Saturday, October 27, 2018
Sunday, August 19, 2018
Saturday, August 18, 2018
Sunday, August 12, 2018
வாழ்த்து
புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் பூத்த பூக்களைப்போல்
மலரும் நாட்கள் மகிழ்வோடு
வாசம் பரப்பும் மனத்தோடு..
அலையும் கடலின் ஆழத்தில்
அமைதி தங்கி இருப்பதுபோல்
நிலையாய் தமிழும் இனிமைகளும்
நெஞ்சில் நிறைந்து நலம்வாழ்க!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
உமா...
அன்பு மகனுக்கு..
சிட்டுக் குருவியுன்
பட்டுச் சிறகை
விரித்தே பறக்க
வானம் நாங்கள்…
புத்தம் புதிய
பூவாய் நீ
வாசம் பரப்பும்
காற்றாய் நாங்கள்…
வண்ணக் கலவை
ஓவியம் நீ
வரைந்து மகிழ்ந்த
ஓவியன் நாங்கள்…
சிதறும் கல்லில்
சிற்பம் நீ
செதுக்கித் தந்த
சிற்றுளி நாங்கள்…
வண்ணத் தமிழின்
விளக்கம் நீ
விரித்தே எழுத
வார்த்தை நாங்கள்…
எந்தன் கவிதைப்
பொருளும் நீ
எழுத தோன்றும்
இன்பம் நீ…
எங்கள் வாழ்வின்
இயக்கம் நீ
எம்மைப் படைத்த
இறைவன் நீ…
என்றும் வாழ்வில்
தமிழ் போலே
உயர்வே உயர்வே
உயர்வே காண்….
இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அம்மா, அப்பா...
Sunday, July 15, 2018
சங்க இலக்கியம் சுவைப்போம் - பதிற்றுப் பத்து
post.htmlhttps://sangailakkiyamsuvaippom.blogspot.com/2018/07/blog-post.html
Monday, June 18, 2018
Monday, May 07, 2018
சங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்
சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளும் சிறு முயற்சி.... எனது இன்னொரு தளத்தில்..
Saturday, December 30, 2017
புத்தாண்டே வருக...
வாடையில் போர்வையும
வேருக்கு நீரையும்- மக்கள்
வியர்வைக்கு பலனையும்
இன்பத்தில் நிறைவையும்- வாட்டும்
துன்பத்தில் துணிவையும்
இளமைக்கு அறிவையும்- துவண்ட
முதுமைக்கு துணையையும்
உண்மைக்கு வழியையும்- கெட்ட
பொய்மைக்கு இருளையும்
ஆணுக்கு பெருமையும்- நிகர்
பெண்ணுக்கு உயர்வையும்
தோளுக்கு வலிமையும்- நேர்மை
வாளுக்கு வெற்றியும்
அன்பையும் வழங்க வா புத்தாண்டே
அமைதியை நிரைத்து வா...
மலர்க புத்தாண்டே...
நெஞ்சுரம் கூட்டி
அல்லவை எதிர்க்கும்
ஆற்றலும் தந்து
நானிலம் வாழ
இல்லார், கல்லார்
இல்லா ராக
எதிலும் இல்லா
மாற்றமும் தந்தே
மலர்க புத்தாண்டே...
Wednesday, October 18, 2017
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இன்றைக்கும் என்றைக்கும்
இல்லத்திலும் உள்ளத்திலும்
உற்சாகம் கரைபுரள
இன்பங்கள் நிறைந்திருக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
உமா
Monday, August 14, 2017
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
கருத்தில் தெளிவாய்
நெஞ்சில் நிறைவாய் விளங்கிடுவான் - கண்ணண்
எண்ணம் உயர்ந்தால்
இன்சொல் இணைந்தால்
இல்லில் மகிழ்வாய் மலர்ந்திடுவான்...
Wednesday, July 26, 2017
நதி பின்னால் திரும்பாது
'நேற்று' என்பது
விதையாக...
'நாளை' பூக்கள்
மலர்ந்திடவே...
இன்றையப் பொழுதை
உரமாக்கு...
கண்ணை மூடும்
கண நேரம்
கடந்த காலம்
என்றாகும்...
இன்று இக்கணத்தை..
இனிதாக்கு...
இனிவருங்காலம்
உயர்வாகும்...
சொல்லும் சொல்லை
சீராக்கு
சோர்வை உந்தன்
பகையாக்கு...
துஞ்சியக் காலம்
துயராகும்..
விழித்திடு
இந்நொடி உனதாகும்...
விழுந்தது
முளைக்கும்
விதையானால்....
வெடித்தது
மலரும்
அரும்பானால்...
அடங்கியது
எழுந்திடும்
அலையானால்....
அறிவாய்....
கடந்தது
காலம்
என்றானால்.....
வாழ்க்கை
நதி பின்
திரும்பிடுமோ......
Thursday, March 16, 2017
உலக மகளிர் தினம்
இமாலய வெற்றிகளுக்கு
அடித்தளமாய் அமைந்தது
அன்றையப் போராட்டம்...
பதினெட்டாம் நூற்றாண்டில்
புரட்சி பேசிய
புதுமைப் பெண்களின்
எழுச்சிப் போராட்டம்....
அன்று...
தொழிற் புரட்சி
துவங்கிய நாட்களில்
தோள் கொடுக்கத்
தேவைப்பட்டனர்
பெண்கள்.....
வேலை வாய்ப்பு
முதன் முதலாய்
வெளிச்சம் காட்டியது
அவர்கள் வாழ்வில்...
உழைப்பு ஒன்றானாலும்
ஊதியம் சமமில்லை...
பேச்சுரிமை இல்லை...
வாக்குரிமை இல்லை...
முன்னேறும்
வாய்ப்புகள் இல்லை...
இன்னும்
எத்தனையோ இல்லைகள்
இருந்துக் கொண்டே இருந்தன...
பதினெட்டாம் நூற்றாண்டில்
பற்றிய பொறி
இருபதாம் நூற்றாண்டில் தான்
வெடித்துச் சிதறியது...
உலக பெண்கள்
ஒற்றுமைக் காட்டினர்...
மார்ச் எட்டு
மகளிர் தினமானது....
சமுதாய வளர்ச்சியில்
சமபங்கு வகித்த
உழைக்கும் பெண்களின்
உரிமைப் போராட்டம்
வெடித்த தினம்
மகளிர் தினம்...
இது
கொண்டாட்ட தினமல்ல
உரிமைக்கான
உயர்வுக்கான
போராட்டதினம்...
இன்றோ..
ஊடகங்கள் வழியாக
உள்ளங்கைகளில்
குறுஞ்செய்தியாய்
வாழ்த்துக்கள்....
வியாபார சந்தையில்..
விற்பனைத் தந்திரமாய்
மார்ச் எட்டு...
ஆயிரம் செலவழித்தால்
ஐம்பது தள்ளுபடி...
பெண்கள் பயன் படுத்தும்
மேக்கப் சாதனங்களுக்கு...
பெண்களோடு வந்து
கூல்டிரிங்க்ஸ் குடித்தாலும்
விலைக்குறைப்பு
சலுகைகள்...
வெட்கக் கேடு...
இதுவா இலக்கு...
பெண்கள் வேண்டுவது
சுதந்திரம்..
சமத்துவம்..
பாதுகாப்பு...
நூறாண்டுகள் கழிந்து
இன்றும்
எட்டாக் கனியாய்
இந்த இலக்குகள்....
வாய்ப்புக் கிடைத்தால்
வானையும் வெல்லும்
வலிமைக் கொண்ட
பெண்களுக்கு...
வாழ்த்து மடல் வேண்டாம்...
வெளிச்சம் காட்டும்
விளக்குகளாய் ஒளிருங்கள்...
சுமைத்தாங்கியாய்....
வேண்டாம்
தடைக்கற்களாய் இல்லாமலேனும்
சற்றுத் தள்ளி நில்லுங்கள்...
பெண்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாகும் போது..
ஆண் அங்கே
அசிங்கப்பட்டுப் போகிறான்....
ஒவ்வொரு சமுதாயத்தின்
வளர்ச்சியிலும்
ஆணுக்கு நிகராய்ப்
பெண்களும்
அப்பெண்களுக்கு
அரணாய் ஆண்களும்
அமையும்
அற்புத நாட்களை நோக்கியே..
ஊர்ந்துச் செல்லும்
உலக மகளிர் தினம்...
ஒவ்வொரு வருடமும்..
போராட்டங்கள்
உண்மையான
கொண்டாட்டங்களாய்
மாறும் நாட்கள்
நம் ஒவ்வொருவர்
கையிலும் உள்ளது...
ஒன்று படுவோம்..
உழைப்போம்...
உயர்வோம்.....
Monday, February 27, 2017
அருட்சோதி வள்ளலார்
உணர்ந்தவர்
அடிகள் அவர்கள்
ஆற்றிய தொண்டுக்கள்
அளப்பரியவை..
நானிலம் அறிய
அறமென உணர்ந்ததை
ஆறாயிரம்
தீந்தமிழ் பாக்களில்
தெவிட்டா தேனாம்
‘திருவருட்பா’ தந்தவர்
பைந்தமிழ் பிள்ளைகள்
என்றறிவித்த
மொழியியலாளர்...
விளங்கும் உண்மைப் பொருளை
உலகத்தோர் உணர்ந்துய்ய
ஞான வழி காட்டிய
ஞானாசிரியர்.....
பதிப்பாசிரியர்...
சித்த மருத்துவர்...
வாழ்ந்து காட்டிய
வடலூர் வள்ளலார்
வழங்கிய நன்னெறி
'ஜீவ காரூண்ய ஒழுக்கம்'
உயிர்களெல்லாம் உறவெனக் கண்ட
உத்தமர் வழியை
உள்ளத்திலிருத்துவோம்
அன்பை விதைத்து
அறம் வளர்ப்போம்
வளர்க அன்பு நெறி...
Friday, December 16, 2016
சென்னையில் மார்கழி
காரிருள் போர்வைக் கலையா திருக்கும்
மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது
கூர்வேல் விழியார் கூடி வரைந்த
வண்ணக் கோலம் வாசல் மறைக்கும்
எண்ணம் சிறக்க இருகரம் கூப்பி
அலையா மனதொடு கடுங்குளிர்த் தாங்கி
நிலைப்பே ரின்பம் நெஞ்சில் நிறுத்தி
கலையாம் இசையால் கண்ணனைப் பாடி
வெறுங்கா லோடு வீதியுலா வந்திடும்
திருமால் அடியார் திருத்தாள் தன்னை
பணிந்தே வணங்கிடும் பண்புடை பெண்கள்
அணிந்திடு பட்டும் பொன்னின் நகையும்
அவர்தம் சிறப்பை அழகாய்ச் சொல்லும்
கோவில் பக்கம் சிறுவர் தம்மை
பொங்கல் மணமே பெரிதாய் ஈர்க்கும்
பாட்டும் பரதமும் பக்தியோ டிணைந்து
பரவச மூட்டும் பாட்டுக்கச் சேரியில்
இப்படித்தான் இருந்தது எங்களூர் சென்னை
அன்றையப் பொழுதில் அணைத்தும் அருமையாய்
இன்றிவைக் குறைந்து இதயம் இருளாக
நல்லவைத் தேய்ந்து நலமிழந் தோமே!
சென்னையில் இன்று
கோலம் போட
வாசலின்றி
உயர்ந்தே நிற்கும்
அடுக்கு மாடி வீடுகள்
தூ' வென்று துப்பும் எச்சில்
தெருவெல்லாம் குப்பை தூசு
காலைக் கழிவு
கெட்டவார்த்தையோடு
எங்கும் பிச்சைக்காரகள்
பணத்தாசையால்
வாசனையூட்டப்பட்ட
வெற்றுப்பூ
வியாபாரம்
காசுக்காய்
கடவுளின் தாரிசனம்
ச்சி சீ
இதுதான்
இன்றயச் சென்னை..
மூக்கைத் துளைக்கும்
'மெனு' ஒன்றிருந்தால் தான்
பாட்டுக் கச்சேரிக்கும்
கூட்டம் வரும்..
பாட்டை விட்டு
பட்டை எடை போடும்
'இரசிக பெருமக்கள்'
இடையே
குத்தாட்டப் பாட்டோடு
கூப்பிடும் தொலைப்பேசி
சத்தமாய் பேசும்
சலவையுடை யணிந்த
பகட்டு மனிதர்கள்
விற்பவர், நுகர்வோர் என
விலைப் பொருளாகிவிட்ட
இசைக் கலை..
இசையை இரசிக்கும்
இரசிகர்கள் போய்
இரசிகருக்காய்
இசையை வளைக்கும்
விதமாய் விட்டது
வெற்றியின் இரகசியம்..
இன்றும் இருக்கத்தான் செய்கிறது
இன்னனிசையும்
இனிமையும்
நேர்மையும் ஒழுக்கமும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
அல்லவைத் தேய்ந்து அறம் பெருக
நல்லவை நாடி
இறைவனை வேண்டியபடி
'வாழ்க! சென்னை.
Tuesday, November 15, 2016
வாழ்த்து
Sunday, July 31, 2016
உழைப்பு
என்றே கூவி
பழைய பேப்பர் வாங்கிடுவார் - மறு
சுழற்சிக் காக
கொடுத்தே இந்த
பூமி காக்க உதவிடுவார் - நாம்
செய்யும் தொழிலில்
சிறுமை இல்லை
நன்மை பெரிதாய் இருக்கையிலே-சிறு
குடிசைத் தொழிலும்
உயர்த்தும் உன்னை
உழைக்கும எண்ணம் வலுக்கையிலே...
Thursday, July 21, 2016
நண்பனென வந்தவனால் தாக்கப் பட்டாள்
பல்லுதிர பலரெதிரே வெட்டிக் கொல்ல
பயந்ததனால் எவரெதையும் செய்யா நின்றார்
சில்லிட்டு, நெஞ்சடைத்து, சின்னப் பெண்ணின்
சாவதனைக் கண்டொருவர் மாய்ந்தே போனார்
பல்வேறு காரணங்கள் புனைந்துக் கூறி
பத்திரிக்கை பிரபலங்கள் பாய்ந்தே வந்தார்
புரியாத புதிராகும் நடந்த உண்மை
பொல்லாத காலமதை புறத்தே தள்ளும்
அறியாத பருவத்தில் வலையில் சிக்கி
அறிவற்ற செய்வோரை அதிகம் கண்டோம்
சரியென்றும் தவறென்றும் தெளிய நல்லத்
தருணமிது தவறான பாதைத் தள்ளி
அறிவாலே ஆய்ந்தறிந்து கொள்வோம் உண்மை
அன்பினையும் நட்பினையும் காப்போம் போற்றி
முகநூலின் முழுவிவரம் உண்மை இல்லை
உணராமல் உறவாட வருமே தொல்லை
நகரத்து வாழ்வினிலே நட்பு ணர்வு
நாடகமாய் ஆனதிலே அழிவே எல்லை
முகங்காட்டும் கண்ணாடி உளமா காட்டும்
உண்மையதை ஊடகமா எடுத்து ரைக்கும்
பகலவனால் இருள்மறையும் காட்சித் தோன்றும்
பகுத்தறிவே சரியானப் பாதைக் காட்டும்...
Friday, April 29, 2016
வாழ்த்து
இனிய சொல்லால்,செயற்திறத்தால்
எங்கள் நெஞ்சில் நிறைந்திட்டீர்
எளிதில் அனுகும் இயல்பால் நீர்
ஏற்றம் கொண்டீர், நன்மனத்தால்
பணியில் பெற்ற நல்லறிவை
பகிர்ந்தீர் நாங்கள் பயனுறவே...
அணியால் சிறப்பு செய்யுளுக்கே...
அதுபோல் நீவீர் இப்பணிக்கே...
பணியும் பெருமை என்றாற்போல்
பண்பால் உயர்ந்தீர் உம்வாழ்வில்
கனியில் சுவைப்போல், செந்தமிழில்
குறளின் நலன்போல் என்றென்றும்
குறையா செல்வம்,அன்போடு
கூடும் சுற்றம், மனநிறைவு
நிலையாய் பெற்று நலம்வாழ
நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்....
Tuesday, December 29, 2015
Saturday, November 21, 2015
மாமழைப் போற்றுதும்
என்று
தாகத்தால் தவித்த
தமிழகத்தில்
இன்று
தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்...
மீண்டும் தவிக்கும்
மக்கள், மாக்கள்
மரங்களை வெட்டி
மாரியின்
கதவடைத்தப்பின்
கழுதைக்குக்
கல்யாணம் செய்கின்றார்
மழை வர...
வெட்கம்....
முகவரி தொலைத்து
திரிந்திருந்த
மாமழை
முகம் காட்டியப் போது
தண்ணீர்... தண்ணீர்...
எங்கும்
தண்ணீர்....
ஏரி குளமெல்லாம்
எட்டடுக்கு
கட்டிடமானதால்
விருந்தாக வந்த
மழைதானே...
வீட்டுக்குள்
வந்துவிட்டது...
.....
2.
வீட்டுக்குள் வந்த மழை
விக்கித்து நின்றதங்கே...
என்வீடு என்றிருந்தேன்
ஏனிவர்கள் தடுக்கின்றார்....
ஆறு குளந்தானிருக்கும்
ஆடிப்பாடி ஓடிடலாம்...
கரையோரங் கையாட்டும்
கிளையோடு பேசிடலாம்.....
கழனியெல்லம் நிறைத்து
மக்கள்
கவலையெல்லாங் கரைத்து
நானும்
கடலோடு கலந்திடலாம்...
கருத்தாக வந்துநின்றேன்...
காட்டாறு ஓடும் வழி
காரோட்டி சென்றதென்ன...
கட்டிடக் காடாக
கண்டபடிக் கட்டிவிட்டு
குட்டிக்கடலென்று
குறையென்னைச் சொல்வதென்ன...
என்பாதை எதுவென்று
நான் மறந்தேன்....
கூறிடுவீர்....
சற்று
நேர்ப் பாதை நீர் நடந்தால்
நீராகி நிறைவளிப்பேன்......
யார் பாதை எதுவென்று
இன்றேனும் சிந்திப்பீர்....
Tuesday, September 29, 2015
இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்
கண்ணில் தூக்கம் இழந்தீரே...
பேசும் பழக்கம் குறைந்தே'கை'
பேசி தன்னில் குறுஞ்செய்தி
பாசம் சொல்லப் பகிர்ந்தீரே
பெற்றோர் மனத்தை மறந்தீரே
வாசப் பூவின் நுகர்வின்றி
வண்ணப் படத்தில் மகிழ்ந்திடவோ...
உண்ணும் உணவில் முறைத்தவறி
உறக்கம் கெட்டு உழைக்கின்றீர்
எண்ணிப் பார்ப்பீர் எதிர்காலம்
இருண்டே இருக்குத் தெளிவில்லை
கொண்டக் கொள்கை உயர்ந்திடுதல்
குற்றம் இல்லை உம்மனத்தில்
அன்னி யமோகம் அகன்றிட்டால்
அடையும் இன்பம் அழகாகும்
மண்ணை முட்டி வெளிவந்தே
விண்ணைத் தொட்டே வளர்ந்திடுமே
சின்ன விதையின் சிறப்பதனைச்
சிந்தை தன்னில் கொண்டீரே
தன்ன லமின்றி அத்திறத்தால்
தாய்நா டுயர முயன்றிட்டால்
திண்ணம் அறிவீர் அந்நாளில்
மா மா காய்
மா மா காய்
என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
Monday, September 28, 2015
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா
மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பங்குபெறும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Friday, September 25, 2015
நாற்பத்தாறு வயதினிலே
வளர்ச்சியின் உச்சம்
வீழ்ச்சியின் ஆரம்பம்
விதைத்தவை எவையோ
முளைத்திடும் அவையே
Tuesday, May 12, 2015
அம்மா
நினைவுக் கரங்களால் மட்டுமே
நேற்றையப் பொழுதுகளின்
நிஜங்களிலும்...
மூடிய கண்களால் மட்டுமே
காண முடிந்த
கனவுத் திரைகளின்
நிழல்களிலும்...
உப்பின் சுவையிலும்
உணர்வின்
நீர்த் துளியிலும்...
வலியிலும்
வலி மறந்த
இதங்களிலும்...
ஆரவாரங்களினூடேயான
என் ஆத்ம
எப்போதும்
உயிர்த்திருக்கிறாள்
என்
அம்மா...
Friday, February 20, 2015
என்னருங் காதலே - தமிழே
மனத்தின்கண் சிலிர்ப்பூட்டும் எண்ணத் தாலே
குழல்மேவும் காற்றோடு கொள்ளை இன்பம்
கூட்டாகி வருமிசைப்போல் எந்தன் நெஞ்சில்
அழகான தமிழேயுன் சொல்லைக் கொண்டேன்
அழைக்கின்றேன் கலந்திடவே வருவாய் நன்றாம்
கவிதையென துள்ளத்துள் உயிர்த்தே நல்ல
கூட்டமுதம் செந்தமிழே தருவாய் நித்தம்
பண்ணோடு நானெழுதும் பாட்டில் மேவி
பைந்தமிழே பேரின்பம் தந்தாய் நாளும்
என்னோடு நீசேர்ந்து எழிலாய் நற்பா
என்னுள்ளே உதித்திடவே செய்தாய் என்றும்
விண்மேவும் மேகங்கள் மழையைத் தூவ
மண்மீது உயிர்ப்பூக்கள் மலரும் மாப்போல்
பண்பட்ட கருத்துக்கள் உன்னுள் கொண்டே
பாட்டினிலே உயிர்சக்தி தந்தாய் வாழி!
காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலம்
Monday, February 09, 2015
வாழ்த்துக்கள்
சகோதரி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்
அன்றுனது
கரம்பிடித்து
அலைந்திருந்த நாட்கள்
என்றும் பசுமையாய்
என் கண்ணுக்குள்...
உனக்கு
வயிற்று வலி
என்றால்
எனக்கும்
பள்ளிக்கூட
வழி மறந்துப் போகுமே
அந்த இளமைக்கால
நினைவுகளின்
இன்றும் நான்
இனிமையாய்
மூழ்கிப் போகிறேன்...
சின்னச் சின்னக்
குட்டு வைத்து
பள்ளிக் கணக்கோடு
வாழ்க்கை கணக்கையும்
வகுத்துக் கொடுத்தாயே
அந்த அன்பில்
ஆழ்ந்துப் போகிறேன்...
நான்
மலர்ந்த நாளும்
நீ
பிறந்த நாளும்
ஒன்றாய்
காரணம்
என் இனிமைகளெல்லாம்
உன்னோடு
தொடர்புடையவைதானே?
என் வாழ்க்கைப் பாதையில்
அன்று முதல்
இன்றும்
என்றும்
உன் காலடி சுவடுகளே
என்
கலங்கரை விளக்கங்களாய்...
உடன் பிறந்த எங்களின்
முன்னேற்றத்தில்
உன் வெற்றி
முற்றானதாய்
மகிழ்ந்த
உன் அன்பை
உணர்ந்தபடி
என்றும்
உழைத்தபடி
நாங்கள்..
நாட்கள்
நகரலாம்
நரைக்கூடி
நெகிழலாம்..
என்றும்
உன்
நட்பில்
நனைந்தபடி
நாங்கள்...
வாழ்த்துக்கள்
இனியத் தோழி
வாழ்த்துக்கள்
இன்றுனது பிறந்த நாள்
இதயங்கனிந்த
வாழ்த்துக்கள்....
அன்புடன்
உமா
Friday, January 30, 2015
பொங்கலோ பொங்கல்
கிளாஸ் ஸ்டாப்
அடுப்பு துடைத்து
கிரானைட்டில்
கோலமிட்டு
குக்கரில்
பொங்க வைத்து
டிவிட்டரில்
வாழ்த்துச் சொல்லி
பேஸ் புக்கில்
ஷேர் செய்து
பெர்முடாஸ்
டீஷர்ட் டோடு
பைக்கெடுத்து
ஊர் சுற்ற
பொங்கலோ பொங்கல்
ஆயிற்று பொங்கல்
அத்தனைக்கும்
மாற்றுண்டு
ஆனால்
அம்மா உன்
அன்புக்கு
மாற்றேது???
நீயில்லாமல்
வெறுமையாய்!!!!
பொங்கல்...
எப்படி போனாலென்ன!
Tuesday, January 13, 2015
புத்தகச் சந்தைக்குப் போ
எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில்
தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,
புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே
புத்தகச் சந்தைக்குப் போ
---------------------------------------------------------------------------------------
சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே
முத்தான தாக முயன்று படித்தறிந்து
மொத்தமாக வாங்கிடலாம், சொத்தாகும் சிந்தனைக்கு
புத்தகச் சந்தைக்குப் போ
Wednesday, December 31, 2014
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உழைப்பை விதையாக்கி
உண்மை உரமாக
நல்லெண்ண நீரூற்றி
காத்திருந்தால்
கனிந்துவரும்
பூ மணக்கும்
புத்தாண்டு
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வணக்கங்கள்
2015
நட்புடன்
உமா
Sunday, December 21, 2014
வாழ்த்து
இணைந்தார் நிஷாவும் ஸ்ரீகாந்தும்
நல்லதோர் வீணையும் விரல்போலும்
நற்றமிழ் சொல்லின் சுவைப்போலும்
மல்லிகை மலரின் மணம்போலும்
மனதும் மனதும் இணைந்தென்றும்
நல்லறங் காப்பீர்! நலம்பெறுவீர்!
நட்புடன் என்றும் வாழ்வீரே!
Saturday, December 13, 2014
மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வு
மகாகவி பாரதியின் பிறந்த நாளில் திருவல்லிக்கேணி இல்லத்தில் துறைமுக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது திரு சிவகுமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது
அழகான அனுபவம், நல்ல மனிதர்.
மகா பாரதம் எழுதி கொண்டிருப்பதாய் சொன்னார்
http://epaper.dinamani.com/394451/Dinamani-Chennai/13122014#page/4/2
Thursday, September 11, 2014
பார தீ
பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!
உன்
பார்வையின் பொறியில்
இன்றும்
பற்றிக்கொள்ளும்
எங்கள் இதயங்கள்
உன்
சொற்களின் சூட்டில்
என்றும்
அடைகாக்கப்படும்
எங்கள் தன்மானம்
உன்
வார்த்தை வாளால்
இன்னும்
வெட்டப்பட வேண்டிய
விலங்குகள் ஏராளம்
என்றாலும்
உன்
கவிதையின் கனலை
கருத்தில் இருத்திய
அக்னி குஞ்சுகளும்
அதிகம் தான்
பாரதி
உன் கவிதைகளுக்கு
எங்கள் நன்றி
உன்
காதல் கவிதைக்கு
எங்கள்
கண்ணம்மாக்களும்
குளிர்ந்துதான் போகிறார்கள்
உன்
சுவாசக் காற்றின்
எச்சம் கொண்டு
சுதந்திரம் சுவாசித்த
எங்கள் இளைஞர்கள்
அந்நிய சந்தையில்
அழிந்திடாதிருக்கவும்
அச்சம் தவிர்த்து
ஆண்மைக் கொள்ளவும்
அவர் நெஞ்சில்
மீண்டும் மீண்டும்
உன்
வார்த்தைகளே
விதையாக்கப்படும்
விழுந்தும் முளைக்கும்
வீரம் கொள்ள
உன்
பாட்டின் வரிகள்
பாதைக்காட்டும்
உன்
பாட்டுக்கு
எங்கள் நன்றி
செத்துக் கிடந்த
எங்கள் செல்களில்
உயிரோட்டம் ஊட்டிய
உன்
சிந்தனைக்கு
எங்கள் நன்றி
பாரதி
உன்
நினைவுகளுக்கு
எங்கள் நன்றி!
Saturday, June 28, 2014
கலி மண்டிலம்
திரிவே ணியிலே திகழ்கா விரியே
வருமே யகண்டே தமிழ்நா டதிலே
பெருந்'தை' விளைந்தே பெருக்கம் தருமே!
2.நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
3.சீரமைப்பு – மா + புளிமா + புளிமா + புளிமா
4.ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை அமைதல் சிறப்பு.
5. ஒவ்வொரு சீரும் இறுதி அசை நெடிலாதல் வேண்டும். அல்லது குறிலொற்றெடுத்தும் வரலாம்.
கலிமண்டிலம்
அதற்குளே அறையினுள் அலைந்தன பொருட்கள்
இதையதும் அதையிதும் இழுத்தன திறந்த
கதவினால் சிரிப்பலை கரைந்ததே உடனே!
[toy story மாதிரி நாமில்லா நேரம் நம் வீட்டிலுள்ள பொருட்கள் உணர்வுற்றால்? முகுந்த் நாகராஜன் புதுக்கவிதையில் இது போல் எழுதியிருப்பார். நானும் இப்படி சிந்தித்ததுண்டு என்பதால் மரபுப் பாவில்.]
2. சீர்கள் முறையே = கருவிளம் + கருவிளம் + கருவிளம் + புளிமா
3. ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனை
4. கருவிளத்திற்குப் பதில் கூவிளமும் அருகி வருவதுண்டு. புளிமாவுக்குப் பதில் தேமாவும் அருகி வருவதுண்டும்.
கலிமண்டிலம்
உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
நலம்பல பெறவே நடந்திடு நாளும்
உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!
2. சீறமைப்பு முறையே = விளம் + மா + விளம் + மா – என்றமைதல் வேண்டும்.
3. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் அருகி வருவதும் உண்டு.
4. பொழிப்பு மோனை சிறப்பு.
மொழியியல் முன்னோடி - கால்டுவெல்
பரப்ப வந்து
தமிழ் மணம்
பரப்பி நின்றவன்
மொழியியல் ஆய்ந்து
முதன்மை யானது
முத்தமிழ் என்றே
முடிவாய்ச் சொன்னவன்
தனித்தியங்க இயலும்
தமிழால் என்று
தரணிக்குக்
காட்டியவன்
திருநெல்வேலியின்
சரித்திரம் படைத்தவன்
செந்தமிழ் தன்னிலோ
சரித்திரம் ஆனவன்
செம்மொழி தமிழின்
சிறப்பை உணர்ந்தவர்
சிந்தையில்
செதுக்குவர்
நம்தமிழ் நலனை
நாட்டுக் குரைத்த
நல்லவன்
பெயரை
தமிழ்
உள்ளவரை
தமிழர்
உள்ளவரை
செந்தமிழ்ச் சொல்லின்
சுவைப்போல்
அவன்புகழ்
வாழ்க! வளர்கவே!!!
சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200 ம் பிறந்த தின நிகழ்வில் முதன் முதலாய் வாசித்தது.
இசைப் பா
நிறையப் புகழ்வார்
நல்லுளம் கொண்ட அவனடியார் அவர்
கொஞ்சும் தமிழில்
குறைதவிர்த் தெழுத
கொடுப்பார் ஊக்கம் இரண்டடியால்
சிதறியப் பூவை
சேர்த்துக் கட்டும்
செயலாம் சொல்லும் அறிவுரைகள் நம்
சிந்தைத் தெளிய
சிறப்பாய் அமைய
செய்யும் உதவி சிறியவையோ
பண்ணில் அழகை
பார்வையில் தெளிவை
பழகச் செய்யும் நெறியினையே அவர்
பரிவாய் உரைப்பார்
புரியும் படியாய்
படைப்போம் சிறந்த பாக்களையே
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
ஈற்றுச்சீர் (7-ஆம் சீர்) இழைபுத்தொடை அமைதல் சிறப்பு.
வஞ்சி மண்டிலம்
சின்னப் பிள்ளை தூங்கிட
அன்னை நெஞ்சம் தானுறும்
இன்பம் கோடி யாகுமே!
அள்ளி வைத்த பிள்ளையும்
துள்ளி ஓடி மானென
பள்ளிச் சொல்லும் போதிலே
உள்ளம் கொள்ளைப் போகுமே!
வாழ்வில் வெற்றி வந்துறும்
போழ்தில் தாயின் பேரிடர்
சூழ்ந்த காலம் தேய்வுற
ஆழ்ந்த இன்பம் தோன்றுமே!
தன்னை ஈந்து அன்புடன்
அன்னைத் தந்த வாழ்விலே
பின்னை பிள்ளைத் தானுமே
அன்பு காட்டல் வேண்டுமே!
Monday, June 16, 2014
Tuesday, June 10, 2014
சுனாமி - கரையை கடந்த கண்ணீர்
கூறுவது கேட்பீர் யானோ
அலையாக கைகள் நீட்டி
அன்போடு காத்தேன் மண்ணில்
மழையாகத் தந்தேன் என்னை
மறந்தாரே மாந்தர் தம்மின்
பிழையான வினையால் அன்றோ
பெருந்துயரம் விளைந்த தன்று...
பொங்காமல் பொறுமைக் கொண்டேன்
புரியாமல் தவறி ழைத்தீர்
மங்காத புகழு டையீர்
மாக்கடலின் நன்மை எல்லாம்
தங்காதே கழிவை கூட்டி
தண்ணீரில் மண்மீ தென்றே
எங்கனமும் எறிந்தீர் மெல்ல
இயற்கையினை இழியச் செய்தீர்
மண்ணெல்லாம் குடைந்தீர் நாளும்
மரமெல்லாம் வெட்டி மாசு
விண்ணெல்லாம் நிறைய வெப்பம்
விரைந்திங்கு உயரச் செய்தீர்
உண்மையைனீர் உணரச் சொல்வேன்
உலகன்னை நெஞ்சம் நோக
கண்ணெண்ணும் கரையைத் தாண்டி
கசிந்ததன்றோ கடலின் நீரும்....
Monday, June 02, 2014
மாமி என்று அன்போடு அழைக்கப்பட்ட திருமதி.சூடாமணி அவர்கள் ஓய்வு பெற்றபோது
என்றும் நிலையாய் நிறைந்திட்டீர்
பணியில் ஓய்வு பெற்றாலும்
பாசம் மிக்க எம்தோழி
குறையா செல்வம், அன்போடு
கூடும் சுற்றம், மனநிறைவு
நிறைவாய் வாழ்வில் நீர்பெறவே
நெஞ்சில் வணங்கி வாழ்த்துகின்றோம்.
Monday, March 03, 2014
Wednesday, February 19, 2014
அச்சம் தவிர்
சுயத்தை அழிக்கும், வருத்தி-அயலவர்
துச்சமென்றே தூற்றிடச் செய்யும், மனத்தினில்
அச்சம் தவிர்ப்பாய் அறிந்து.
ஆறுவது சினம்
Friday, March 29, 2013
அறம் செய விரும்பு
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.
Saturday, February 16, 2013
தமிழ்க் கனவு
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!
Friday, February 01, 2013
என் இரண்டாம் பக்கம்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...
திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...
"நான்'
அறிமுகமானேன்..
நான்
விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.
நான்
சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின
நான்
அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின
நான்
உருவாக்கினேன்
என் சிறிய உலகை
நான்
அழித்தேன்
என் அறியாமையை
நான்
வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்
நான்
பெற்றேன்
அதனால்
இழந்தேன்
இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்
நான்
திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.
இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது
மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!
முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?
முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க
மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்
நான்
என் இரண்டாம் பக்கத்தில்...
Sunday, October 21, 2012
மின்னல், இடி, மழை
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...
நாள்
ஒற்றை வெண்தோணியில்
மேக வலைவிரித்து
பிடித்த
நட்சத்திர மீன்களை
பகற் கைகள்
பறித்துக் கொண்டன...
நட்சத்திரங்கள்
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...
*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...
Tuesday, October 09, 2012
வெற்றி நிச்சயம்
வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!
மன நிறைவே
வெற்றி...
ஆசை
தோல்வியின் முதற்படி
சிலரது வாழ்க்கை
100மீ பந்தயம்
துரிதமாய் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்
சிலருக்கு
தொடர் ஓட்டம்
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்
தலைமுறைத் தாண்டி
அனுபவம் சுமந்து
அடுத்தவர் ஓடும்
அயராத ஓட்டம்..
இலக்கடைவது
நிச்சயம்...
வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....
தடைகள் இடற
தள்ளாடும் ஓட்டம்..
வெற்றி வேண்டுமா?
மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!
இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...
Monday, March 19, 2012
வாழ்த்து
Saturday, September 24, 2011
சமச்சீர் கல்வி 2
சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
படியும் நெஞ்சில் நிலையாக...
விளையாட் டோடு விஞ்ஞானம்
விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
விளையும் நாளை வல்லரசு.
மா மா காய்
மா மா காய்
என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
Monday, September 19, 2011
சமச்சீர் கல்வி
இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
கங்குலாம் இச்'சமச்சீர்' கல்வி!
Thursday, September 08, 2011
இசைப் பா
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!
ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.
ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------
பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
ஒன்றேக் குறியென ஊழல் செய்து
உழைப்பவர் வாடிடவேப் - பொது
பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
பிச்சைக் காரரென - மக்களை
மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
வன்முறைக் காரர்களை - தன்
பொறுப்பை மறந்து , படிக்கும் பெண்களை
புழுவாய் துடித்திடச்செய் - மனங்
கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
காலால் மிதித்திடச்செய்-அவர்
நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
வாய்மை விதைதிடச்செய் - ஓம்
சக்தி சக்தி சக்தி என்றும்
சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
மக்கள் விழித்து வல்லமை யோடு
மாற்றம் கண்டிடச்செய்.
Thursday, January 06, 2011
வலையுலகம்
எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்
மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்
எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]
புத்தகம்
எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]
வெண்டாழிசை 4
பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி
சிங்கமென வெளிவருவாய் சிரித்து.
-------------------
மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்
பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்
விண்பிளந்து வருமோநல் விருந்து.
கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே
பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்
கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.
கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே
நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக
விட்டொழியும் வறுமையது விரைந்து.
1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]
வெண்டாழிசை -3
முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால்
அடைந்திடும் நிலைக்கிலை ஈடு.
பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு
விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய
நசிந்திடா நலம்பெறும் வாழ்வு.
[முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.
Saturday, December 11, 2010
இசைப்பா 2
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
நகர வாழ்வு
நீண்ட தெருக்கள்
..........நெளிந்த பாலம்
..........நிறைய கட்டிடங்கள் -விண்தொட
..........நிற்கும் பட்டிணத்தில்
வேண்டும் எதுவும்
..........விரைந்தே கிடைக்கும்
..........வேகம் வாழ்வோடு - மறந்த
..........விவேகம் மண்ணோடு
ஆண்பெண் பிரிவிலை
..........அனைவரும் சமமிங்
..........ஆயிரம் வாகனங்கள்-சாலை
..........அதன்மேல் குடித்தனங்கள்
தூண்டும் திரைப்பட
..........துறையில் ஓர்நாள்
..........துலங்கிடும் கனவோடு-நுழைந்தவர்
..........துயரம் மனத்தோடு
ஆண்டியும் உண்டிங்
..........ஆயிரம் கோடி
..........அடைந்தவர் வாழ்கின்றார்-வாசலை
..........அடைத்தவர் வாழ்கின்றார்.
வீண்பழி வருமென
..........விலகியே வாழ்வதை
..........விரும்பியே ஏற்கின்றார் -வாழ்வின்
..........வெற்றியை இழக்கின்றார்.
சிற்றூர் வாழ்வு.
சட்டை இல்லை
..........சாலை இல்லை
..........சட்டம் தெரியவில்லை -மனங்கள்
..........சாக்கடை ஆகவில்லை
கட்டிடம் இங்கிலை
..........காசுடன் பணமும்
..........கையில் இருந்ததில்லை-சனங்கள்
..........கடமை மறந்ததில்லை
பட்டும் இல்லை
..........பகட்டும் இல்லை
..........பட்டினிக் கிடந்திடுவார்-பிறர்துயர்
..........பட்டால் கலங்கிடுவார்.
கொட்டும் வானம்
..........கொடுக்கும் கெடுக்கும்
..........குறையுடன் வாழ்கின்றார்- விட்டுக்
..........கொடுத்தவர் வாழ்கின்றார்.
Wednesday, December 08, 2010
தருவீர் தாய்ப்பால் - இசைப்பா
சேயின் அமுதம்
தெய்வம் தந்த அருமருந்தாம் பால்
ஈயின் சிறக்கும்
தாயின் நலமும்
நோயின் றிருக்கும் வழியதுவாம்.
[இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்! ]
கள்ளுண்ணாமை
உற்றவர் தவிக்க
கள்ளை உண்டு மயங்காதே - கள்
உண்ணச் சுவைக்கும்
உயிரைப் பறிக்கும்
கண்ணை மூடி வீழாதே
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
நலம் வாழ - இசைப்பா
நித்தம் எங்கும்
சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல்
வித்தே முளைக்கும்
சத்தாய் உண்போம்
வஞ்சம் கோபம் விலக்கிடுவோம்.
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
Thursday, November 25, 2010
வெண்தாழிசை
2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]
காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.
என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.
மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.
விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.
நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.
Wednesday, November 24, 2010
ஊழல்
இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி
அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை
உடுத்தி இருக்குமாம் ஊழல்.
வாழ்த்து
வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு!
சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன்
சொல்லிற் சுவையென சுந்தரி ஹேமலதா
இல்லறந் தன்னில் இணைந்திட்டார் வாழ்த்திடுவோம்
நல்லறங் காப்பீர் நயந்து.
முனைவர். திரு குணசீலன் அவர்களுக்கு
சொல்வளங் கொண்டத் தோழர் குணசீலன்
நல்லிணை யாக நங்கை அருணா
இல்லறம் இனிக்க இணைந்தார்
பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த
நல்லன யாவும் நாளும் நிறைகவே!
Saturday, September 18, 2010
மண்ணிலே மழையென
என்னெதிர் வந்தனள் நீண்ட
கண்ணிலே காதலைக் கண்டேன்
என்னுயிர்த் தன்னையே தந்தேன்!
கண்வழி உயிரிடம் மாற
அன்பினால் மனங்கலந் திட்ட
பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
மண்ணிலே மழையெனச் சேராய்!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
மண்ணிலே மார்கழி நாளே!
கன்னியர் வரைந்திடுங் கோலம்
தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
மண்ணிலே மார்கழி நாளே!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
கோதையின் திருப்பாவை அமுதம்.
கண்ணனைப் போற்றியே கோதை
அன்புடன் சாற்றிய பாவை
பொன்னிலே பதித்தநற் முத்தே!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
Saturday, September 04, 2010
குறளின் நன்மை.
கல்லினுள் சிலையது போலும்
சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த
வள்ளுவன் குறளினில் நன்மை!
விளம் விளம் தேமா எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
Saturday, August 28, 2010
சுயநலம்
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
தன்னம்பிக்கை
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
தெரிந்துச் செயல்படு
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.
விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.
Wednesday, August 25, 2010
தமிழ் வாழ்க!
செல்வி ஜெயஸ்ரீயை வாழ்த்துவோம், வாருங்கள்.
திரு.சீனிவாசன் அவர்களின் இப் பதிவை தமிழார்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். ஒலி நாடாவையும் கேட்கவும்.http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html
Tuesday, July 27, 2010
பாதை நமதே பயணம் நமதே!
காய்+காய்+காய்+காய்
கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!
உண்மையின்பம்
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
Wednesday, July 14, 2010
நெஞ்சில் தைக்குமே முள்.
கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.
[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.
சிரித்து வாழ வேண்டும்.
1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.
2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!
3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!
நல்லோர் நட்பு.
காசு பணத்தால் விளையும் நன்மை
கையில் உள்ள வரைதான் உண்மை
நேசங் கொண்ட நல்லோர் நட்போ
நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!
Wednesday, June 23, 2010
வெண்செந்துறை
2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.
அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.
ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!
அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.
[திரு.தமிழநம்பி அவர்கள் தமிழ்த் தோட்டத்தில் மரபுப் பா பயிலரங்கத்தில் பா எழுத முதலிலிருந்து சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வந்து பயன் பெறவும்.]
Monday, May 31, 2010
கலிமண்டிலம்
புளிமாங்காய் + தேமா + புளிமா
வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
Wednesday, May 26, 2010
நன்றே நாடுக!
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
Thursday, May 20, 2010
ஈகை
தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.
Wednesday, May 19, 2010
அக்னி' பரீட்சை
அக்கினிப் பரீட்சையில்
வென்றது
சீதை..
தோற்றது
இராமன்
நியாயம்
இன்றோ!
அக்னி' பரிசோதனையில்
வென்றது
அறிவியல்..
தோற்றது
மனிதநேயம்
ஒற்றுமை
செய்தி: அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 2000கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் அக்னி 2 ஏவுகனை பரிசோதனை வெற்றி.
கூட்டம்
மெத்தக் கூட்டம்
உள்ளே
நுழைய முடியவில்லை
எப்படி தேடுவது?
'பாச' கயிற்றோடு
நிலைய அதிகாரியின்
அறையை அடைந்தான்
கிடைத்து விட்டார்கள்
அவர்கள் இருவரும்
செய்தி: புதுதில்லி இரயில் நிலையத்தில் இரயில்கள் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தாய் மகன் இருவர் பலி.
Sunday, May 09, 2010
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
திரு கபீரன்பனின் கட்டுரையும் காண்க.
கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா
சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!
Saturday, May 08, 2010
புத்தகம்
நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.
வாழ்த்து
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.
Wednesday, May 05, 2010
கந்தா கடைந்தேற வழிகாட்டு
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]
காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!
Tuesday, May 04, 2010
இயற்கை வளங்களைக் காப்போம்.
புளிமா புளிமா புளிமா
கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.


