Wednesday, February 19, 2014
ஆறுவது சினம்
Friday, March 29, 2013
அறம் செய விரும்பு
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.
Saturday, February 16, 2013
தமிழ்க் கனவு
அமிழ்தாம் தமிழை அழுத்தம் திருத்தமாய்
அனைவரும் பேசி அளாவிடக் கண்டேன்
பணியில், பெயரில், பயன்படு பொருளில்,
தெருவில், கடையில் செந்தமிழ்ப் பெயரே
எங்கும் நிறைந்ததை இன்புறக் கண்டேன்.
எத்திசை நோக்கினும் எத்துறை யாயினும்
சிறந்தவர் சிலரில் சிறப்பிடம் பெற்றவர்
சிந்தை செழித்த செந்தமிழ் நாட்டார்
என்பதைக் கேட்டேன் இன்னும் கேட்டேன்
எந்தமிழ்ப் பெண்கள் ஏற்றம் கொண்டனர்
அண்டிப் பிழைத்திடல் இன்றி அவரும்
ஆக்கத் தொழிலில் ஆனபற் துறையில்
ஊக்கம் கொண்டே உயர்ந்திடக் கண்டேன்
கட்டுடற் காளைகள் கலைப்பல கற்றனர்
கற்றவர் நாட்டில் களைகளைக் களைந்தனர்
ஒற்றுமை நேர்மை ஒழுக்கம் சுத்தம்
பெற்றனர் தமிழர் பெருமைக் கொண்டனர்
ஏக்கம் தீர்ந்திட எழுந்து நின்றேன்
ஐயோ வீழ்ந்தேன் விழித்தேன் எல்லாம்
பொய்யோ! இஃது கனவோ! இல்லை
மெய்யே எல்லம் மெய்யாம் காலம்
உய்யும் என்றே உணர்வாய் மனமே
குடியை, கோழை பயத்தை, பொய்யை
அடிமை தனத்தை ஒழித்தால்
மடியார் தமிழர் மேன்மை யுறுவரே!
Friday, February 01, 2013
என் இரண்டாம் பக்கம்
அரவணைப்பில்
தந்தையின்
கரம் பிடித்து
கவலையின்றி...
திறந்து கிடந்த
என் முதற்பக்கம்
மூடிய போது...
"நான்'
அறிமுகமானேன்..
நான்
விழித்தேன்
வெளிச்சம்
என்னுள் பரவியது.
நான்
சிரித்தேன்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின
நான்
அழுதேன்
அனுபவ பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பின
நான்
உருவாக்கினேன்
என் சிறிய உலகை
நான்
அழித்தேன்
என் அறியாமையை
நான்
வீழ்ந்தேன்
அதனால்
எழுந்தேன்
நான்
பெற்றேன்
அதனால்
இழந்தேன்
இழப்பில்
இருப்பின் அருமையை
உணர்ந்தேன்
நான்
திறந்தேன்
வேதனை
வெளியில் போனது.
இதோ
என் இரண்டாவது பக்கம்
சற்றே
படபடக்கிறது
மூடிக்கொள்ளப்
பார்க்கிறது...
முடிவுரை
ஆரம்பம்!
முடிவில்லா கதையில்
சுவாரஸ்யமேது?
முதற்பக்கத்தின்
முன்னுரை
மனதில் இனிக்க
மூன்றாம் பக்க
முடிவுரை படிக்கும்
ஆவலில்
நான்
என் இரண்டாம் பக்கத்தில்...
Sunday, October 21, 2012
மின்னல், இடி, மழை
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...
நாள்
ஒற்றை வெண்தோணியில்
மேக வலைவிரித்து
பிடித்த
நட்சத்திர மீன்களை
பகற் கைகள்
பறித்துக் கொண்டன...
நட்சத்திரங்கள்
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...
*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...
Tuesday, October 09, 2012
வெற்றி நிச்சயம்
வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!
மன நிறைவே
வெற்றி...
ஆசை
தோல்வியின் முதற்படி
சிலரது வாழ்க்கை
100மீ பந்தயம்
துரிதமாய் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்
சிலருக்கு
தொடர் ஓட்டம்
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்
தலைமுறைத் தாண்டி
அனுபவம் சுமந்து
அடுத்தவர் ஓடும்
அயராத ஓட்டம்..
இலக்கடைவது
நிச்சயம்...
வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....
தடைகள் இடற
தள்ளாடும் ஓட்டம்..
வெற்றி வேண்டுமா?
மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!
இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...
Monday, March 19, 2012
வாழ்த்து
Saturday, September 24, 2011
சமச்சீர் கல்வி 2
சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
படியும் நெஞ்சில் நிலையாக...
விளையாட் டோடு விஞ்ஞானம்
விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
விளையும் நாளை வல்லரசு.
மா மா காய்
மா மா காய்
என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
Monday, September 19, 2011
சமச்சீர் கல்வி
இங்கே சிலரின் இயக்க சரித்திரம்
தங்க, தரமிலா தற்புகழ்ச்சிப் பொய்யுரை
அங்கமாய் கொண்டு அமைந்ததே நல்லறிவை
பங்கமாய் செய்துநற் பாதை மறைத்திடுங்
கங்குலாம் இச்'சமச்சீர்' கல்வி!
Thursday, September 08, 2011
இசைப் பா
இயற்சீர் + காய்ச்சீர் -தனிச்சொல்
இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர் + இயற்சீர்
இயற்சீர் + காய்ச்சீர்!
ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
ஒன்றாம், எட்டாம் சீர்களில் எதுகை அமைதல் வேண்டும்.
ஆறாம், பதின்மூன்றாம் சீர்களில் இழைபுத்தொடை அமைதல் நலம். பதினான்கு சீர்களில் குறிப்பிடவந்த பொருள் முற்றுப்பெற வில்லையெனில் மீண்டுமொரு தனிச்சொல் எடுத்து அடுத்த பாடலிலும் அப்பொருளைத் தொடரச் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------
பெண்மை அழித்துபின் பதவியைக் காட்டி
பிழைத்திடும் பேடிகளைப் - பணம்
ஒன்றேக் குறியென ஊழல் செய்து
உழைப்பவர் வாடிடவேப் - பொது
பணத்தைச் சுருட்டி பொய்யால் மறைத்து
பிச்சைக் காரரென - மக்களை
மனத்தால் சுருக்கும் பயத்தால் ஒடுக்கும்
வன்முறைக் காரர்களை - தன்
பொறுப்பை மறந்து , படிக்கும் பெண்களை
புழுவாய் துடித்திடச்செய் - மனங்
கறுப்பாய்ப் போன கயவரைக் காலன்
காலால் மிதித்திடச்செய்-அவர்
நெஞ்சைப் பிளந்து நெருப்பால் சுட்டு
நேர்மைப் புகுத்திடச்செய் - கொல்
வஞ்சம் அறுத்து வேடம் கலைத்து
வாய்மை விதைதிடச்செய் - ஓம்
சக்தி சக்தி சக்தி என்றும்
சத்தியம் வாழ்ந்திடச்செய் - ஒன்றாய்
மக்கள் விழித்து வல்லமை யோடு
மாற்றம் கண்டிடச்செய்.
Thursday, January 06, 2011
வலையுலகம்
எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்
மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்
எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]
புத்தகம்
எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]
வெண்டாழிசை 4
பொங்கிவரும் துயரணைத்தும் புதிதாக்கும் புறந்தள்ளி
சிங்கமென வெளிவருவாய் சிரித்து.
-------------------
மண்ணெல்லாம் நனைந்திடனும் வளம்பெற்றே வயலெல்லாம்
பொன்னாக விளைந்திடனும் புதுவாழ்வு மலர்ந்திடனும்
விண்பிளந்து வருமோநல் விருந்து.
கொட்டும்பார் மழையெங்கும் குளங்களெல்லாம் நிறைந்திடவே
பட்டமரம் துளிர்க்கும்பார் பசுமையெங்கும் தெரியும்பார்
கட்டமெல்லாம் தொலையும்பார் கரைந்து.
கட்டமுற்ற விவசாயி கடன்வாங்கிக் கருத்துடனே
நட்டதெல்லாம் பயிராக நமக்கிங்கே உணவாக
விட்டொழியும் வறுமையது விரைந்து.
1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.]
வெண்டாழிசை -3
முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால்
அடைந்திடும் நிலைக்கிலை ஈடு.
பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு
விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய
நசிந்திடா நலம்பெறும் வாழ்வு.
[முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.
மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.
மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.
ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக ‘நாள்’ அல்லது ‘காசு’ என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.
Saturday, December 11, 2010
இசைப்பா 2
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + இயற்சீர்
......இயற்சீர் + காய்ச்சீர் =தனிச்சொல்
......இயற்சீர் + காய்ச்சீர்!
நகர வாழ்வு
நீண்ட தெருக்கள்
..........நெளிந்த பாலம்
..........நிறைய கட்டிடங்கள் -விண்தொட
..........நிற்கும் பட்டிணத்தில்
வேண்டும் எதுவும்
..........விரைந்தே கிடைக்கும்
..........வேகம் வாழ்வோடு - மறந்த
..........விவேகம் மண்ணோடு
ஆண்பெண் பிரிவிலை
..........அனைவரும் சமமிங்
..........ஆயிரம் வாகனங்கள்-சாலை
..........அதன்மேல் குடித்தனங்கள்
தூண்டும் திரைப்பட
..........துறையில் ஓர்நாள்
..........துலங்கிடும் கனவோடு-நுழைந்தவர்
..........துயரம் மனத்தோடு
ஆண்டியும் உண்டிங்
..........ஆயிரம் கோடி
..........அடைந்தவர் வாழ்கின்றார்-வாசலை
..........அடைத்தவர் வாழ்கின்றார்.
வீண்பழி வருமென
..........விலகியே வாழ்வதை
..........விரும்பியே ஏற்கின்றார் -வாழ்வின்
..........வெற்றியை இழக்கின்றார்.
சிற்றூர் வாழ்வு.
சட்டை இல்லை
..........சாலை இல்லை
..........சட்டம் தெரியவில்லை -மனங்கள்
..........சாக்கடை ஆகவில்லை
கட்டிடம் இங்கிலை
..........காசுடன் பணமும்
..........கையில் இருந்ததில்லை-சனங்கள்
..........கடமை மறந்ததில்லை
பட்டும் இல்லை
..........பகட்டும் இல்லை
..........பட்டினிக் கிடந்திடுவார்-பிறர்துயர்
..........பட்டால் கலங்கிடுவார்.
கொட்டும் வானம்
..........கொடுக்கும் கெடுக்கும்
..........குறையுடன் வாழ்கின்றார்- விட்டுக்
..........கொடுத்தவர் வாழ்கின்றார்.
Wednesday, December 08, 2010
தருவீர் தாய்ப்பால் - இசைப்பா
சேயின் அமுதம்
தெய்வம் தந்த அருமருந்தாம் பால்
ஈயின் சிறக்கும்
தாயின் நலமும்
நோயின் றிருக்கும் வழியதுவாம்.
[இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்! ]
கள்ளுண்ணாமை
உற்றவர் தவிக்க
கள்ளை உண்டு மயங்காதே - கள்
உண்ணச் சுவைக்கும்
உயிரைப் பறிக்கும்
கண்ணை மூடி வீழாதே
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
நலம் வாழ - இசைப்பா
நித்தம் எங்கும்
சத்தம் குறைப்போம் நலம்வாழ -நல்
வித்தே முளைக்கும்
சத்தாய் உண்போம்
வஞ்சம் கோபம் விலக்கிடுவோம்.
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய் =ஓரசைச்சொல்,
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர்
இயற்சீர் +இயற்சீர் + காய்!
Thursday, November 25, 2010
வெண்தாழிசை
2. கடைசி அடியின் கடைசிச் சீர் தவிர மற்றவை தேமாச் (நேர்நேர்) சீர்களே.
3. மூன்று அடிகளும் ஓர் எதுகை பெற்று வரவேண்டும்.
4. கடைசிச் சீர், ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். ]
காற்றும் நீரும் காணும் யாவும்
தோற்றம் நீயே போற்றி நின்றேன்
ஏற்றம் தாராய் என்று.
என்றும் நின்றாள் ஏத்து கின்றேன்
குன்றில் கோவில் கொண்டாய்க் கந்தா
மண்ணில் அன்பே மாற்று.
மாறும் நெஞ்சில் மையல் உன்மேல்
சேரும் மாறென் சிந்தை மாற்று
காரென் றெம்மைக் காத்து.
விண்ணோர் வாழ்வை வேண்டின் மண்ணில்
பொன்னை ஈதல் போலே பின்னும்
கண்ணைத் தானம் செய்.
நல்லார் அல்லார் எல்லாம் சொல்லும்
சொல்லால் ஆகும் தீச்சொல் தீயாய்க்
கொல்லச் சேரும் தாழ்வு.
Wednesday, November 24, 2010
ஊழல்
இருக்கையை வேண்டியே ஏய்க்கும் - வருத்தி
அடுத்துக் கெடுக்கும் அரையிலோ வெள்ளை
உடுத்தி இருக்குமாம் ஊழல்.
வாழ்த்து
வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு!
சொல்வளர் செல்வன் வசந்த குமாருடன்
சொல்லிற் சுவையென சுந்தரி ஹேமலதா
இல்லறந் தன்னில் இணைந்திட்டார் வாழ்த்திடுவோம்
நல்லறங் காப்பீர் நயந்து.
முனைவர். திரு குணசீலன் அவர்களுக்கு
சொல்வளங் கொண்டத் தோழர் குணசீலன்
நல்லிணை யாக நங்கை அருணா
இல்லறம் இனிக்க இணைந்தார்
பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த
நல்லன யாவும் நாளும் நிறைகவே!
Saturday, September 18, 2010
மண்ணிலே மழையென
என்னெதிர் வந்தனள் நீண்ட
கண்ணிலே காதலைக் கண்டேன்
என்னுயிர்த் தன்னையே தந்தேன்!
கண்வழி உயிரிடம் மாற
அன்பினால் மனங்கலந் திட்ட
பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
மண்ணிலே மழையெனச் சேராய்!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
மண்ணிலே மார்கழி நாளே!
கன்னியர் வரைந்திடுங் கோலம்
தண்ணெனக் குளிர்ந்திடும் காலை
மண்ணிலே மார்கழி நாளே!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
கோதையின் திருப்பாவை அமுதம்.
கண்ணனைப் போற்றியே கோதை
அன்புடன் சாற்றிய பாவை
பொன்னிலே பதித்தநற் முத்தே!
விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
Saturday, September 04, 2010
குறளின் நன்மை.
கல்லினுள் சிலையது போலும்
சொல்லிலே தீஞ்சுவை சேர்த்த
வள்ளுவன் குறளினில் நன்மை!
விளம் விளம் தேமா எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
Saturday, August 28, 2010
சுயநலம்
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
தன்னம்பிக்கை
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
தெரிந்துச் செயல்படு
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.
விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.
Wednesday, August 25, 2010
தமிழ் வாழ்க!
செல்வி ஜெயஸ்ரீயை வாழ்த்துவோம், வாருங்கள்.
திரு.சீனிவாசன் அவர்களின் இப் பதிவை தமிழார்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். ஒலி நாடாவையும் கேட்கவும்.http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html
Tuesday, July 27, 2010
பாதை நமதே பயணம் நமதே!
காய்+காய்+காய்+காய்
கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!
உண்மையின்பம்
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
Wednesday, July 14, 2010
நெஞ்சில் தைக்குமே முள்.
கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.
[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.
சிரித்து வாழ வேண்டும்.
1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.
2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!
3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!
நல்லோர் நட்பு.
காசு பணத்தால் விளையும் நன்மை
கையில் உள்ள வரைதான் உண்மை
நேசங் கொண்ட நல்லோர் நட்போ
நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!
Wednesday, June 23, 2010
வெண்செந்துறை
2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.
அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.
ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!
அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.
[திரு.தமிழநம்பி அவர்கள் தமிழ்த் தோட்டத்தில் மரபுப் பா பயிலரங்கத்தில் பா எழுத முதலிலிருந்து சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வந்து பயன் பெறவும்.]
Monday, May 31, 2010
கலிமண்டிலம்
புளிமாங்காய் + தேமா + புளிமா
வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
Wednesday, May 26, 2010
நன்றே நாடுக!
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
Thursday, May 20, 2010
ஈகை
தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.
Wednesday, May 19, 2010
அக்னி' பரீட்சை
அக்கினிப் பரீட்சையில்
வென்றது
சீதை..
தோற்றது
இராமன்
நியாயம்
இன்றோ!
அக்னி' பரிசோதனையில்
வென்றது
அறிவியல்..
தோற்றது
மனிதநேயம்
ஒற்றுமை
செய்தி: அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 2000கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் அக்னி 2 ஏவுகனை பரிசோதனை வெற்றி.
கூட்டம்
மெத்தக் கூட்டம்
உள்ளே
நுழைய முடியவில்லை
எப்படி தேடுவது?
'பாச' கயிற்றோடு
நிலைய அதிகாரியின்
அறையை அடைந்தான்
கிடைத்து விட்டார்கள்
அவர்கள் இருவரும்
செய்தி: புதுதில்லி இரயில் நிலையத்தில் இரயில்கள் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தாய் மகன் இருவர் பலி.
Sunday, May 09, 2010
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
திரு கபீரன்பனின் கட்டுரையும் காண்க.
கொட்டிலை அடையாப் பட்டி மாடுகள்
என் முயற்சி
விளம் மா விளம் மா
விளம் விளம் மா
சுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியே திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கிக் களிப்பிலே திளைத்துக்
கழிக்கிறேன் நாளுமுன் நாமம்
தவமென எண்ணித் தொழுதிட நன்றே
தரணியில் மானிட பிறப்பே!
Saturday, May 08, 2010
புத்தகம்
நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.
வாழ்த்து
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா
வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.
Wednesday, May 05, 2010
கந்தா கடைந்தேற வழிகாட்டு
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]
காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!
Tuesday, May 04, 2010
இயற்கை வளங்களைக் காப்போம்.
புளிமா புளிமா புளிமா
கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.
Thursday, April 22, 2010
சென்னை மாம்பல மகிமை
விடமெனக் கக்கிடும் புகையை
ஆதியும் இன்றி அந்தமும் இல்லா
ஆண்டவன் போல்பெருங் கூட்டம்
காதினை அடைக்கும் கத்திடும் ஓசை
கரைந்திடும் கையிரு காசும்
ஈதெலாம் சென்னை மாம்பலந் தன்னில்
இருப்பினும் போய்வரல் இனிதே!
துயராய் போனத் தொலைக்காட்சி
தொலைக்காட்சிப் பெட்டியின்முன் தொலைந்திடுதே வாழ்க்கை
வழியில்லை என்பதனால் வயதானோர் பார்க்க
வஞ்சகமும் வசைச்சொல்லும் வேதனையும் மிஞ்சும்
விழியெல்லாம் பூத்திடவே விடியும்வரைப் பார்த்து
விடிந்தவுடன் தூங்கிவிழ வேலையெலாங் கெட்டு
அழித்திடுமே அன்றாடம் அழுதிடுமோர் பேச்சு
அருந்தமிழின் அழகெல்லாம் அமைதியோடு போச்சு.
Tuesday, April 20, 2010
பிளாஸ்டிக்
காய் காய் காய் மா
காய் காய் காய் மா
தெருவெல்லாம் பறந்தாலோ தீராத தொல்லை
தீயிட்டுக் கொளுத்திடவோ தீதாகும் காற்று
விரும்பாத துர்நாற்றம் வீணாகும் மண்ணும்
விலங்கினங்கள் உண்டாலோ உண்டாகும் மரணம்
குறுப்பான குழந்தைக்கும் கேடாச்சே இதனைக்
கொண்டேத்தன் தலைமூட நின்றததன் மூச்சே
பெருந்தீங்கை மனங்கொண்டே பெரியோர்கள் நாமே
பிழையாமல் பயன்பாட்டை நிறுத்திடுவோம் இன்றே!
சேமிப்பு
காய் காய் காய் மா
சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.
Saturday, April 17, 2010
காப்பு உந்தன் கழலே
காய் + காய் + மா + தேமா
கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
உடனாடும் வடிவேலும் மயிலும் காண
ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!
Thursday, April 15, 2010
இயற்கை வளங்களைக் காப்போம் 1
விளம் விளம் மா
நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
நாமதை நன்குணர்ந் திங்கே
காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
காற்றினை மாசற காத்தே
வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
விளக்கினில் சூரிய ஆற்றல்
கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.
துவளாது உழைப்பீர்.
விளம் விளம் மா
காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
காத்திடல் கூடுமோ? சிறிய
ஊற்றது பெருகி ஆறென ஓடி
உயிர்களுக் குறுதுணை யாகும்
தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
துவண்டிடா துழைப்பவர் தம்மை
போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
புகழுடன் வாழ்திடு வாரே!
Monday, April 12, 2010
கோடைக்காலம்
விளம் விளம் மா
வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
வியர்வையில் நனைந்திடும் மக்கள்
சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
முயன்றிடார் வாழ்வைப் போல
மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
மிரட்டியே விலகிடும் நாட்கள்.
முயன்றிட வெற்றி உண்டாம்
விளம் மா தேமா
அழைத்திட வருமோ வெற்றி
அயர்ந்திடா[து] எரும்பைப் போல
உழைத்திடு உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
முளைதிடுஞ் செடியைப் போல
முயன்றிட வெற்றி உண்டாம்
Friday, April 09, 2010
என் இனிய தமிழ் மொழியே!
ஓ
என் இனிய மொழியே
என் இதயத்தின் ஒலியே
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
உனக்கு
அதிகமான
கவனிப்புத் தேவைபடுகிறது
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
எல்லோரும் உன்னைக் கடந்து
சென்றுவிடுகிறார்கள்
உன் சிறந்த சொற்களை
நீ
சுவைப்பதில்லை
வேற்று மொழி
மருந்திலேயே
வீக்கம் கொள்கிறாய்
அசைப் போடுவதே
உன்
அன்றாட வேலையாகிவிட்டது
முன் பிறந்தும்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
பின்னவள் ஹிந்தியோ
பெரியவளாகிப் போனாள்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தயத்தில் மட்டும்
முதல் பரிசு
உனக்கு
ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில்
கன்னித் தமிழே
கவிதைச் சோலையில்
கதையில்
காணும் நாடகத்தில்
உன்
புன்னகையே
உன் இதழ்களை
அலங்கரிக்கட்டும்
அந்நிய சாயப் பூச்சு
வேண்டாம்
சொந்தப் பூவையேச்
சூடிக்கொள்
வண்ணங்கள் கலக்கலாம்
எண்ணங்கள் கலக்கலாம்
உன் சுவடுகள்
கலைக்கப்படாமல்
காப்பாற்று...
Sunday, April 04, 2010
இறைவழிபாடு 4
மா மா மா
மா மா மா
வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!
கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.
இறைவழிபாடு 3
குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா
கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை கண்ணால்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!
பண்டு பூமியில் நேர்மைப்
பாதையாம் கீதையைத் தந்தாய்
குன்றைக் குடையெனப் பிடித்துக்
கோபியர் குலத்தைநீ காத்தாய்
நன்று நினைப்பவர் நாடும்
நன்னிலை ஏய்திடச் செய்தாய்
என்று என்னுளே கருவாய்
என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?
இறைவழிபாடு 2
விளம் மாங்காய்
பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!
நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!
இறைவழிபாடு -1
மா மா காய்
கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!!
மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்கா புகழைத் தாந்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!
Saturday, April 03, 2010
இயற்கை -2
மா/விள மா/விள மா
மா/விள் மா/விள மா
இயற்சீராலானது, வெண்தளை ஏற்றது.
மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினை தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!
சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!
இயற்கை 1
மா மாங்காய்
மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்...
சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.
தமிழர் நிலை - 2
விளம் மா தேமா
சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்
அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!
Tuesday, March 30, 2010
தமிழ்
விள +விள+ மா
பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்
சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!
தமிழர் நிலை - 1
விளம் மா தேமா
பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.
பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.
Monday, March 15, 2010
நல்வழி அறிவீர்
விளம்+ விளம்+ மா
காலை எழுந்திட வேண்டும்
கனவுகள் கலைந்திட நானும்
பாலைப் பருகிட வேண்டும்
பயத்தொடு பசித்திடு முன்னே
நூலைக் கற்றிட வேண்டும்
நுண்கலை அறிந்திட வேண்டும்
ஆலைப் பொருளென யென்னை
ஆக்கிடும் வழியிது வேண்டாம்
தாக மெடுத்திட வேண்டும்
தண்ணெனும் நீரினைப் பருக
வேக வைத்திடுஞ் சோறும்
வெந்திட நேரமே யாகும்
நோகப் பூவிதழ் பிரித்து
நுகர்ந்திட நினைத்திடல் நன்றோ
போகச் செய்திடு வீரே
பொருந்திடு பாதையி லென்னை.
சிறுவர் பட்டாளம்
மா மா மா
சிட்டுக் குருவிக் கூட்டம்
சிரிக்கும் சின்னத் தோட்டம்
பட்டப் பகலில் நிலவு
படிக்க வந்த தோற்றம்
கொட்டி விட்ட மணிபோல்
குலுங்கச் சிரிக்கும் அழகை
எட்டிப் பார்க்கும் இறைவா
எனக்கும் மீட்டுத் தாதா!
குழந்தைகளுக்கு
மா+மா+மா
கண்ணே மணியே வாவா
கனவின் வடிவே வாவா
அன்பே வாழ்வின் வேராம்
அறிவே மூச்சுக் காற்றாம்
பண்பாய் வாழப் பழகு
படித்தே உயர்வது அழகு
உண்மை நேர்மை உழைப்பு
உன்னில் இருந்தால் சிறப்பு.
பண்ணும் இனிமைத் தமிழில்
படிக்க பேச விரும்பு
மண்ணைப் பெண்ணை மாற்றார்
மனத்தை மதிக்கப் பழகு
எண்ணந் தன்னில் ஈரம்
ஈகை பொறுமை இருந்தால்
வண்ணங் கலந்து வாழ்வும்
வளமாய் நிறைவாய் விளங்கும்.
பெண் குழந்தை வாழ்த்து
மா/விளம் +மா/விளம் +மா
மா/விளம் + மா/வ்ளம் +மா
[வெண்தளை ஏற்றது.]
1.தங்கச் சிலையே, தமிழே,
தாவும் மரையே,அழகே
நங்கையர் நாடு நலனே
நயனில் நிலையினர் உள்ளார்
இங்கவர் எண்ணம் இழிய
இடியென் றெழுந்த எழிலே
பொங்கு புகழொடு பெண்மை
பொலிந்திட வந்தனை வாழி
அழகுத் தமிழ் பழகு
.....விளம்+ விளம்+ மா
மழலை மொழியினைப் போன்றும்
மயக்கிடு மதுவினைப் போன்றும்
குழலில் காற்றது நுழைந்து
குழைந்திட வருமிசை போன்றும்
அழகு மிளிர்ந்திடு மன்றோ
அருந்தமிழ் தந்திடும் பண்கள்
பழக வந்திடும் பாவாய்
பைங்கிளி பேசிடு மன்றோ!
*****************
அருளுடை வாழ்வு
விளம்+ விளம்+ மா
1.வண்டிச் சக்கரம் போலே
வாழ்க்கையும் விரைந்திடும், சற்றே
நின்றுச் சுவைத்திட வேண்டும்
நேரமுங் கிடைத்திட லரிது
வண்டு முகர்வதைப் போன்று
வாழ்ந்திட ஏங்கிடும் நெஞ்சம்
நன்று முன்னவர் நவின்ற
நலந்தரும் பொருளுடை வாழ்வு.
Sunday, March 07, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!
Friday, March 05, 2010
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.
[என் ஆசானாகிய திரு தமிழநம்பியின் கருத்தை பணிவோடும்,பெருமகிழ்ச்சியோடும் இங்கே அளிக்கிறேன்.
"பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.பாராட்டு. நன்றி".]
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட
எழுதிடச் செய்வோமோ
என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
செந்தமிழ் கேட்போமோ
என்று எம்மவர் தமிழினில் படித்திட
எண்ணமேக் கொள்வாரோ
நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
நயத்தொடு கற்போமே!
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
வேண்டுமாம் பெண்னென்றும்
பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
பழகிடு நீயென்று
பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
புயலென திறந்தன்னை
காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
கவிழ்ந்திட நின்றாரே!
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
காட்டிடும் வகையன்ன
மாலைப் போதினில் வெண்மதி வானிலே
மயக்கிடு மேயென்னை
சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
சூடிய உன்மீது
காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
காரிகை தன்னோடு.
Thursday, March 04, 2010
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
[திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சியே என் பாடல்கள்
பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்...........
பாரினர் பாராட்டைப்
பார மேயெனக் கண்டவன் தமிழினில்...........
பண்ணினி தென்றாலும்
பார தம்தரும் பழந்திரு மறைசில...........
பன்மொழிப் பெயர்ப்பாளன்
பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்...........
பாடெனப் புகழ்ந்தானே.]
பாடி பாரதி பாவினில் சொன்னதைப்
பழகிடல் தவறில்லை
கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
குறையவன் வாழ்நாளில்
ஏடி பாரடி இன்றைய நாளினில்
இந்தமிழ் இயலாதோ?
கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
கூடுமே எந்நாளும்...
நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
நாவினுக் கெளிதாமோ
பாடி பாரதி பாவினைத் தந்தது
பழகிடும் தமிழ்தானே
தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
தீதென ஆகாதே
வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
வதைத்தலும் கூடாதே...
கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
குறையுடைச் செயலன்றோ
வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
வேர்ச்சொலும் பலவாகும்
தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
தேறிடுந் தமிழுந்தான்
வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
வகையினை அறிவோமே!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ]
கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே
கண்ணிலும் காதாலும்
விண்டு நீயுமே உணவினை சுவைத்திட
வேண்டுமுன் வாயாலே
மூன்றும் முக்கியம் நம்முடை சுவாசமோ
மூக்கினால் தானன்றோ
நன்று நம்முயிர் வாழுமிவ் உடலினை
நாமுணர் மெய்யென்போம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
வண்ணத்துப்பூச்சி
வண்ணச் சிறகை விரித்து பறந்து
வானம் அளப்பாயோ!
கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில்
காணும் ஒளிநீயோ
மண்ணில் மலர்ந்த மலர்கள் பெற்ற
வண்ணம் உன்னாலோ
பொன்னில் அல்ல மின்னும் அழகை
உன்னில் கண்டேனே!
2.சிங்கம் சிறுத்தை சீறும் புலியும்
இருந்தால் காடாகும்
எங்கும் ஓடி வேட்டை யாடி
இரையைப் பிடித்துண்ணும்
தங்கும் வீட்டில் ஆடும் மாடும்
தடுப்புத் தொழுவத்தில்
பொங்கும் பாலை பருகத் தந்தே
புல்லைத் தானுண்ணும்
.3.காட்டை அழித்து நாட்டை ஆக்கி
காட்டும் தொழிலாளி
வீட்டில் உணவும் இல்லா திருக்கும்
விளக்கம் சரிதானோ
ஆட்டம் பாட்டம் தன்னில் பணத்தை
அழிக்கும் முதலாளி
கூட்டம் தன்னை சட்டம் போட்டே
குறைத்தல் நலம்தானே.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும்
பாரீர் கடலாகும்
கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே
குடிக்கத் தோதாகும்
முட்டி மோதி ஓடும் ஆறும்
மொழியும் ஒருபாடம்
கட்டுக் கடங்கா மனத்தை நீர்போல்
காத்தல் நலனாகும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும்
சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப்
பொன்னாய் மின்னும்!
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில் பொறுமையெனும்
பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட நீராகி
கனியும் காலம்
Tuesday, February 23, 2010
ஈகை
உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்!
முதுமை
விளம்/மாங்காய் + மா + தேமா
களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.
குழந்தைத் தொழிலாளி
விடிந்திடும் முன்னே நானும்
வீட்டினில் வேலை செய்வேன்
குடித்திடும் அப்பா காட்டும்
கூலிக்கு வேலை செல்வேன்
அடித்திட வேண்டாம் கேட்பேன்
அன்றாடம் இரவு நேரம்
படித்திட வேண்டும் என்னைப்
பள்ளிக்கு அனுப்பு அம்மா!
கூடி வாழ்வோம்
கன்னங் கரிய காக்கையினம்
கூடி வாழும் தன்மையிலே
எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
கண்ணில் வீழும் மண்துகளை
கைகள் சென்று துடைப்பதுபோல்
மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
மாற்றும் மனதைக் கொள்வோமே.
பெற்றவர் உவகை
பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!
உழைப்பே உயர்வாம்
உழைப்பினில் உயர்வைக் காண்பாய்
உண்மையே வெல்லும் ஏற்பாய்
இளைஞனே வாழ்வில் வெற்றி
விளைந்திடும் நேர்மை தன்னில்
களைந்திடு சோர்வை என்றும்
காத்திரு பொறுமை யோடு
கைவரக் கூடும் நாளை
வையகம் போற்றும் வாழ்வு.
உடல் நலம் பேணிட...
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.
உண்மை அழகு
பாடும் குயிலின் அழகெல்லாம்
பாரீர் அதனின் குரலினிலே
வாடும் மலரும் ஓர்நாளில்
வாசம் அதனை மாற்றிடுமோ?
ஏடும் அழகாம் வெண்தாளில்
எழுதி கருத்தை விளக்கிடவே
நாடும் மனத்தில் அழகெல்லாம்
நன்மை தன்னில் காண்பீரே!
சேவற் கொடியோன் சிறப்பு.
பாவக் கரையழித்து காக்கும் கருணையே
சேவற் கொடியோன் சிறப்பு.
தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும்
இல்லை எனாதெவர்க்கும் ஈந்திடுவான் நல்லருளை
அல்லல் அகலும் விரைந்து.
எத்திக்கும் அன்பர் இணையடி தான்தொழுதே
சக்தி குமரன் திருப்புகழைச் சொல்லும்வாய்
தித்திக்கும் தேனாய் இனித்து.
வேலும் மயிலும் துணையென நம்பியே
நாளும் அவனடி நாம்தொழ நன்மையெலாம்
சேர்ந்தே சிறக்கும் வாழ்வு.
Thursday, February 04, 2010
நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை!
கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய்
விருந்தாம் விளக்கம் எமக்கு.
நிறுத்தக் குறிகளும் அதன் பயன்படுத்தமும் பற்றி மிக அழகாக திரு தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ளார். படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை.
