங்கள் 

ஓடிவிட்டன.........

Thursday, July 03, 2008

மொட்டை மாடி புல்

எல்லையில்லா காட்டை யழித்தே இங்கு
கட்டிடங்கள் கட்டு கின்றார் அதன்மேல்
புல்லைவளர்த் தேபோற்று கின்றார் பாழ்பசிக்கது
பழம்தருமோ நிழல்தந் திடுமோ நிற்க
மணம்தருபூக் கள்மலர்ந் திடுமோ மண்ணைக்
காத்திடுமோ ஏழை ஒருவன் தாகம்
தீராதிருக்கை யிலேநீர் தருமோ நெஞ்சில்
ஈரமில்லா தொருவன் தினம்பத் துவாளி
நீர்பாய்ச்சி வளர்த்து விட்டப் புதுப்பணக்
காரன்வீட் டுமொட்டை மாடி வளர்புல்

Friday, July 06, 2007

புதுப்பிறவி

என்னுள் கருவாகி
என்னுயிரில் கலந்து
என்ணுணர்வை தனதாக்கி
என்னை எனக்கே அடையாளம் காட்டி
வெளிவரும்
ஒவ்வொரு கவிதையுமே....

எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி

சீக்கிரமாய் விட்டுவிட்டதால்
பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு
வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'
சீடையும் முறுக்கும்
'ஸ்பெஷல் பாக்' வாங்கிக் கொண்டு
அரைலிட்டர் பால் பாக்கெட்டோடு
உள்ளே நுழைந்தது
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி...

கண்ணா ஷு வை ஓரமாய் வை..
குளி,யூனிபார்ம் மாற்று என்ற
வழக்கமான அர்ச்சனையோடு
ஆரம்பமானது பண்டிகை...

பிஞ்சு விரல்களால் நெற்றியிலிட்ட விபூதி
கண்ணக்குழிவிலும் மூக்கு நுனியிலும் சிதற
குழந்தைக்கண்ணன் ரெடியாகி விட்டான்...

அவனுக்குத் தெரியும்
இன்று விசேஷமென...

பள்ளியிலிருந்து திரும்பும் சாயங்கால வேளைகளில்
வீட்டில் அம்மாவும் சூடான பாலும் டிபனும்
விசேஷம் அவனுக்கு...

அரைடம்பளர் காபியோடு
அவசரக் கோலமும் குளியலும் முடிந்து
'ஆண்டவா' என நின்றப் போது
கோபந்தான் அவன்மேல் சிறிது

அழித்து விட்ட ஒரு கம்சனைப்போல்
அழிக்காதுவிட்ட ஆயிரம் கம்சன்களுக்காக
எந்த யுகத்தில் தான் நீ சம்பவிக்கப்போகிறாய்
என அரை மனதில் யோசித்தாலுமா

எங்கள் வீடுகளில்
குட்டி குட்டிக் குழந்தைகளாய
என்றும் அவதரித்து
புதிது புதிதாய் குறும்பு செய்யும் அவனை
கோபிக்கவும் முடியாமல்

'நெட்டில்' தேடி பிடித்து
மகாராஜபுரம் சந்தானமும்
உண்ணிக்கிருஷ்ணணும்
உருகி உருகி
'ஆடாது அசங்காது வா...கண்ணா....'
என்றழைக்க

என் மடியில்
எங்கள் வீட்டு குட்டிக்கிருஷ்ணன்
மூடிய கைகளில்
முறுக்கும் சீடையுமாய்..
அம்மா 'ஓவரா சாப்பிடலாமா' என கேட்க
கண்ணனுக்கு நைவேதியமும் ஆனது....




Friday, June 29, 2007

வெயில்

குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்
பெரியவர்களின் பொறாமை
அம்மாக்களின் சுயநலம்
அப்பாக்களின் கஞ்சத்தனம்
சான்றோரின் பொய்
தொழிலாளியின் சோம்பல்
பணக்காரனின் நீச்சத்தனம்
ஏழைகளின் சுயவிரக்கம்
ஆண்களின் அதிகாரம்
பெண்களின் புலம்பல்
பிச்சைக்காரர்களின் நச்சரிப்பு
பொதுக்குழாயில் சச்சரவு
இவைப்போன்று எரிச்சலூட்டக்கூடியது
மே மாத கத்தரி வெயில்

கண்ணங்குழிந்த குழந்தை முகம்
பெரியவர்களின் அரவணைப்பு
அம்மாவின் மடி
அப்பாவின் கைப்பிடி
ஆண்களின் நேசம்
பெண்களின் புன்னகை
இப்படி இதம் தரக்கூடியது
தெருவோர ஆலமர நிழல்....

பாட்டிகள் மாறிவிட்டார்கள்

அந்தக் காலம்
அங்கலாய்க்கிறாள் பாட்டி
எதிரில் நின்றிருப்போமா
எதிர்த்து பேசியிருப்போமா?
சொன்னதை செய்து
கொடுத்ததை சாப்பிட்டோம்....

ஆம்
அது அந்தக் காலம்
நடுங்கும் விரல்களால்
அழுந்த எண்ணெய்த்தடவி
பின்னிவிடும் வேளையில்
பலப்பல கதைகள் சொல்லி
சுரம் காண்ட நேரத்தில்
மிளகு ரசம் சுட்ட அப்பளம்
பண்டிகை காலத்தில்
சீடை கைமுருக்கு
அதிரசம் போளி
அத்தனையும் செய்து கொடுத்து
சட்டி சோற்றையும்
கட்டித் தயிர்விட்டு பிசைந்து
கைகளில் குழித்து விட்டு
வத்தல் குழம்புபோடு
வகையாய் உண்ணவைத்து
வெண்டைக்காய் கத்தரிக்காய்
பாவக்காய் ஆனாலும்
பக்குவமாய் சமையல் செய்து
பாசமாக பரிமாறி

விளையாட்டாய் வேலைவாங்கி
வேடிக்கையாய் சொல்லிக்கொடுத்தது
எல்லாம் அந்தக்காலம்

'லேஸ்' சிப்ஸ் வாங்கி தந்து
குழந்தைகளின் வாயடைத்து
'பந்தம்' 'பாசம்''நிம்மதி'
பார்க்கும் பாட்டிகள்
சொன்னால்
எந்த வேலையும் செய்வதில்லை
இந்தக்காலக் குழந்தைகள்.....

Monday, March 19, 2007

பெண்கள் கும்மி


கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கிட கைக் கொட்டி கும்மியடி
பாரதி கண்ட பெண்ணுலகை நேரில்
பார்த்திட வேணுமென கும்மியடி...

பெண்ணுக்கு பெண்ணே பகை யெனவே
பேசி பேசியே பகை வளர்த்தார்
அத்தனைச் சொல்லையும் தூக்கிலிட்டே நாம்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

கற்பனை காவியம் இலக்கியம் நாடகம்
இக்கால கணிணி என்றெதிலும்
எங்களின் கால்தடம் பதித்துவிட்டோம் தூர
தேசத்திலும் கூட பெயரெடுத்தோம்

குடும்ப நலனிலும் குறையுமில்லை கொண்ட
கணவன் மனமும் கசந்ததில்லை
பிள்ளை படிப்பிலும் தேக்கமில்லை கூட
இருப்பவர் யாரும் பகையுமில்லை

உணவு உடைத் தோற்றம் என்றெதிலும்
மாற்றங்கள் ஆயிரம் கண்டதுண்டு தாய்
உள்ளத்தில் மாற்றங்கள் கண்டதில்லை
தமிழ் பண்பையும் நாங்கள் மறந்ததில்லை

நேர்மையுண்டு நெஞ்சில் ஈரமுண்டு
திறமை யுண்டு திட எண்ணமுண்டு
வாய்மை கொண்டு செய்யும் தொழிலெதிலும்
சக்தி துணையுமுண்டு வெற்றி காண்பதுண்டு

கட்டிய இறக்கைகள் கட்ட விழ்ந்தே
விட்டன வானில் பறந்து விட்டோம்
எட்டிப் பிடிப்பவர் யாருமில்லை எங்கள்
பாதையில் தடைகள் ஏதுமில்லை
...............வேறு...............................................................
எத்தனை நன்மைகள் பெற்றாலும் பெண்கள்
ஒடுக்கப் படுவது இன்று முண்டு
எண்ணெய் அடுப்புகள் எரிவதுண்டு இங்கே
பெண்கரு கருவிலே கலைவ துண்டு

என்றைக்கு இந்நிலை மாறிடுமோ சமுதாய
ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடுமோ
இன்றைக்கே பெண்நிலை உயர்ந்திடவே
ஏற்றுக் கொள்வோம் சபத மொன்று...

பிறந்த நாள் பரிசு.

பாலுண்ணும் பிள்ளைக்கு பரிசாக்க வேண்டும்
தோதாக ஏதிருக்கு பரிசாக நான் தர

பச்சை புல்வெளியில்லை
பரந்து நிற்கும் வயலில்லை
சுற்றி தோட்டமிட்டு வற்றாத நதியருகே
எட்டாத உயரத்தில் கட்டாக பரணமைத்து
கட்டாத என் மனக்கோட்டை
காலூன்ற வழியில்லை

பச்சைத் தண்ணீரும்
பகிர்ந்துண்ண வேண்டும் நீ

ஆலும் வேலும் இங்கில்லை
அன்னைப்பாலும் சத்தில்லை

முயன்றே விடவேண்டும் மூச்சிங்கே

நேராக எதுவுமில்லை
தோதாக பரிசுனக்கு
நான் தர பூமியிலே

ஆனாலும் சொல்லிடுவேன் கேளாய் என்மகனே
நீயாக நினைத்தால் மாற்றிடலாம் இஃதையெல்லாம்
கருத்தாக ஓர்மரம் மண்தொட்ட இந்நாளில்
விளையாட்டாய் வைத்திட்டால்
விதையாகும் உன் உழைப்பு
வேங்கையாகும் வெற்றி


சோர்வாக வேண்டாம் சொல்லிடுவேன் மகனே கேள்
ஓசோனின் ஓட்டையையும் ஒட்டிவிடும் அறிவுண்டு
இங்கே
உன்கையில் உலகத்தை கொண்டுவரும் கண்ணி உண்டு
வெண்ணிலாவில் கால்வைத்து
வெட்டவெளி நடை நடந்து
பெண்டீரும் வெல்வதனால்
உண்டாகும் நன்மை பல உன்நாளில்
செவ்வாயில் குடியேறும்
திறம் கொண்டு அந்நாளில்
தேர்ந்ததொரு தொழிற்நுட்ப பயிற்சியாலே
வரலாறு திரும்பிடவே
மும்மாரி பொழிவதனால்
மூன்று போகம் விளைவித்து
முக்கனியின் சாறும் தேனும் பாலும் கற்கண்டும்

கலந்து வரும் காவிரியின்
பொங்கிவரும் புனலருகே
பூத்த ஒருசோலையிலே
அத்தரும் சந்தனமும் ஜவ்வாதும் மணந்திருக்க
ஆங்காங்கே முத்தும் பவளமும் மாணிக்கமும் மலர்ந்திருக்க
அறிவிற் சிறந்த பெண்டீரும்
அவர்க்கேற்ற ஆடவரும்
ஆனந்தமாய் களித்திருக்க
அத்தணையும் டிஜிட்டலில் அழகாக பதிவாக
கம்ப்யூட்டரில் விளையாடி கைக்கடுத்த குழந்தைகள்
காவிரியில் புனலாட கம்ப்யூட்டரில் பதிவாகி
கனடாவில் நண்பர்களும்
கண்டுக்களித்ததனை ஏக்கத்தோடு
'நயாகரா' வும் தோற்றுவிடும்
நலத்தோடு நந்தவனந்தன்னில்
"நடந்தாய் வாழி காவேரி" என
நயமாக மெயில் அனுப்ப

நடக்கும் அத்தனையும் நடந்தே தீரும்
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
இஃதே நானுனக்குத் தரும் பரிசாகும்

வளமான வாழ்வுனக்கு வந்துசேரும் நாள்வரையில்
உரைத்திடுவேன் ஓர் சபதம்
மக்காத பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி
மண்ணில் புதையுறவேமாட்டாதொழிப்பேன்
கண்ட இடத்தில் எச்சிலும் குப்பையும் கொட்டி
காற்றையும் வீணாக்க மாட்டேன் உறுதி

தயங்காது செய்வீர் இதனை
பிள்ளையைப் பெற்றோர்
பொறுப்பு நமக்கதிகம் புரிந்தே கொள்வீர்

நீர் நிலம் தீ நீ...

இல்லாதான் இருப்பவன்
கொடுப்பவன் கெடுப்பவன்
ஞானி மூடன்
அனைவரையும்
ஒன்றாகவே தாங்கும் நிலம்...

பசித்தவனின்
பிச்சை முட்டையையும்
பணக்காரனின்
கோழியையும்
ஒன்றாகவே சமைக்கும் தீ...

பிறந்த சிசுவையும்
பெற்றவன் சவத்தையும்
ஒன்றாகவே கழுவும் நீர்...

பெருந் தவத்தோனாயினும்
கொடுஞ் சினத்தோனாயினும்
குழந்தையாயினும்
கிழவனாயினும்
ஒரே சீராக
உள்சென்று வெளிவந்து
ஓர் நாளில்நின்றுவிடும் மூச்சு...

புல்லாகினும்
புழுவாகினும்
பெரியதொரு விலங்காகினும்
மரமாகினும்
மனிதனாகினும்
அவணியில் ஓர் அணுவாகினும்
அணைத்திலும் அவனையே காண்பது
சார்பகற்றி நேர்நின்ற
சான்றோன் மனது...

Saturday, February 03, 2007

மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொங்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது..
மறுபடி வந்தது
மாலை
நினைவில் வந்தது
கெஞ்சலும் கொஞ்சலும்..
சிரித்தும்
மகிழ்ந்தும்
கடந்த நாட்களில்
ஒரு நாள் மாலை
வந்தது ஊடல்..
மறுநாள் அலுவலில்
கையும் ஓடலை
காலும் ஓடலை..
மாலைவரை
காத்திருக்க
மனமும் விடவில்லை..
தொலைபேசி
சினுங்கியது
கணவன் காலிங்.... ....
மறுமுனை
அழுதது
மனைவி க்ரையிங்.... ....?
மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொஞ்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது...

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

கருவாய் உன்னுள்
நான் காலந்தபோது
அந்த
இருட்டுச் சிறையில்
இருந்த சுதந்திரம்

வெளிச்ச வெளியில்
வெட்டப்பட்ட சிறகுகளாய்...

மடிகிடந்து
மார்பணைத்து
கழுத்து வளைவில்
முகம் புதைத்து
கண்ணங்குழிய
கண்ட என் கனவு

பஞ்சு மெத்தை தலையணையில்
எட்டாகனியாய்
வட்ட மாத்திரைக்குள்...

அறியா பருவத்தில்
உணரா இனிமைகள்

காலம் கடந்து
தூங்கா என்
கண்களில்
எழுதா கவிதைகளாய்...

கனவு மெய்ப்பட
வேண்டும்
ஓர் உயிர்ப்பு
உன்னுள் கருவாய்
மறுபடியும்...

Wednesday, January 31, 2007

TN 22 Z 9326

கையிருப்பைக்
கரைத்து
என் காலுக்கு
ஓய்வளிக்க
கருப்புக்குதிரையாய்
என் வீட்டில் நீ...

கொஞ்சமாய்க்
கொண்டு
அதிகமாய்
கொடுத்தாய் மைலேஜ்...

'சாம்ப்'
உன் பொதுப்பெயர்...
'TN 22 Z 9326'
உன் சொந்த பெயர்...

ஓய்வு பெரும்
தொழிளாளிக்கு
உண்டாகும்
ஓர் ஈர்ப்பு..
தொழிற்சாலைமேல்...

ஆனால்,
உனக்காக
கலங்குவதோ
உன் அதிகாரி...

நீயோ,
வேண்டுதல் வேண்டாமை
இல்லாதவனாய்
அடுத்த
உன் எஜமானிக்கான
உழைப்போடு....


Monday, January 29, 2007

பாரதம்


இரவில் வாங்கிய
விடியல்
எங்கள் விவேகத்தின்
வெளிச்சம்...

எங்கள் கொடியை
உயர்த்தவே
'குமரன்' கள் நாங்கள்
கொலையுண்டோம்...

மாற்றானுடையதை
மிதிக்க அல்ல
மறுக்கவே
ஆசைப்பட்டோம்...

இறக்கப் படாமல் இறங்கிய
கொடியின்
இடத்தை பற்றியது
ஏற்றாத போதும்
எங்கள் உள்ளத்தின்
உச்சியில் பறந்த
எம் கொடி

இன்னா செய்தார்க்கு
நாண
நன்னயம் செய்யும்
நோக்கு அது...

பெற்ற பிள்ளைக்கு
பால் என்ன
பழஞ்சோறும்
புகட்டாதாள் எம்
பாரதத்தாய்...

என்றாலும்
பிச்சை வாழ்க்கை
அச்ச உணர்வை
ஊடட்வில்லை எங்கள்
உதிரத்தில்...

அத்து விட்டது
விலங்கு - ஆக
பெற்றுவிட்டோம்
புதுவாழ்வு...

கட்டிவிட்டோம்
மனக்கோவில்...

அங்கே....

ஜாதி பேய்களை
கொண்று
மத பேதங்கள்ற்ற
ஓர்வாயில்...

காமங்கள் குரோதங்கள்
விட்டு
கடன் தொல்லை
அழித்ததோர் வாயில்...

பட்டப் பகலில்
கொள்ளை மற்றும்
பட்டினிச் சாவுமிங்கில்லை
என
பறைச்சாற்றி
நிக்குதோர் வாயில்...

திறந்து கிடக்குதோர்
வாயிலாங்கே
திறமையுள்ளோர்
எல்லோர்க்கும்
வேலை...

நட்ட நடுவினில்
எம் நாடு
பச்சை பசுமை
போர்த்த பூங்காடு...

பூக்களின் நடுவினில்
புதுநங்கை நல்லாள்
பட்டத்துன்பங்கள்
மறந்துவிட்டாள்
பந்தைபிடித்தே
ஆடுகின்றாள்
பாடுகின்றாள் எங்கள்
பாரதத்தாய்...