Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன்.

பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் கனன்று.

[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.]

இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை.

பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும்.

காதல்:
//காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..//
எவ்வளவு அழகான வரிகள்.
உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது.
காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும்.
காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும்.
காதல்
அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சிப்
பறக்கச் செய்யும்..
தாழ்ந்த விழி
தரைநோக்க
தனித்தியங்க்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்..

பூவிதழ்
புன்னகை வீச
புகம்பம் வெடிக்கும்
இதயத்தில்

இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்

மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்
கட்டில் தாண்டியும்
கரம் சேரும்..

காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்.

கடவுள்:
கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..

ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள்.
நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே.

அழகு:
இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு.

தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே.

அடுத்ததாக திரு. திகழ்மிளிர்.
இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.

அன்புடன் உமா


கடவுள்

காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில்
காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில்
வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப்
பற்றியே பாடுமென் நெஞ்சு.

[ என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது ஒர் உணர்வு. அன்பு, நேர்மை,காதல் போல் கடவுளும் ஒர் உணர்வு.அதை காட்ட இயலாது. தனித்தனியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்பவைக்கவே. மனம் விசித்திரமானது. அறிவியல் உண்மைகளை சுலபமாக நம்பாதமனம் சில விடயங்களை சிறிதும் அடிப்படையில்லாமல் நம்பும். மனதின் போக்கிலேயேச்சென்று மனதை கட்டுபடுத்தும் செயலுக்கு உருவவழிபாடு அவசியமாகிறது. மனதில் அன்பையூட்டும் கண்ணணும், கந்தனும், கடிகணபதியும் அனைவரும் ஒருவரே.கண்ணனாய் நினைக்கும் போது அன்பு மேலோங்குகிறது. கந்தனாய் வணங்கையில் நேர்மை நெஞ்சில் நிலைக்கிறது, கணபதியைத் தொழுதால் எண்ணியக் காரியம் முடிக்கும் திரன்வளர்கிறது.]

Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

சினம்

விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.

[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]

Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

மருத்துவரைப் பார்த்திடவே
.........மனைவியோடு சென்றிருந்தேன்..
அருந்தவமே நான்புரிந்து
.........அங்குள்ளே சென்றேனே..
ஏறிட்டு முகம்பார்த்து
..........எழுதியதை கொடுத்துவிட்டார்..
ஏதென்று பார்க்குமுன்னே
..........இருநூறு என்றிட்டார்...
எடுத்ததையும் தந்துவிட்டு
...........எழுந்துவந்து விட்டேனே..
மருந்துசீட்டு தன்னோடு
...........மருந்தகந்தான் சென்றேனே...

சீட்டு'பார்த்து சிரித்துவிட்டு
..........எட்டுநூறு ஆகுமென்றான்..
கட்டுபடி ஆகாதே
.........கண்டபடி செலவுசெய்ய!
சின்னதொரு ஜலதோசம்
..........சீக்கிரமாய் மருந்துகொடு..
பட்டென்று என்மனைவி
...........பாய்ந்தங்கே கேட்டிடவே..
சட்டென்று சிலமருந்து
..........எடுத்தவனும் நீட்டிவிட்டான்..
சில்லறையாய் மூனுரூபாய்
............தந்தவளும் வந்துவிட்டாள்...

சோறுதண்ணி இல்லாம
.........சோர்ந்திருப்பாள் என்றெண்ணி
மாலைவந்து பார்க்கையிலே
..........மலைத்துநின்றேன் நானங்கே..
சோர்ந்தமுகம் ஏதுமில்லை
..........சோதிமுகம் காட்டிநின்றாள்..
முல்லைதனைச் சூடியவள்
...........மல்லிகையாய் சிரித்திருந்தாள்
எப்படியோ போகட்டும்
...........இருநூறு வீணாச்சே
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா
...........அய்யய்யோ வீணாச்சே!!!

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.

படத்திற்கான வெண்பா.


மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு
வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
மரமும் நிழலை மறந்து.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]

Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

கண்ணன் குழலில் ஓர்துளையாய்
..........நானும் ஆக மாட்டேனோ!
மன்னன் அவனிதழ் பட்டூதும்
..........பாஞ்ச சன்னியம் ஆகேனோ!
காலம் சுற்றும் சக்கரமாய்
..........கையில் கிடக்க அருள்வானோ!
ஞாலம் போற்றும் அவனுரையில்
..........நானும் ஒருசொல் ஆகேனோ!

கத்தும் கடலும் காரிருளும்
..........கண்ணன் அழகை காட்டிடுமே
முத்தும், மணியும் அவன்மேனி
..........பட்டு ஒளிரும் நானதுபோல்
நித்தம் கலந்து மெய்ஞானம்
..........பெற்றே சிறக்க வழியுண்டோ!
சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".

Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்;
தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா
இருமல் சளியென்(று) இவையும் இருந்தால்
மருத்துவ ரைப்பார் விரைந்து.

தொட்டால் பரவுமிது என்பத னால்சற்றே
டெட்டாலிட்(டு) உங்கைக் கழுவு

உன்னால் பரவுதல் வேண்டாயிந் நோய்யிங்கு
என்றால், முகத்தை முகமூடி தன்னால்
கவனமாய் மூடி மருத்து வரைப்பார்
அவரையுங் கொல்லாதே சேர்த்து.

பயந்தால் போகுமோ? பீதி பரப்பும்;
தயவோடு செய்வீர் இதைத்தடுக்க - நோயால்
பாதிக்கப் பட்டிருந்தால் சேராதீர் யாருடனும்
சோதித் தறிவீர் உடன்.


[பயத்தால் பீதியடைந்து மருத்துவமனைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வோமானால் அங்கு ஒருவருக்கிருந்தாலும் எல்லோருக்கும் உடனே பரவும். நோயைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எனவே முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் நோய் இருக்கலாம் என் உங்கள் மருத்துவர் சந்தேகித்து பரிந்துரைத்தால் மட்டும் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.பக்க விளைவுகள் மிக அதிகமாய் இருக்கும்.]

சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால்
அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும்
சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே
கண்ணுங் கருத்துமாய் கா.



Sunday, August 09, 2009

நட்பு

இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில்
துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும்
கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை
இடித்தும் உரைப்பதே நட்பு.

விளக்கம்: வாழ்வின் இனிமைகள் மேலும் மேலும் வளரும் வண்ணம் நட்புடன் கூடி, துன்பத்தை பகிர்வதன் மூலம் அதனை இல்லாததாக்கி , நம் வாழ்வில் என்றும் விரைந்து நம்மை ஆட்கொளளக்கூடியதான சோர்வு நம்மை அடையாவகையில் இருளைநீக்கும் சுடராய் நம் சோர்வை நீக்கி, தவறு செய்யும் போது கண்டித்துக்கூறியும் நம்மை நல்வழிபடுத்துவதே சிறந்த நட்பு.

தன்நலஞ் சற்றே தவிர்.

விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின்
கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில்
என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே
தன்நலஞ் சற்றே தவிர்.

விளக்கம்: வானம் போல் உயர்ந்தவற்றை பார்க்கும் கண்மணிகள் தங்களை தானே பார்ப்பதில்லை. அவ்வாறே மனிதனும் பிறர் நலம் காணவேண்டுமேத் தவிர தன்நலம் காணுதல் தவறு.

இன்பமும் துன்பமும்

காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே
மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில்
என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும்
இன்பமுந் துன்பமு மே.

[பாரசீக கவிஞர். உமர்கய்யாம் பாடல்களை படித்ததின் தாக்கம்]
விளக்கம்: காலையில் மலரும் மலர்கள் மாலையானல் உதிர்ந்து வாடிவிடும்,ஆனாலும் காலையி்ல் மீண்டும் மலர்கள் மலரும். அதுபோல் மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறியே தோன்றும். எதுவும் நிலையானதல்ல என்பதால் இன்பத்தில் இறுமாப்படைவதும் துயரில் துவண்டுவிடுதலும் கூடாது. சமமாக பாவித்தால் நிம்மதி இருக்கும்.

Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை;
பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்
வாட்டமுற செல்லும் பிரிந்து.

[திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களின் ஏகப்பட்ட திருத்தல்களுடன்.]

Friday, August 07, 2009

காதல்

இன்னிசை வெண்பாவில்

என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

Wednesday, August 05, 2009

கோமணம்.

கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது.

அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
மணமுண் டறிவாய் மதி.

ஐம்புலங்களால் நாமுணர்வதெல்லாம் உண்மையானதலல,ரமணர் காட்டும் உண்மை பொருளுக்கே உண்மையான மணமுண்டு.

திரு.அவனடிமையார் இன்னும் அழகாக விளக்கமளித்துள்ளார். அவர் சொல்லிலேயே,' சடலத்துக்கு இல்லாத மணத்தை,உறங்கும் போது உயிர்த்திருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை,விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'


இன்னல் அகலும் இனி

தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.

பாவும் தமிழுமினி பாழ்

நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ
பாவும் தமிழுமினி பாழ்.

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.

குறள் வடிவில்

நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.

பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.